சனி, 17 ஆகஸ்ட், 2019

வள்ளலார் புரிந்த அற்புதங்கள் பாகம் 3

ஞானசித்தரின் சித்துகள்

வள்ளலார் புரிந்த அற்புதங்கள் பாகம் 3

ஞானசித்தரின் சித்துகள்

பெருமானார் சில சமயம் தருமச்சாலைக்கு வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் இருப்பார். அப்பொழுது சுவாமிகளின் தலைக்கும், சூரியனுக்கும் நடுவே தீப் பிழம்பு ஒன்று தோன்றும்.

தேவநாதம் பிள்ளையின் மகனாகிய ஐய்யாசாமியின் தொடையில் கட்டி வந்து துன்பப்பட்டார். அதை கேள்வியுற்ற பெருமானார் விபூதியோடு ஒரு மருத்துவ பாடலும் கொடுத்தனுப்பினார். விபூதியை பூசி அப்பாடலில் சொல்லியபடி நடந்துவர ஐய்யாசாமி குணமானார்.

இதற்கு முன்பும் ஒருமுறை ஐய்யாசாமி உடல் நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தேவநாதம் பிள்ளை மிகவும் வருத்தப்பட்டு பெருமானை வேண்டினார். வடலூரில் தருமச்சாலையில் உபதேசம் செய்து கொண்டிருந்த பெருமான் அதே சமயம் கூடலூரில் தோன்றி தேவநாதம் பிள்ளை வீட்டுக்குச் சென்று ஐய்யாசாமிக்கு விபூதியிட்டு சற்று நேரம் இருந்துவிட்டு திரும்பினார். நோயிலிருந்து அன்றிரவே விடுதலை ஆனார் ஐய்யாசாமி.

மறுநாள் தன் மகனுடன் வடலூர் சென்றார் தேவநாதம் பிள்ளை. அவரை கண்ட பெருமானார் தான் நேற்றிரவு கூடலூர் வந்ததை யாருக்கும் கூற வேண்டாம் என கூறினார். அவர் சாலையிலிருந்த அன்பர்களிடம் விசாரிக்க பெருமானார் ஒரே நேரத்தில் இரு இடங்களிலும் இருந்தது தெரிய வந்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு சமயம் சுவாமி திருவதிகைக்கு வழிபடச் சென்றார். அப்பொழுது அவரை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தின் நெரிசல் மிக அதிகமாக, நிலைமையை உணர்ந்த பெருமானார் மக்களுக்கிரங்கி ஒரே நேரத்தில் பல இடங்களிலும் காட்சியளித்தார்.

ஒரு நாள் அடிகள் தனியாக உலாவச் செல்ல நினைத்து வெளியே புறப்பட்டார். உடன் வந்தவர்களிடம் தன்னை தொடர வேண்டாம் இங்கேயே இருங்கள் என்று கூறி நடந்தார். அவர்கள் சொல்படி கேளாமல் தொடர அவர் அவர்களிடமிருந்து தொலைவில் காணப்பட்டார். அவர்கள் தொடர்ந்து ஓடி வர - பெருமான் இன்னும் அதிகமான தொலைவில் காணப்பட்டார்.

கருங்குழியில் கல்லாங்குளம் அருகில் ஒரு நாள் அடிகள் உலாவும்பொழுது ஒருவர் உபதேசம் பெறுவதற்காக அருகில் வந்தார். உடனே அடிகள் தொலைவில் காணப்பட்டார். அவர் நெருங்க நெருங்க அடிகள் இன்னும் தொலைவில் காணப்பட்டார். அந்த நபர் அப்படியே அயர்ந்து நின்று விட்டார்.

தருமச்சாலையில் ஒரு நாள் உணவு குறைவாக இருந்தது. நிறைய அன்பர்கள் உணவு உண்ண வந்து விட்டார்கள். தருமச்சாலையை கவனிக்கும் நபர் அய்யாவிடம் நிலைமையை கூறினார். அய்யா உடனே எழுந்து தன் கையால் உணவு பரிமாறினார். அத்தனை அன்பர்கள் உண்ட பிறகும் உணவு மிச்சம் வந்தது.

ஒரு நாள் தருமச்சாலையில் அரிசி தீர்ந்து விட்டது. சண்முகம் பிள்ளை அவர்கள் அய்யாவிடம் தெரிவிக்க அய்யா சற்று நேரம் தியானித்து பின் நாளை வேண்டியவை வரும் என்றார். மறுநாள் ஒருவர் மூன்று வண்டிகளில் அரிசியும் ஒரு வண்டியில் பிற உணவு வகைகளும் கொண்டு வந்தார். முந்தைய நாள் இரவில் கனவில் தனக்கு உத்தரவு வந்ததாக அவர் கூறினார்.



பன்மொழிப் புலவருக்கு உண்மை உணர்த்தியது

பினாகபாணி முதலியார் ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர். வள்ளலார் பற்றியும், தருமச்சாலையை பற்றியும் அதில் இருப்பவர்கள் பற்றியும் அவருக்கு தரக்குறைவான எண்ணம். தன் பாண்டித்தியத்தை பறை சாற்றவும் அய்யாவின் மொழியறிவை சோதிக்கவும் சந்தேகம் கேட்பது போல் வடலூர் வந்தார். அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அய்யா முதலியாரின் ஆறு மொழி பாண்டித்தியம் பற்றி உரைத்தார். முதலியாரின் ஐந்து வயது மகனின் கையை வள்ளலார் பிடித்தார். அவர் அருளால் அவனுக்கு ஆறு மொழிகளில் பாண்டித்தியம் உண்டாயிற்று. அச்சிறுவனிடம் அவரின் சந்தேகம் பற்றிக் கேட்டால் அவன் அவருக்கு விடை அளிப்பான் என்று கூற பினாகபாணி, வள்ளலாரின் கைப்பட்டதிற்கே இவ்வளவு சிறப்பா என்று உண்மை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.



சித்திரையில் கருணைமழை

சித்திரையில் தருமச்சாலையில் தங்கியிருந்தவர்கள் வெய்யிலின் கொடுமை தாங்க முடியாமல் வேதனைப் பட்டனர். மழையின்றி அனல்காற்று வீச நா வறண்டு தாகத்தால் தவித்தனர். இதை அறிந்த பெருமானார் ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி தனது கால்களில் விடச் சொன்னார். சிறிது நேரத்தில் வானம் இருண்ட மேகத்தோடு காணப்பட்டு, போதும் என்ற அளவிற்கு நல்ல மழை பெய்தது.

இதைக் கேள்வியுற்ற புதுப்பேட்டை என்ற ஊரில் உள்ளோர் பெருமானை தமது ஊருக்கு வர வேண்டினர். பெருமானும் அங்கு செல்ல அவ்வூர் மக்கள் தங்கள் நிலைமையையும் அங்குள்ள கிணறுகளில் நீர் சுரப்பற்று வறண்டு கிடப்பதையும் காட்டினர். கிடைக்கும் தண்ணீரும் தாகம் தீர்க்க உதவாததையும் கூறினர். பெருமான் அவர்களிடம் ஆறு குடம் தண்ணீர் எடுத்து வரச் சொல்லி தமது சிரசின்மீது விடச் சொன்னார். வருணனும் பெருமானின் விண்ணப்பத்தை முன்னமே உணர்ந்து மழை பொழிவதற்கான மேகங்களை திரட்டிக் கொண்டு வந்து நின்றான். பெருமான் கண்களைத் திறந்து வானத்தைப் பார்க்க பெருமழை பொழிந்து கிணறுகளில் நீர் நிரம்பியது. அது சுவை நிறைந்ததாகவும், தாகத்தை தீர்க்க வல்லதாகவும் இன்றைக்கும் இருந்து வருகிறது.

அவ்வூரிலேயே இரத்தினாம்பாள் என்பவரின் வீட்டில் தீ பிடிக்க மக்கள் அதை அணைக்க முயல, வள்ளல் பெருமானோ தன் வேட்டியால் வீச நெருப்பு அடங்கியது.

அவ்வூரிலேயே அன்பர் ஒருவர் பெருமான்மீது உள்ள அன்பினால் தனது கொல்லையில் உள்ள மூங்கில் அனைத்தையும் தருமச் சாலைக்காக வெட்டிவிட அவை மீண்டும் தழைத்து ஓங்கி உயர்ந்து நின்றது.

ஒரு சமயம் பெருமான் வெளியில் சென்றபோது பெரும் மழை பொழிந்தது. அப்பொழுது வெளியில் சென்றவர்கள், கூடி இருந்தவர்கள், ஒதுங்கி நிற்க இயலாதவர்கள் அனைவருமே முற்றும் நனைந்து காணப்பட்டனர். ஆனால் பெருமானின்மீதோ ஒரு துளி தண்ணீர் கூட இல்லை.



பெருமானின் பெருங்கருணை

சித்தரை மாத வெப்பத்தால் சாலையில் உள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் வேதனைப்பட்டவர்களைக் கண்டு மனம் இரங்கிய பெருமானார் ஒவ்வொருவரையும் பார்த்து, “அப்பா காய்ச்சலை எனக்கு கொடுத்து விடுகிறாயா” என்று கேட்டுக் கொண்டே ஒர் அறையினுள் சென்றார். ஐந்து நிமிடத்திற்குப் பின்னர் அனல் மயமாக அறையிலிருந்து வெளியே வந்தார். சாலையினுள் காய்ச்சலால் வருந்திய அனைவரும் காய்ச்சல் நீங்கி இன்புற்றனர்.



வடலூரில் நேரலையாக சிதம்பர தரிசனம்

சிதம்பர தரிசனம் காண வெளியூர் அன்பர்களோடு, மற்றவர்களும் கலந்து கொண்டு வடலூர் வருவது வழக்கம். அவ்வாறு ஒரு சமயம் வந்தபோது வள்ளற்பெருமான் உற்சவத்திற்கு விரைவில் புறப்படாமையால், வந்த அன்பர்களில் சிலர் உற்சவ காலம் நெருங்க நெருங்க இருப்பு கொள்ளாது சிதம்பரத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டனர். ஆனால் எப்பொழுதும் பெருமானோடு சென்று தரிசனம் காணும் அன்பர்கள் சிலர், கடைசி நாள்வரை காத்திருந்து சிதம்பர தரிசனம் தவறியதே என்று எண்ணி ஏங்கி வருந்தினர். வள்ளற்பெருமான் அவர்களை சாலைக்கு வரும்படி அழைத்தார். அவர்களது ஆசையை நிறைவேற்றும்பொருட்டு சத்திய தருமச்சாலையின் மத்தியில் திரை ஒன்று போடச் செய்து, சிதம்பர தரிசனத்தை நேரலையாகக் காணச் செய்தார். அன்பர்கள் அனைவரும் சிதம்பர தரிசனத்தை கூட்டத்தில் சிக்கி அல்லல்படாது அமைதியாக அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். பெருமானின் அருளால் கண்ட தரிசனத்தால் பெருமானை வணங்கி மனநிறைவோடு விடை பெற்றுச் சென்றனர்.



ஆந்திர பிராமணர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பிராமணர்கள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டி வடலூர் வந்தனர். பெருமானைக் கண்டு தரிசித்து “சாத்திரத்தில் சொன்னபடியெல்லாம் செய்தும் சித்தி அடைய முடியவில்லையே” என்று கூறினர்.

அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய பெருமானார் தம் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருக்க சில நிமிடங்களில் அது உருகிக் கீழே விழுந்தது. இதைக் கண்ட பிராமணர்கள் “மனம் கட்டலாம்; ரசம் கட்ட முடியாது” என்று கூற, பெருமானாரோ “மனம் கட்ட முடியாது; ரசம் கட்டலாம்” என்று கட்டியுங்காட்டினார். சந்தேக நிவர்த்தி செய்த பெருமானாரின் ஆற்றலையும் வல்லமையையும் அறிந்து அவரை வணங்கி ஆசிரியராகக் கொண்டு விடை பெற்றுச் சென்றனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு