செவ்வாய், 2 மார்ச், 2021

துன்மார்க்கம் ! சுத்த சன்மார்க்கம்!

 *துன்மார்க்கம்!*

*சுத்த சன்மார்க்கம்!*


*வள்ளலார் பாடல் !*

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - 


என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!  


மேலே கண்ட பாடலில் துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்.சுத்த சிவ சன்மார்க்கம் தலைப்பட்டேன் என்கிறார் வள்ளலார்.


மார்க்கம் என்றால் வழி என்றும் சாலை என்றும் பொருள்.அதில் ஆபத்தும் துன்பமும் இல்லாத வழியைக் காட்டுவது நல்வழி என்றும் நன்மார்க்கம் என்றும் சொல்லப் படுகின்றது.

ஆபத்துக்களும் துன்பங்களும் நிறைந்த வழியைக்காட்டுவது தீயவழி என்றும் புன்மார்க்கம் என்றும் துன்மார்க்கம் என்றும் சொல்லப்படுகின்து. 


*ஒரு மனிதனுடைய இன்பமும் துன்பமும் அனுபவிப்பது ஆன்மா என்னும் உள் ஒளிதான்.* *ஆன்மாவை மகிழ்ச்சி அடைய செய்விப்பதே ஆன்மீகம் என்பதாகும்*.


*சாதி சமய மதங்கள்!*


துன்மார்க்கம் என்னும் தீயவழியை   தோற்றுவித்தவர்கள் யார்? யார்? என்ற வினாக்களுக்கு விடை கண்டு பிடித்துவிட்டால்

தான் உண்மை தானே விளங்கும். உண்மை விளங்கினால்தான் அன்பும்.தயவும். அறிவும் அருளும் விளங்கும்.அப்போதுதான் ஆன்மா தீயவழியான துன்மார்க்கத்தை விட்டு வெளியே வர வாய்ப்பாக அமையும்.


*உலகில் தோன்றிய சாதிகள் சமயங்கள் மதங்கள் மற்றும் ஆன்மீக சிந்தனை உடைய மார்க்கங்கள் அனைத்துமே* 

*துன்மார்க்கங்கள் என்ற வரிசையில் இயங்கிக் கொண்டுள்ளன*


உயர்ந்த அறிவு பெற்ற மனிதகுலமானது ஆன்ம லாபத்தையும் அருள் லாபத்தையும் அடையும் பொருட்டு.

எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று மனிதகுலம்

புனிதகுலமாகும் பொருட்டும்.

இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்ந்து  மேன்மை அடையும். பொருட்டும் சிறந்த உயர்ந்த சன்மார்க்க சங்க சத்தியத்தின் மூலம்

வழிகாட்டவும்.

உலகில் பல சமயங்கள் மதங்கள்  மார்க்கங்கள் போன்றவற்றை  தோற்றுவித்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.ஏகதேச அருள் பெற்ற மாமனிதர்கள் ஆவார்கள்.


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதகுலத்தை காப்பாற்றுவதற்காக எல்லாம் வல்ல பரம்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பல ஆயிரம் அருளாளர்களை இவ்வுலகிற்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்.அவர்கள் ஆன்மீக சிந்தனையுள்ள அறிவுள்ள அருளாளர்கள் ஆவார்கள். அவர்களால் தோற்றுவித்துள்ளது தான் சாதி சமய மதங்கள் 

என்னும் துன் மார்க்கங்களாகும்.

அவற்றிலும்   ஆயிரக்கணக்கான வேறு வேறு உட்பிரிவினைகளும் தோன்றியுள்ளன.


*மனித குலத்தை அழித்து கொண்டுள்ள சமயங்கள் மதங்கள்* !


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொது நெறி எனும் வான்

*புத்தமுது* அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


உலகம் முழுவதும் பலவிதமான சாதி.சமயம். மதங்களின் கொள்கைகள்.

ஆன்மநேயம் இல்லாத பொய்யான துன்மார்க்கம் சார்ந்த பவநெறிகளான சாதி.சமயம். மதம் போன்ற துன்மார்க்கங்கள் உலகம் முழுவதும் பரவியதால். 

*உண்மைச் செந்நெறியான* *சுத்த சன்மார்க்க நெறியை* *மக்கள் அறிந்து கொள்ளமுடியாமல் உயர்ந்த அறிவுள்ள மனிதகுலம் இறந்து இறந்து.பிறந்து பிறந்து கொண்டே உள்ளார்கள்* 


எனவே பொய்யான துன்மார்க்கங்களை அழித்து ஒழித்து. மெய்ப்பொருளை விளக்கும் வெளிப்படுத்தும் புதியதோர் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவித்து.இறைவனால் படைத்த உலக உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. *உண்மை. ஒழுக்கம். அருள் நிறைந்த பக்குவமுள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பி வைக்கிறார்.அந்த பக்குவமுள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிஎலாம்

பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளை விளை யாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதமுற்று அங்கும்இங்கும்


*போருற்று இறந்து வீண் போயினார்* இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

புனிதமுறு *சுத்தசன் மார்க்கநெறி காட்டி* *மெய்ப்

பொருளினை உணர்த்தி* எல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி 

*நீஎன்பிள்ளை* ஆதலாலே

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணானந்த பர நாதாந்த வரைஓங்கு

நீதிநடராஜ பதியே.!  


மேலே கண்ட பாடலில் தான் வந்த ரகசியத்தையும் இறைவனால் வருவிக்க உற்றவன்  என்ற உண்மையையும்.

தனக்கு ஆண்டவர் இட்ட 

அருள்தன்மை வாய்ந்த பணிகளையும்.

*புனிதம் உறு சுத்த சன்மார்க்கத்தையும்*  *தோற்றுவித்து*

*மெய்ப் பொருளான* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை* நன்கு உணர்த்தி உலகில் உள்ள எல்லோரும் சுகநிலை அறிந்திட    தெரிந்திட புரிந்திடவும் பணியிட்டுள்ளார்.


முன்னுள்ள பேய்பிடித்த பைத்தியக்காரத் தனமான சாதி சமயம் மதங்கள் பல பேதங்களை உருவாக்கி. *மனித நேயம் இல்லாமல்.*

*ஆன்மநேயம் என்றால் என்னவென்று தெரியாமல்* அன்பு தயவு.இரக்கம். ஒற்றுமை இல்லாமல்  போரிட்டு  சண்டையிட்டு. ஆண்டவரால் படைத்த உயிர்களையும்.

உடம்புகளையும் அழித்து கொண்டுள்ளார்கள்.


*அந்த துன்மார்க்கங்களையும் அவற்றை தோற்றுவித்த கொள்கைகளையும்.தோற்றுவித்தவர்களையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்து.ஒழித்து மறைத்து விடவும்* *சுத்த சன்மார்க்கத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுமே எனக்கு இட்ட முக்கிய பணியாகும் என்கிறார் வள்ளலார்.* 


*சுத்த சன்மார்க்கம் !* 


எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இட்ட கட்டளையை சிரமேற்க் கொண்டு உலகம் முழுவதும் புனிதம் சார்ந்த *சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை* நிறுவிக் கொண்டு வருகிறார்.


*சாதி சமய மதங்கள் அற்ற சுத்த சன்மார்க்கம்!*

*1872.ஆம் ஆண்டு முதல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் தலைமை இடமாக கொண்டு தோற்றுவித்துள்ளார்* சங்கத்தின் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். சங்கத்தை இயக்குபவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !*


செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்

சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே - *சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்கமே.! 


மேலும் பாடல்.


உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என

*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


மேலே கண்ட பாடலின் வாயிலாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவர் மற்றும் நடத்துனர் பற்றிய விபரங்களையும் மேலே கண்ட பாடல் வாயிலாக தெளிவாக  விளக்கியுள்ளார். காரணம் இம்மார்க்கம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.ஆதலால் *என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்* என்றும் சொல்லுகிறார்.


*எனவே ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்தாலே போதும்* 


அன்று முதல் இன்றுவரையிலும் மேன்மேலும் உலகம் முழுவதும் சாதி சமயம் மதம் அற்ற சுத்த சன்மார்க்க சங்கத்தின் கொள்கைகளையும். மனிதகுலம் பின்பற்ற வேண்டிய.இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களையும்.

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* என்ற உண்மையையும்.

மக்கள் மனதில் பதிய வைத்தும்.எல்லா நாடுகளிலும் சுத்த சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்தும் செயல்படுத்திக் கொண்டும் வருகிறார் வள்ளலார்.


எனவே முன் உள்ள மார்க்கங்கள் யாவும் கொஞ்சம் காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இது கடவுளின் சம்மதம் மற்றும் ஆணையாகும்.


*இனி உலகம் முழுவதும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரே மார்க்கம் மட்டுமே விளங்கும்*


*வள்ளலார் பாடல்!*


திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


*இனி உலகம் முழுவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட உயர்ந்த அன்பு.தயவு. கருணை நிறைந்த திருநெறி ஒன்றான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற பெயரிட்டு வளர்ந்து வருகின்றது.*


உயர்ந்த அறிவு பெற்ற மனித குலம் சாதி.சமயம்.மதங்களை விட்டு விலகி  புனிதகுலமாவதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து *அகம் என்னும் சிரநடு சிற்சபையில் தோன்றும் அருளைப்பெற்று அனுபவித்து அழியுடம்பை அழியாமல் ஆக்கும் அருள் உடம்பாக மாற்றி மரணத்தை வென்று.முத்தேக சித்தி என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.* 


*வள்ளலார் பாடல்!*


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

*எல்லாம் செய் வல்லசித்தி இறைமையும் பெற் றிடலாம்*


அன்புடையீர் வம்மின்இங்கே *சமரசசன் மார்க்கம்*

*அடைந்திடுமின்* அகவடிவிங் கனகவடி வாகிப்


பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியே *சிற் *சபையின்*

*மாமருந்தே* என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 


தீமையை போதிக்கும் சாதி.சமயம்.மதம் சார்ந்துள்ள துன்மார்க்கத்தை விட்டு விலகி. நன்மை பயக்கும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்த்தில் சேர்ந்து அருளைப்பெற்று ஆன்ம லாபம்.ஆன்ம மகிழ்ச்சி.ஆன்ம இன்பம் அடைவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு