வெள்ளி, 5 ஜூலை, 2019

சாகும் கல்வி ! சாகாக் கல்வி !

சாகும் கல்வி ! சாகாக்கல்வி !

கல்வி என்பது ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே கல்வியாகும்.

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கிடைத்த மக்களுக்கு.கற்கவேண்டிய கல்வி எது என்றே தெரியாமல் மூடமான கல்வியை மாணவர்களுக்கும்.மக்களுக்கும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் கல்வித்துறையே நாசமாக்கிக் கொண்டு வருகின்றது.

இவை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஆன்மீக கல்வியாக இருந்த்து.குருகுல கல்வியாக மாறியது.பின்பு குலக்கல்வியாக மாறியது.இப்போது எல்லோருக்கும் கல்வி என்ற முறையில் அரசாங்கம் கல்வித்துறையை தன் பிடியில் வைத்துக் கொண்டது.

கல்விக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து வருகின்றது.மாணவ மாணவிகளுக்கான எல்லா வசதி வாய்ப்புகளையும் இலவசமாக செய்துவருகின்றது.

வள்ளலார் கொண்டுவந்த புதிய பாடதிட்டம் !

கல்வி என்பது அன்பு,அறிவு,ஒழுக்கம்,போன்ற நற்குணங்களைப் பெற்றுத் தருவதாகும்.

ஆனால் இன்று கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டும் பயன் தரக்கூடியதாக உள்ளது.அதுவும் நேர்வழியில் பணம் சம்பாதிக்க அந்த கல்வி பயன்படாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது .

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கல்வி ,அவர்களையும் அவரை சார்ந்தவர்களையும் அழித்து விடுகிறது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் .

கல்வி என்பது உயர்ந்த அறிவை வளர்த்து கொள்ள வேண்டியதாக இருக்க வேண்டும்.எத்துணையும் பேதம் இல்லாமல் எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒத்து உரிமை உடையவர்களாய் உவந்து நினைந்து. .தங்களைப் போல மற்றவர்களையும். மற்ற உயிர்களையும் வாழ வைக்கும் பண்பு உடையதாக கல்வி இருக்க வேண்டும்

.அன்பு,அறிவு ஒழுக்கம் நேர்மை,வாய்மை,இரக்கம்.தயவு.கருணை போன்ற பொது நோக்கம் உள்ள கல்வியே சிறந்த கல்வியாகும்.எந்த உயிர்களையும் அழிக்காமல்.தன்உயிர்போல் உணர்ந்து வாழ வைக்கும் கல்வியே சிறந்த கல்வியாகும்..

பிற உயிர்களை கொலை செய்யாமலும் அதன் புலால் உண்ணாமலும் இருப்பதே ஒழுக்கத்தின் முதல் கல்வியாகும்.

*அதுவே ஒழுக்கத்தின் முதற்படியாகும்* அவற்றை கடைபிடிப்பதே ஆரம்ப கால சிறந்த கல்வியாகும்.

கல்வி இரண்டு வகைப்படும் !.

*ஒன்று சாகும் கல்வி,மற்றொன்று சாகாக்கல்வி* !

எந்தவகையிலும் பொருள் சேர்ப்பது சாகும் கலவி ,

பொருளை அருளாக மாற்றுவதே சாகாக்கல்வி !

உயர்ந்த அறிவு பெற்ற மனிதன்..உயர்ந்த கல்வியாகிய அருள் பெறும்  கல்வியைக் கற்றுக் கொண்டு இறைவன் அளிக்கும் அருளைப் பெறுவது சாகாக்கலவி யாகும்....சாகாக் கல்வியைக் கற்று வாழ்வதே மனித பிறப்பின்
லட்சியமாகும் .இதை அறிந்தவன் எவனோ அவனே மனிதன்...அவனே இறைவன் ...மனிதனும் தெய்வமாகலாம் ,,என்பது சாகாக் கலவியாகும் ...

சாகாக் கல்வியை கற்றுத் தருவது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .அவர்தான் உலக மக்களுக்கு சாகாக் கல்வியை கற்கும் வழியைக் காட்டி உள்ளார் .அனைவரும் படித்து அதன் வழியில் நின்று மேல் நிலைக்கு செல்லலாம்...

வள்ளலார் மக்களுக்கு போதிக்கும் பாடலைப் பாருங்கள் !

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழிலாகும் இந்நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்

மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாம்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே

தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !

*சுத்த சன்மார்க்கத்தின் மரபு நான்கு*

1.சாகாத கல்வி
2.ஒரே கடவுள் என்ற உண்மை.
3.ஐந்து மலங்களை வெல்வது.
4.ஐந்தொழில் வல்லபத்தைப் பெறுவது .

மேலே கண்ட சுத்த சன்மார்க்க மரபை ஆழமாக அறிவிலே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மனிதன் மரணம் அடையாமல் ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ,அருளைப் பெறுவதே சாகாத கல்வியாகும்.அதற்கு வழி என்ன வென்றால் .கடவுள் ஒருவரே என்று அறிந்து கொள்ளும் அறிவே உயர்ந்த மனித அறிவாகும்.

அந்த உயர்ந்த அறிவினால் ,உடம்பு வந்த வழியும். உயிர் வந்த வழியும். ஆன்மா இந்த உலகத்திற்கு வந்த வழியும் தெரிந்து கொண்டு. ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் ,ஆணவம் ,மாயை,மாமாயை ,பெருமாயை ,கன்மம் ,போன்ற ஐந்து மலங்களையும் ,நீக்கும் வழியைத் தெரிந்து கொள்ளும் வல்லபமே சிறந்த வல்லபமாகும்.

உடம்பானது மண்ணுக்கோ,நீருக்கோ ,நெருப்புக்கோ,காற்றுக்கோ ,கதிர் வீச்சுக்கோ,எமனுக்கோ,கொலைக் கருவிக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயலுக்கோ ,வேறு ஏதாவது அழிக்கும் சக்திக்கோ ,மற்றும் எதனாலும் அழிக்க முடியாத உடம்பையும்.உயிரையும் காப்பாற்ற வேண்டுமானால் வேகாத கால் என்னும் அருள் காற்றை சுவாசித்து மரணத்தை வெல்ல .வேண்டும்.

காற்றில் நான்கு வகைகள் உள்ளன..
பூதக்காற்று.அசுத்தக்காற்று.விஷக்காற்று.அமுதக்காற்று என உள்ளன.

நாம் சுவாசிக்கும் காற்று பூதக்காற்று.விஷக்காற்று.அசுத்தக்காற்றை மட்டுமே சுவாசிக்கிறோம்.
அமுதக் காற்றை சுவாசிப்பதில்லை.
வேகாத காலாகிய அம்முதக் காற்றை சுவாசித்து அருள் உடம்பாக மாற்றும் தொழிலே சிறந்த தொழிலாகும்.அதாவது மெய்த் தொழிலாகும் .

இறைவனிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட ஊன உடம்பை ஒளி உடம்பாக அதாவது அருள் உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வதே என்றும் அழியாத  பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்..அதுவே ஐந்தொழில் செய்யும் வல்லபமாகும் .அதுவே என்றும் அழியாத இன்பமாகும்.அந்த இன்பத்தைப் பெற்றுக் கொள்வதே மனிதப் பிறவியின் பிறவிப்பயனாகும்.

என்றும் அழியாத அருளைப் பெற்று.உயிர். உடம்பை மாற்றம் செய்து..உயிர் உடம்பு அற்ற.சுத்த பிரணவ ஞான  தேகத்துடன் (ஒளி தேகம்) வாழ்வதே,சாகாக் கல்வியாகும் மற்ற கல்வி எல்லாம் சாகும் கல்வியாகும்.

சாகாக் கல்வியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .சொல்லியதோடு அல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டியவர் நமது அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .

அந்த அருளாளர் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில்

 சேர்ந்து ,அவர் வாழ்ந்து காட்டிய உண்மை ஒழுக்க நெறிகளை பின்பற்றி  வாழ்ந்து அருளைப் பெறுவோம் !மரணத்தை வெல்வோம.

இது ஒருவகை இன்னும்  நிறைய நேர்வழிகளைக் காட்டி உள்ளார்.

நாம் ஜீவர்களிடத்தில் தயவும்.கருணையும்.இரக்கமும் கொண்டு வள்ளலார் காட்டிய இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்...உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இடைவிடாத தொடர்பும் அன்பும் (காதல்) கொண்டு வாழ்ந்தால் மட்டுமே சாகாக்கல்வியைக் கற்றுக் கொள்ள முடியும்.இறைவனே சாகாக்கல்வியை கற்றுத்தருவார்.

வள்ளலார் பாடல் !

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உள்ளேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றி என் பற்று எனப் பற்றினேனே !

நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடததில் இருந்துதான் சிற்றம்பலக் கல்வியான சாகாகாக் கல்வியைக் கற்றேன் .உலகில் பிறருடைய பற்றை நான் பற்றியதே இல்லை என்று தெளிவாக விளக்கிச் சொல்லி உள்ளார்..

கடவுளிடம் இருந்து என்ன கற்றார் ?

நம் உடம்பும் உயிரும் தாய் தந்தை இருவரின் அன்பு.ஆசை.காம்ம்.மோகம்.மயக்கம்.
வெகுளி கொண்டு ஆன்மாவின் இன்ப உணர்வால் உணர்ச்சியால் உடல் உறவு கொள்கின்றபோது விந்துஎன்னும் சுக்கிலம் வருகிறது. அப்போது இருவரும் உலகத்தையே மறந்து சிலநிமிடங்கள் இனம் புரியாத இன்பத்தில் மிதப்பார்கள்.அந்த இன்பத்தின் சுகத்தை வெளியில் சொல்ல வார்த்தை இல்லை.

இது உலக அனுபவ சிற்றின்பம் என்பதாகும் இந்த இன்பத்தின் வாயிலாக வரும் சுக்கில சுரோணிதக்கலப்பால் எண்ணில் அடங்காத உயிர் அணுக்கள் தோன்றி பெண்ணின் கருவறை க்குள் சென்று விடுகின்றது.அந்த இருட்டு நிறைந்த கருவறையில் ஆன்மக் கலவையால் உயிரும் உடம்பும் தோற்றம் பெறுகிறது.

அந்த விந்துவால் உண்டான உடம்பிறகு பஞ்சபூத ஆணு உடம்பு என்று பெயர்.இந்த உடம்பானது கருவாகி உருவாகி குழந்தையாகி வளர்ந்து விரிந்து பருவ மாற்றங்கள் தோன்றி முதிர்ச்சி அடைந்து மேலும் நீடித்து இயங்க வாய்ப்பு இல்லாமல் அணுக்களின் வீரியம் குறைந்துவிடுவதால் ஆன்மாவின் ஒளி ஆற்றலை ஏற்றுக் கொள்ள முடியாமல் .இயங்க முடியாமல் இருப்பதால்  உயிர் தன் ஆற்றலை நிறுத்திக் கொள்கிறது.

ஆன்மாவும் உயிரும் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதால் உடம்பு சாய்ந்து விடுகின்றது.இதுவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கின்றது. இந்த அழிவை நிறுத்த தெரியாமல்.காப்பாற்றத் தெரியாமல்  மனிதர்கள் வாழ்வதால் அதற்கு *சாகும்கல்வி* என்று பெயர். இறந்து இறந்து. பிறந்து பிறந்து கொண்டே இருப்பதால்  இதை மாற்றும் வழியைக் கண்டு பிடித்தார் வள்ளலார்.

அவர் கண்டுபிடித்த மார்க்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்தார்.இந்த மார்க்கத்தில் மட்டுமே சாகாத கல்விக்கு வழிக்காட்டுகிறது. எனவேதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்.வாருங்கள் வாருங்கள் என உலக மக்களை ஆன்மநேய உரிமையோடு அழைக்கின்றார்..

நாம் பழைய சாதி.சமயம்.மதம்.சாத்திர ங்களில் உள்ள குப்பையை கிளறிக்கொண்டு  குப்பையிலே உழன்று இறுதியில் மாண்டு போகின்றோம்.

பாடல் !

சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்றெனவே

ஆதியில் என்உளத்திருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதி உணர்ந்தோர் புகழும் சமர சன்மார்க்கம் உள்ளேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம்

சோதி நடத்தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே !
என்னும் பாடலின் வாயிலாக மெய்ப்பொருளைக் கண்டு உண்மைநிலை உணர்ந்து தெளிவடைந்தேன் என்று தெரியப்படுத்துகின்றார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

மனித வாழ்க்கை இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. ஒன்று மரணம் அடைந்து மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டே வாழ்வதாகும்.இதற்கு பொருள் உடம்பு வாழ்க்கை என்பதாகும்

மற்றொன்று மரணம் அடையாமல் மீண்டும் பிறப்பு எடுக்காமல்.எக்காலத்திலும் அழியாமல் அருள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பதாகும். இதற்கு ஆன்ம இன்ப லாபம் என்றும்.ஆன்ம இன்ப வாழ்க்கை என்றும் அருள் உடம்பு வாழ்க்கை என்றும் சொல்லப்படுகின்றது.இதுவே மனிதவாழ்க்கையின் இறுதி வாழ்க்கையாகும்.

பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்றுவதற்கு பெயர்தான் சாகாக்கல்வி என்பதாகும்.

மாயையின் பஞ்சபூத அணு சேர்க்கையால் பின்னி பிணைக்கப்பட்ட. செயற்கை உட்ம்பை.அருளினால் இயற்கை உடம்பாக மாற்ற வேண்டும்.

மனித அறிவால் இயற்கை எது ? செயற்கை எது? என்பதை முதலில் தெரிந்து  கொள்ள வேண்டும்.

என்றும் மாறாது.மாற்றம் இல்லாமல்  இருப்பதற்கு பெயர் இயற்கை என்பதாகும்.

தோற்றம் மாற்றம் உள்ளது அனைத்தும் செயற்கை என்பதாகும்.

உயர்ந்த மனித அறிவு பெற்ற நாம் செயற்கையைத் தொடர்பு கொள்ளாமல் .இயற்கையைத் தொடர்பு கொள்ள வேண்டும். இயற்கை உண்மைக் கடவுளால் மட்டுமே அருள் வழங்க முடியும்.அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.

நம் உடம்பை அருள் உடம்பாக மாற்றுவதற்கு நம்மை அனுப்பிய இயற்கை உண்மைக்கடவுளின் தொடர்பு  வேண்டும்.வள்ளலாருக்கு முன்னாடி செயற்கைக் கடவுள்களை தொடர்பு கொள்ள வைத்து விட்டார்கள். அக்கடவுள்களை அறியாமையால்  நம்பி அருள் பெற முடியாமல் மாண்டு கொண்டே உள்ளோம்.

 அருள் வழங்கும் தகுதியுடைய இயற்கை உண்மை என்னும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே ! என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

நம் பூத உடம்பை மாற்றம் செய்ய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது தீராத அன்பு.காதல்.காம்ம். மோகம்.மயக்கம் வெகுளி கொண்டு நேசிக்க வேண்டும்.ஆன்ம ஒளிக்கும்.இறை ஒளிக்கும் தொடர்பு உண்டாக உண்டாக.உணர்ச்சி பொங்கும்.அந்த உணர்ச்சி யின் வாயிலாக அதிக சுத்த உஷ்ணம் உண்டாகும்.

அந்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் விலகி அருள் என்னும் திரவம் சுரக்கும்.அதுவே தன்னை மறந்து இன்பம் உறும் தந்திரமாகும். அந்த அருள் திரவம் உடம்பு முழுதும் ஊற்று எடுத்து ஓடுவதுபோல் சென்று நிரப்ப வேண்டும்.அப்போது தான் வேதியல் மாற்றம் செய்யப்படுகின்றது.ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றப் படுகின்றது.

ஒளி உடம்பாக  மாற்றம் அடைகின்றபோது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கலந்து கொள்வார்.இதுவே சாகாக்கல்வி கற்கும் வழியாகும்..

அருள் நிறம்பிய உடம்பிற்கு கருணை நிறைந்த உடம்பு என்று பெயர்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உடையவர்..நாமும் கருணை உள்ளவர்களாக மாறினால் மட்டுமே.கருணையும் கருணையும் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும்.

ஆண் பெண் உறவு கொள்வதுபோல் ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதி யும் உறவு கொள்ள வேண்டும்.

ஆண் பெண் எல்லாவற்றையும் மறந்து தனி அறையில் உறவு கொள்வதுபோல் .உலக பற்றிலிருந்து விலகி ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதியும் உறவு கொள்வதே சாகாக்கல்வி யாகும்.

ஆன்மாவிற்கு அளவில் அடங்காத கருணை உணர்ச்சி உண்டாக்கும் வழியைக்காட்டும்  பாடல்கள்..

வள்ளலார் பாடல் !


  • திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே 
    திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ 
    உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் 
    ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ 
    கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே 
    கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ 
    செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 2. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே 
    மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ 
    கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே 
    கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ 
    தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே 
    தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே 
    திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 3. உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே 
    உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே 
    இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி 
    என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக் 
    கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது 
    கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே 
    திரைகடந்த குருமணியே சிவஞான மணியே 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 4. உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ 
    உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ 
    அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன் 
    அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே 
    என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர் 
    என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன் 
    தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 5. இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே 
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் 
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் 
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் 
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த 
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் 
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 6. பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ 
    பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ 
    மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன் 
    விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே 
    பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது 
    பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே 
    செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 7. கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக் 
    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே 
    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் 
    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் 
    ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே 
    இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே 
    தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 8. வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 9. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் 
    கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக 
    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம் 
    வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே 
    உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே 
    உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே 
    சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே. 
  • 10. திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே 
    திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக் 
    கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து 
    கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும் 
    உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா 
    தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே 
    திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும் 
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

மேலே கண்ட பாடல் முழுவதும் ஆன்மாவின் கதவைத் திறக்கும் வழியைக் காட்டும் பாடல்களாகும் பொருமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாகிய நாம்.எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய அருள் வள்ளலைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு