சனி, 17 ஆகஸ்ட், 2019

வள்ளலார் புரிந்த அற்புதங்கள் பாகம் 2

வள்ளலார் புரிந்த அற்புதங்கள் பாகம் 2

அன்பர் ஆசையை நிறைவேற்றல்

கேசவ ரெட்டியார் என்பவர் பெருமான்மீது கொண்ட அன்பு காரணமாக எங்கு எதைப் பேசினாலும், யாரிடம் பேசினாலும் பெருமானைப் பற்றி அவர் ஆற்றிய உரைகளைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அவர் மனதில் பெருமானுக்கு அமுது செய்விக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது எப்போது கிட்டும் என்று எதிர்பார்த்து ஏங்கி இருந்தார்.

இதை அறிந்த அன்பெனும் பிடியில் அகப்படும் பெருமானார் ஒரு நாள் இரவு திடீர் என்று அவர் வீட்டு முன்பாகத் தோன்றினார். பெருமானைக் கண்ட மாத்திரத்தில் திகைத்து நின்ற ரெட்டியார் பின் சுதாரித்து அவரை வணங்கி வரவேற்றார். பெருமானோ, “நும் விருப்பப்படி உண்ண வந்தோம்” என்றார். சிறப்பாக அறுசுவை உணவை கொடுக்க நினைத்த ரெட்டியார் திடீர் வருகையால், அன்று சமைத்த பருப்பு துவையலும், ரசமும் அளிக்க நேர்ந்ததை எண்ணி வருந்தினார். பெருமானார், “அன்பரே, ஏன் வருந்துகிறீர்? எனக்கு பிடித்தமான உணவைத்தான் படைத்துள்ளீர், உமது உண்மையான அன்பே முக்கியம்” என்று கூறி சந்தோஷத்தில் அவரைத் திளைக்கச் செய்தார்.



அன்பரின் அதீத நம்பிக்கை

செட்டியார் ஒருவர் பன்னிரண்டு வருட காலமாக குன்ம நோயால் அவதிப் பட்டு வந்தார். பெருமானின் கீர்த்தியை கேட்டு அவரை வணங்கி பிணியைப் போக்க வேண்டினார்.

பெருமானோ கடவுளை நினைந்து துதிக்கும்படி கூறினார். அதற்குச் செட்டியார், “சுவாமி, தாங்கள்தான் கடவுள்” என்று நம்பிக்கையோடு கூற பெருமானார் விபூதி கொடுத்து நோயைப் போக்கினார்.



ஜீவகாருண்ணியத்தால் வந்த பலன்

அமாவாசை என்பவர் செத்த மாடுகளை தின்று வந்தார். அய்யா அவரிடம் மாடுகளை தின்னாமல் புதைக்கும்படி கூற அவர் அவ்வாறே நடந்து வந்தார். சிறிது காலம் கழித்து எவ்வகையிலும் மீன், மாமிசம் சாப்பிடக் கூடாது எனக் கூற, அதற்கு அமாவாசை எப்படியும் சைவ உணவுக்கும், மற்ற செலவுகளுக்கும் கணக்கிட்டு, ஒரு நாளைக்கு அரை ரூபாயாவது வேண்டும் எனக் கூற, அய்யா அவருக்கு அரை ரூபாய் ஒன்றை மஞ்சள் துணியில் கட்டி கொடுத்து, “இதை வைத்துக்கொண்டால், தினம் எட்டணா வருமானம் கிடைக்கும்” என்று கூறினார்.

அய்யாவின் சொல்படி அவருக்கு தினமும் எப்படியாவது எட்டணா கிடைத்து விடும். மாமிசத்தை விட்டதோடு தினசரி எட்டணாவும் கிடைத்தது, ஜீவகாருண்ணியத்தை கடைபிடித்ததால் வந்த பலன் இது.



திருவருள் பெருமை

ஒருவர் சாது என்ற போர்வையில் கையில் தடியுடன் கோட்டு சட்டை அணிந்தவராய் திரிந்தார். அவரது வார்த்தையை எதிர்த்தோ மறுத்தோ பேச முடியாமல் அனைவரும் அவரின் முரட்டுத்தனத்துக்கு அஞ்சி, அவரை முரட்டு சாது என்று கூறினர். ஒரு சமயம் முரட்டு சாது தங்கியிருந்த ஊருக்குச் சென்ற பெருமானார், அன்பர் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது ஆடு ஒன்று ஒரு கால் இல்லாத குட்டியை ஈன்றது. அக்குட்டியால் பால் அருந்த இயலாது எழுவதும் விழுவதுமாக இருந்தது. இதைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த பெருமானிடம் அங்கு வந்த முரட்டு சாது “கண்ணீர் வடித்தால் ஆட்டுக் குட்டிக்கு கால் வந்துவிடுமா?” என்று கேட்க பெருமானாரோ “இறைவன் திருவருள் கிட்டுமாயின் ஏற்படலாம்” என்றார். “அதையும் பார்ப்போம்” என்று அமர்ந்திருந்தார் முரட்டு சாது. பெருமான் மனமுருகி இறைவன்மீது பத்து பாடல்கள் இயற்றிப் பாட ஆரம்பித்தார். பாடி முடிவதற்குள் ஆட்டுக்குட்டிக்குக் கால் வந்து எழுந்து சென்று பால் அருந்தியது. ஆணவம், அகங்காரம், அலட்சியம் அனைத்தையும், கோட்டு சட்டைகளுடன் கழற்றி எறிந்துவிட்டு முரட்டு சாது பெருமானின் காலில் விழுந்து வணங்கி உண்மை சாதுவாய் மாறினார்.



சித்தாதி சித்தர்

அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.

கூடலூரிள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டில் சுவாமிகள் தியானத்தில் இருந்தார். அன்பர்கள் புறத்தில் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் இவர்களைத் தாண்டி உள்ளே சென்றார். வந்தவர் யார் என்று அறிந்து கொள்ள அன்பர்கள் உள்ளே சென்றனர். அங்கே ஒருவரும் இல்லை. ஒரு லட்டுதான் இருந்தது. சுவாமிகளிடம் விசாரிக்க அவர், வந்தவர் ஒரு சித்தர் என்றும், அவர் இப்பொழுது காசியில் இருப்பார் என்றார். அவர் கொடுத்த லட்டுதான் இது என்றார். அதைக் கேட்ட அன்பர்கள் சித்தரின் ஆற்றலையும் அத்தகையைவர் தம் குருவை காண வந்ததால் தம் குருவின் பெருமையையும் எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.



வள்ளலாரைத் தீண்டி இறந்த பாம்பு

வள்ளலார் சில காலம் அப்பாசாமி செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு சமயம் மாலை வேளையில் அன்பர்களோடு செட்டியாரின் வாழைத் தோட்டத்தில் உலாவச் சென்றார். வள்ளலார் சிறிது நேரம் வாழைத் தோட்டத்தின் அழகைக் கண்டு ரசித்து அதைச் சுற்றி வந்து ஒரு வாழை மரத்தடியில் வந்து நின்றார். அப்போது ஒரு நல்ல பாம்பு வள்ளலாரின் தலையில் தீண்டியது. இதைக் கண்டு பதைத்த செட்டியாரிடம் வள்ளலார், “பதைக்க வேண்டாம். மருந்தாகும் திருநீற்றைக் கொண்டு இதை குணமாக்கலாம் என்று கூறி தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் திருநீற்றைப் பூசினார். பெருமானைத் தீண்டிய பாம்பு கீழே இறந்து விழுந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் அதிசயித்து நின்றனர்.



இறைவன் தாமாக வருவாரா? நாமாகச் செல்ல வேண்டுமா?

கூடலூர் அப்பாசாமிச் செட்டியார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பெருமானும், மற்ற அன்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது இரு வித்வான்கள் பெருமானிடம் வந்து “எங்களுக்குள் ஒரு விவாதம்; அதைத் தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றனர். பெருமான் அவர்களிடம், “அப்படியா? சொல்லுங்கள். எதைப் பற்றிய விவாதம்?” என்று கேட்டார். வித்வான்களில் ஒருவர் “சுவாமி! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறேன் நான். இவரோ கைவல்லியத்தில் உள்ள ‘இந்தச் சீவனால் வரும்’ என்னும் பாட்டை எடுத்துக்கூறி, எனது சொல்லை மறுக்கிறார். இதுதான் எங்களுக்குள் உள்ள விவாதம்” என்றார். பெருமான் இதைப் புரிய வைக்க கீழ்க்கண்ட கதையை விளக்கினார்.

ஒரு நிர்வாண சந்நியாசி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அது பெண்கள் வந்து செல்லும் பகுதி என்று எண்ணிய ஒருவன் சந்நியாசியைக் கல்லால் அடித்தான். மற்றொருவன் எந்த ஆசையும் இல்லாத அந்த சந்நியாசிக்கு ஒரு பழம் கொடுத்தான். இதைக் கண்ணுற்ற மற்றொருவன் இம்மூவரையும் ஒரு நீதிபதியிடம் அழைத்துச் சென்று நடந்த அனைத்தையும் கூறினான். நீதிபதி சந்நியாசியிடம் “யார் உங்களை கல்லால் அடித்தது” என்று வினவ, சந்நியாசி “யார் எனக்கு பழம் கொடுத்தாரோ, அவர் என்னைக் கல்லால் அடித்தார்” என்று பதில் கூறினார். நீதிபதி, “யார் உங்களுக்குப் பழம் கொடுத்தது” என்று கேட்க சந்நியாசி, “யார் என்னைக் கல்லால் அடித்தாரோ அவரே எனக்குப் பழம் கொடுத்தார்” என்றார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று வாழும் இவருக்கு பழம் கொடுத்தவருக்கும், கல்லால் அடித்தவருக்கும் பேதம் இல்லை என்று அனைவரும் புரிந்து கொண்டனர்.

இந்த கதையைக் கூறிய பெருமான் “யார் பேதமற்று எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கிறார்களோ அவர்களுக்கு ‘எல்லாம் இறைவன் செயல்’ என்பது உண்மை. மற்றவர்கள் இறைவனை அடைய கடும் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி வித்வான்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.



இச்சையற்றவர் இயற்றிய சித்துக்கள்

தேவநாயகத்தின் தந்தை ஒரு யோகி. அவர் இறக்கும் தறுவாயில் தேவநாயகத்திடம் “முக்காடு அணிந்து கொண்டு கையில் பிரம்புடன் இதுதான் உன் தந்தையின் சமாதியா? என்று யார் விசாரிக்கிறார்களோ அவரை உனது குருவாக ஏற்றுக்கொள்” என்று கூறிவிட்டு இறந்தார். அவ்வாறே பெருமானார் வந்து விசாரிக்க தேவநாயகம் பெருமானின் சீடரானார்.

இரசவாதத்தில் உள்ள ஆசையால் பொருளை இழந்த தேவநாயகத்திடம் பெருமானார் இரும்புத் தகடொன்றைப் பொன்னாக்கிக் காட்டினார்கள். பிறகு அதைத் தூர எறிந்துவிட்டு, இச்சை அற்றவனுக்கே இது கூடும் எனவே இதை விட்டுவிடு எனக் கூற தேவநாயகம் திருந்தினார்.

ஒருசமயம் சுவாமிகள் செஞ்சிமலையைச் சுற்றிப் பார்க்கப் தேவநாயகத்தையும் அழைத்துச் சென்றார். சுவாமிகள் மலைமீது பலவிடத்தும் சுற்றித் திரிந்தார். உச்சி வேளையில் சுவாமிகளோடு அலைந்ததில் தேவநாயகம் மிகவும் களைத்துப் போனார். கொடிய பசித்துன்பம் வேறு அவரை வாட்டி எடுத்தது. சுவாமிகள் அவரின் வாட்டத்தையும் பசியையும் புரிந்து கொண்டார். தேவநாயகத்தை ஒரு மரநிழலில் அமரச் செய்துவிட்டு, சற்று தூரம் சென்று விட்டுத் திரும்பி வரும்பொழுது ஒருகையில் பெரிய லட்டும், மறுகையில் தண்ணீரும் கொண்டு வந்து அவற்றை தேவநாயகத்திடம் கொடுத்து லட்டை சாப்பிட வைத்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தார். அவர்தம் களைப்பும் பசியும் நீங்கிற்று, செம்பை வாங்கிக் கொண்டு, போய் கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சிறிது தூரம் சென்று திரும்பினார். அப்போது சுவாமிகள் கையில் செம்பு இல்லை!



கள்வர்க்கும் காருண்ணியம்

கூடலூரிருந்து குள்ளஞ்சாவடி வந்த அய்யா இரவாகிவிட்டதால் அங்குள்ள சத்திரத்துத் திண்ணையில் தங்கினார். அவரைக் கண்ட தலைமைக் காவலர், குளிர் அதிகம் என்பதால் அவர் அய்யாவிற்கு போர்வை ஒன்று கொடுத்தார். அவரும் கூடவே தங்கிவிட்டார். நள்ளிரவில் கள்வன் ஒருவன் அய்யாவின் போர்வையை பிடித்து இழுக்க அய்யா அவன் எடுக்க ஏதுவாக திரும்பிப் படுத்தார். காவலர் கள்வனைப் பிடித்துவிட்டார். அய்யா, காவலரிடம் வறுமை காரணமாக களவாடும் ஏழை அவன் என்று கூறி அப்போர்வையை அவனுக்குக் கொடுத்து களவுத் தொழிலை விட்டுவிடுமாறு அறிவுரை கூறினார். அவனை விடுவித்தும் விட்டார்.

ஒருசமயம் மஞ்சக்குப்பம் சிரஸ்தேதார் இராமச்சந்திர முதலியார் அய்யாவை தம்மூரில் வந்து சில நாட்கள் தங்குமாறு விண்ணப்பிக்க, அதன்படி அனைவரும் வண்டியில் சென்றனர். இரவு குள்ளஞ்சாவடி வரும்பொழுது இரு கள்வர்கள் வண்டியை தாக்க வண்டிக்காரனும் சேவகனும் ஓடி ஒளிந்தனர். முதலியார் கையில் இருந்த வைர மோதிரத்தை கழற்றும்படி கள்வர்கள் அதட்ட, அய்யா, “அவசரமோ?” என்று வினவ கள்வர்கள் அடிப்பதற்காக தடியை உயர்த்தினார்கள். உயர்த்திய கைகள் செயல் அற்று போக, கண் பார்வையும் நீங்கியது. தவறை உணர்ந்த கள்வர்கள் தம் செயலுக்காக மன்னிப்பு கேட்டு, பெருமானை சுற்றி வந்து நலம் பெற்றனர். களவுத் தொழிலை விட்டு விடுவதாக பெருமானிடம் உறுதி கூறி சென்றனர்.



பேராசையால் வந்த வினை

சென்னையில் பெருமான் இருந்த காலத்தில் ஏழை கிறிஸ்தவர் ஒருவர் பெருமானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்க இதை அறிந்த பெருமானார் தினமும் இரண்டு ரூபாயை வெள்ளியாக்கும் திறனை அவருக்கு கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு வறுமையைப் போக்கி வாழ்ந்து வந்தார்.

ஆனால், ஆசைமேலிட வெள்ளிக்குப் பதிலாக பொன்செய்யும் ஆற்றல் தெரிந்தால் ஆடம்பரமாய் வாழலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அவர் எண்ணத்தைப் பெருமானிடம் கூற பெருமான் அவர் கையில் உள்ள வெள்ளி பூண் கட்டிய தடியை வாங்கி பூணை மட்டும் தட்டி எடுத்து கையில் சில நிமிடங்கள் வைத்து தங்கமாக்கி அவர் மனதை குளிரச் செய்தார். அவ்வாறு ஆக்கிய பூணை தருமச் சாலைக் கிணற்றில் எறிந்து “போய் வாரும், எல்லாம் சித்தியாகும்” என்று அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பி சென்னை திரும்பிய கிறிஸ்தவர் முன்போலவே வெள்ளியைச் செய்யத் தொடங்கிய போது வெள்ளியாகவில்லை. உள்ளதும்போய் அன்றாடப் பிழைப்புக்கு வழி இல்லாது தனது பேராசையால் வந்த வினையை நினைத்து மனம் வருந்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு