சனி, 29 ஏப்ரல், 2023

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்!

 *வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்!*


*இறைவனால் வருவிக்க உற்றவர் என்றால் ?* 


*ஆண் பெண் உடல் உறவு கொண்டு, சிற்றின்ப உணர்ச்சியல் வரும் விந்து விளக்கத்தால் உற்பத்தியாகும் கருமுட்டைகளின் கூட்டுறவின் மூலமாக உயிர் உடம்பு கொடுத்து பிறப்பு எடுத்தவர் வள்ளல்பெருமான் அல்ல !*


*வள்ளல்பெருமான் இராமய்யாவிற்கும் சின்னம்மைக்கும் உண்டான சிற்றின்ப  உணர்ச்சியால் பிறந்தவர் அல்ல* *ஆனாலும் சின்னம்மை வயிற்றின்  கருவறையில் உடம்பு எடுத்தவர் வள்ளலார் என்ற உண்மையை அறிந்து கொள்வது சிறப்பானதாகும்* 


*வள்ளலார் சொல்லும் உண்மையை கவனிக்கவும்!*


கலை


*பெண்பாகத்தில் கலை 4, ஆண்பாகத்தில் கலை 3, ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும்,*

*இது சாதாரண உலகியல் வாழ்க்கையில் உயிர் உடம்பு எடுத்து வாழும் "அபக்குவ பக்குவா" ஆன்மாக்களின் வாழ்க்கை முறையாகும்*


*சிருஷ்டி வகை* *பற்றி வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்கவும்*


*சிருஷ்டிவகை 5:*


 *1.அணுபக்ஷம், 2,பரமாணுபக்ஷம், 3,சம்புபக்ஷம், 4,விபுபக்ஷம், 5,பிரகிருதிபக்ஷம்.என ஐந்து வகையான பிறப்பு ஆன்மாக்களுக்கு கொடுக்கப் படுகிறது.* 


*இவற்றில் சம்புபட்சம்,  விபுபட்சம் தவிர மற்றவைகளுக்குப் பக்குவம் அபக்குவம் உண்டு. அணுபக்ஷத்தில் அபக்குவ சிருஷ்டியாவது, ஓஷதிகளையும், பவுதிகங்களையும் உள்ளுக்குக் கொடுத்து, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு பிரஜோத்பத்தி செய்வது;* 


*பக்குவ சிருஷ்டி புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பதுபோல் அஸ்தத்தால் தடவி ஊன்றிப் பார்த்து, தேக சம்பந்தம் செய்து ஸந்தானத்தை உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டியாவது புருஷன் தேகத்தைத் தடவிப்பார்த்த உடனே கருத்தரித்தல்; பரமாணுபக்ஷ பக்குவ சிருஷ்டியாவது கண்ணால் பார்த்தவுடன் கருத்தரித்தல். சம்புபட்சம், அபக்குவ சிருஷ்டி வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்.* 


*சம்புபக்ஷ* *பக்குவ சிருஷ்டியாவது சங்கற்பித்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் கருத்தரித்துக் கீழே பிண்டம் வெளிப்படல்.* 


*விபுபக்ஷமாவது பார்த்தவுடன் திருண முதலானவற்றை மனுஷ’யனாகச் செய்து, அதில் அனேக விசித்திரங்கள் செய்தல்.*


*பிரகிருதி பக்ஷம்?*

 *மும்மலபேதமும் சிருட்டியும்*


*ஆணவம் மாயை கன்மம் என மலம் மூன்று. இதில் பக்குவம் 3, அபக்குவம் 3 - ஆக 6. இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் 18 ஆம். இந்தக் கன்ம பேதத்தால் அருட்சத்தியின் சமுகத்தில் எழுவகைத் தோற்ற முண்டானது.* 


*மேற்படி கன்ம மலத்தால் சிருட்டி உண்டாகும் விவரம் ஒருவாறு:-* 


*பக்குவ ஆணவம், பக்குவமாயை - இவ் இரண்டினாலும் விஞ்ஞான கலாபேதம்.*

 *அபக்குவ மாயை, அபக்குவ கன்மம், அபக்குவ ஆணவம் கூடிய தேவ நரக பைசாசங்கள்.* 


*பக்குவ மாயை, அபக்குவ கன்மம் கூடியது ஜீவர்கள்.* 


*அபக்குவகன்மம், அபக்குவ கன்ம ஆணவம், அபக்குவ கன்ம மாயை - இவை கூடியது தாவர உயிர்கள்.* 


*இதை விரிக்கில் பெருகும்.*


*ஆணவம், மாயை, கன்மம் - இம்மூன்றில் பக்குவம் 3, அபக்குவம் 3 ஆக 6-ல் ஒவ்வொன்றில் மும்மூன்றாக விரிந்தவை 18.* 


*பக்குவ ஆணவம், பக்குவ மாயை யிவ்விரண்டும் தனித்து நிற்பது விஞ்ஞானகலர்.* 


*சுரநரக பைசாசங்கள் அபக்குவ மாயை அபக்குவ கன்மம் அபக்குவ ஆணவம் கூடித் தடித்தது.* 


*ஜீவர்கள் பக்குவ மாயை அபக்குவ கன்மம்.* 


*தாவரங்கள் அபக்குவ கன்மம், அபக்குவ மாயை, அபக்குவ ஆணவம்.*


*இப்படி ஐந்து வகையான பிறப்புக்கள் ஆன்மாக்களுக்கு உண்டு.*


*இந்த மனித தேகம் எடுத்த உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்கள்,அறியாமையினாலும் அஞ்ஞானத்தாலும் இறைவனை தொடர்பு கொள்ள முடியாமலும்  அருளைப் பெற முடியாமலும் மரணத்தை வெல்ல முடியாமலும் இறந்த இறந்து,பிறந்து பிறந்து இவ்வுலகில் தொடர்ந்து எதாவது ஒரு பிறப்பு எடுத்து வாழ்ந்து கொண்டே உள்ளது*


*உயர்ந்த மனிதப்பிறப்பே இறைவன் அருளைப் பெறுவதற்காகவே இறுதி பிறப்பாக கொடுக்கப் பட்டுள்ளது.*


*அவ்வாறு அறியாமல் வாழும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்திற்கு நல்வழி காட்டவும் அருள் பெறவும், இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும்.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற பக்குவ ஆன்மாதான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*வள்ளலார் பிறப்பு !*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியார் வேடம் பூண்டு, கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டம் மருதூர் என்னும் கிராமத்தில்  வசித்துவந்த கிராம கணக்கர் இராமய்யா அவர்களின் துணைவியார் சின்னம்மையைத் தேடிச். சென்று சந்தித்து பசிப்பதுபோல்  உணவு கேட்டு, உணவு அருந்திவிட்டு, சின்னம்மையை பார்த்து,அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்கின்ற உலக மக்களைத் திருத்துவதற்கு ஒரு ஞானக் குழந்தை உமக்கு பிறக்கும் என்று வாக்கால் சொன்னவுடன் கரு தரித்தவர்தான் இராமலிங்கம் என்னும் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்* 


*இதற்கு சம்பு பட்சம் என்பதாகும்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நேரிடையாக  பார்த்து வாக்கால் சொன்னவுடன்,பூரண அருளால் பிறந்தவர் என்பதால் ஓதாது எல்லாவற்றையும் உணர்ந்தவராக திகழ்ந்தார், மனிதனாக பிறந்து இப்படித்தான் வாழ்ந்து அருளைப்பெற வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்தான் வள்ளலார்.*


*வள்ளலார் பாடல்!*


ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி!


ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்

ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி!


ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான்!


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட் கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே  இன்புற்றதும் நின்னிடத்தே !


உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி தீது நெறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு அருண் மெய்ப் நெறியில் செலுத்தினாய் ! 


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச் செய் உறவு!


*என்றும் தெளிவுப் படுத்துகின்றார்_ நாம் அனைவரும்_ அருள் பூரணம் பெற்ற வள்ளலார் வாழ்ந்து காட்டியவாறு வாழ்ந்தால் மட்டுமே,பூரண திருவருள் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.*


*வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் பிறந்தவர் அல்ல என்பதையும் சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்.*


*வள்ளலார் இறைவனால் அனுப்பிய ஒரு தனிப்பிறவியாகும்*


தொடரும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர்  ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு