வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அருள் அறிவே சிறந்த அறிவு !

அருள் அறிவு பெறுவதே சிறந்த அறிவு !

இன்று மனிதன் மருளான பற்பல மார்க்கங்களை  பின்பற்றி வழிமுறை தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளான்..அவர்களை திருத்த வேண்டும்.நல்வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக  அவர்களை கண்டித்து வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே !

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!

என்றும்

இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே. !

என்னும் பாடல் வரிகளிலே எளிய தமிழில் தெளிவாக விளக்கி உள்ளார்.

சுத்த சன்மார்க்கம் என்ற கொள்கைகளிலே பின்பற்றி வரும் அன்பர்கள்.சாதி.சமய.
மதக் கொள்கைகள் போல் சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தி வருகிறார்கள்.
இவர்களும் திருந்தாமல் மற்றவர்களையும் திருந்த வழிக்காட்டாமல் குழப்பிக் கொண்டே  உள்ளார்கள். 

உதாரணமாக வள்ளலார் தன் படத்தை வைத்து வழிபாடு செய்யாதீர்கள்.எல்லாம் செய்ய வல்ல நமது தலைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை யே வணங்குங்கள் வழிபடுங்கள் என்று சன்மார்க்கிகளுக்கு என்றே தனிப்பாடல் பதிவு செய்துள்ளார்.

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

இவ்வளவு ஆணையிட்டுச் சொல்லியும்.
வள்ளலாரின் பொய்யான கற்பனைப் படங்களை வண்ண வண்ணமாக தீட்டி வரைந்து போஸ்ட் போடுகிறார்கள்.
இவர்களை என்னவென்று சொல்வது.இவர்கள் எல்லாம் சுத்த  சன்மார்க்கிகளா.சமய மத சன்மார்க்கிகளா என்பது தெரியவில்லை....

ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இறைவனைத் தொடர்பு கொள்ள முக்கியத் தடையானது ஆதலால் அவைகள் வேண்டாம் என்று அழுத்தமாக விண்ணப்பம் வைத்துள்ளார்...

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,

 வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

என்று தினமும் சன்மார்க்க சங்கத்தில்  விண்ணப்பத்தை படித்து கொண்டே..ஆச்சார சங்கற்ப விகற்பங்களை  செய்து கொண்டே இருக்கிறோம்.இதுதான் சன்மார்க்க சங்க நிர்வாகிகள்.அன்பர்கள் செய்யும் உண்மை வழிபாடா என்பதை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும்...

புதியதாக சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து.சுத்த சன்மார்க்க உண்மை கொள்கைகளை.
அறிந்து கொள்ள வருபவர்களுக்கு எந்த வழியில் போதிப்பீர்கள்...என்பது தெரியவில்லை.

உற்சவம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியவர் வள்ளலார். வள்ளல்ஞான உற்சவம் என்றும்.தியான வகுப்புகள் என்றும்.பட்டிமன்றம் என்றும் சமயமதவாதிகள் செய்யும் காரியங்களையே சன்மார்க்கிகளும் செய்தால் சன்மார்க்கம்.சமய.மத. மூட சன்மார்க்க மாய் மாறிவிடும்...எச்சரிக்கையாய் செயல்பட வேண்டும்...

இதுபோல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைக்கு மாறாக தங்களின் மனநிலைக்குத் தகுந்தாற்போல்  நிறைய நடந்து கொண்டு உள்ளன.

எதோ ஒரு வழியில் மக்களிடம் கொண்டு செல்லலாம் என நினைத்தால் .அவை தவறான வழியாக மாறிவிடும்.

மக்களிடம் சுத்த சன்மார்க்கத்தை கொண்டு செல்ல இரண்டே வழிகள்தான் வள்ளலார் சொல்லி உள்ளார்..

ஜீவகாருண்யம் !
சத்விசாரம் !

இந்த இரண்டு வழிகளில் மட்டுமே செல்ல வேண்டும்.இதிலே எல்லாம் அடங்கிவிடுகின்றன. மக்கள் உண்மை அருள் அறிவை அறிந்து அருளைப் பெற வேண்டும்.மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான அருட் பாடல்களையும்.அருட்பெருஞ்ஜோதி அகவல்...மற்றும்
உரைநடைப் பகுதிகளையும் பதிப்பித்து நேர்வழியைக் காட்டி உள்ளார்.

அதற்கு அடையாளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
சத்திய தருமச்சாலை.
சத்திய ஞானசபை.
சித்திப்பெற்ற சித்திவளாகம் என்னும் நான்கு அமைப்புகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் அமைத்துள்ளார்..

வள்ளலார்...நான் சென்ற பாதை இவ்வளவு தான் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்..

இதைவிடுத்து நாம் நம் விருப்பம் போல் செய்வதால் எந்த பயனும் எக்காலத்தும் கண்டிப்பாக கிட்டாது..

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழுக்கு இறைத்து  கழித்தீர். என்ற நிலைமைதான் உண்டாகும்...

இப்படி நான் எழுதுவதால் சொல்வதால் யாரும் வருத்தப்பட வேண்டாம். தங்களை வள்ளலார் காட்டிய நேர் வழியில் செல்வதற்கும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆன்மநேய உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு