வியாழன், 27 ஜூன், 2019

ஆன்மாக்களின் வாழ்க்கை !

*ஆன்மாக்களின் வாழ்க்கை !*

ஆன்மா என்பது அருள் பெறாத சிற்றணு வடிவமானது.ஆனாலும் அவை கோடி சூரிய பிரகாச ஒளித் தன்மை உடையது.

அந்த ஆன்மா இருக்கும் இடம்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமான அருட்பெருவெளி என்ற இடத்தின் ஒரு பகுதியில் ஆன்மாக்கள் சூழ்ந்து இருக்கும்.அந்த இடத்திற்கு "ஆன்ம ஆகாயம்* என்று பெயர்..

அந்த இடத்தில் தான் ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.

அருட்பெரு வெளியில்  உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
இயற்கை உண்மை .
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்
போன்ற இயற்கையான மூன்று விதமான அளவில் அடங்காத அருள் ஆற்றல் தன்மைகளைக் கொண்டவர்

பலகோடி ஆண்டங்களையும்.உலகங்களையும் படைத்தவரும் அவரே ..

பலகோடி ஆண்டங்களையும் உலகங்களையும் படைத்ததின் நோக்கம் காரணம்.ஆன்மாக்கள் வாழ்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் தேவையான வசதி வாய்ப்புக்கள் வேண்டும் என்பதற்காகவே பஞ்ச பூத உலகம் படைக்கப்பட்டதாகும். ! அதற்கு காரண காரிய  பஞ்சபூத உலகம் என்று பெயர்.

ஆன்மாக்கள் அருளை ஏன் ? பெற வேண்டும் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் நாம் யார் என்ற உண்மை விளங்கும்....

*ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் !*

ஆன்மாக்கள் எங்கு இருந்தன என்பதை மேலே கண்டு உள்ளோம்.

அந்த ஆன்மாக்களுக்கு தன் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெரு வெளியில் அருகில் இருந்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்புகளே கிடையாது.

அந்த ஆன்மாக்கள் தன் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்றால் தான் அவரிடம் தொடர்பு கொண்டு பேரின்ப வாழ்க்கை என்னும் பெரிய வாழ்க்கை வாழ்வதற்கு வசதி கிடைக்கும்.

ஆன்மாக்களின் பூலோக வாழ்க்கை !

ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகில் வந்து உயிர் பெற்று உடம்பு எடுத்து   இன்பம் துன்பம் அனுபவித்து ..அதாவது

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில்  அனுபவித்து பின்பு பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்றால்தான் ஆன்மாக்கள் இறைவனைக் கண்டு அதன் மயமாக மாற முடியும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே அருள் வழங்கும் தகுதி உடையவர்.

இந்த உண்மைத் தெரியாமல் சமய மதவாதிகள் தவறான தத்துவக் கடவுள்களான உருவங்களை படைத்து பக்தி என்னும்  குறுக்கு வழியைக் காட்டி ஆன்மாக்களை  அலைய விட்டு விட்டார்கள்.

ஆன்மாக்களுக்கு சொர்க்கம்.நரகம்.கைலாயம்.
வைகுண்டம்.முத்தி பரலோகம்.போன்ற பதப்பிராப்திகள் எதுவும் வேண்டியதில்லை. இவைகள் எல்லாம் மனித உடம்பிலே உள்ளன.

ஆன்மாக்கள் முக்கியமாக அவசியம் பெற வேண்டியது .எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் முழுமையான அருளைப் பெறுதலே அதன் முக்கிய கட்டளையாகும் .அதுவே இயற்கையின் சட்டமாகும்.

*ஆன்மாக்களுக்கு உண்மையான நேர் வழிக் காட்டவே ஒரு பக்குவமுள்ள ஆன்மா இங்கு வருகின்றது.*

அந்த  பக்குவம் உள்ள ஆன்மாவைத் தேர்வு செய்து உலகிற்கு அனுப்பி வைத்தவர்தான்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். ..

இந்த உலகிற்கு வந்த அந்த பக்குவ ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் பஞ்ச பூத உடம்பை எடுத்து .வாழ்ந்து.அருளைப் பெற்று.பஞ்ச பூத உடம்பை.அருள் நிறைம்பிய  ஒளி உடம்பாக மாற்றி. மரணத்தை வென்று இறைவனிடம் தொடர்பு கொண்டு இறை நிலையை அடைந்த அந்த ஆன்மாவின் பெயர்தான் உலகியலில் வைத்த பெயர் இராமலிங்கம். அருள்பெற்று மரணத்தை வென்ற பின் திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் சூட்டப்பட்டதாகும்.

அவரைப்போல் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து அருளைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதற்காகவே ஆன்மாக்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பஞ்ச பூத உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆன்மாக்கள் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்வது எங்கனம் ?

*இந்த உலகம் ஒரு கோழிமுட்டை வடிவமானது*..
பலகோடி மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது..

*அதேபோல் தான் ஆன்மா இந்த பூத உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளன*.

இந்த அண்டத்திற்குள்  வால்அணு. திரவ அணு.குருஅணு.லகுஅணு.அணு.பரமாணு.விபு அணு..என ஏழு விதமான அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் நிறைந்துள்ளது.

சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற கிரகங்கள் அனைத்தும் தன்னைத்தானே தன் கடமைகளை ஆற்றிக்கொண்டுள்ளன.
எல்லாமே ஐந்து வண்ண ஒளித்தன்மை உடையதாகும்.

இந்த அணுக்களின் பல வகையான ஒளி வண்ணத்தின் தொடர்பால் எல்லா ஆன்மாக்களுக்கும் உயிர்.உடல் தோற்றம் பல வண்ணங்களாக.பல வடிவங்களாக பின்னப்பட்டுள்ளன.

ஆன்மா உயிர் இரண்டும் ஒளித்தன்மை உடையது..ஆன்மா குடியிருக்கும் வீடு என்னும் உடம்பு மட்டும் அணுக்களின் சேர்க்கைக்கு தக்கவாறு உரு மாற்றங்கள் வெவ்வேறு விதமான வண்ணங்களும் வடிவங்களும் படைக்கப் படுகின்றன.

உயர்ந்த அறிவு !

இந்த உலகத்தில் உயர்ந்த இறுதிப் பிறப்பான மனித தேகத்திற்கு மட்டுமே உயர்ந்த அறிவு வழங்கப் பட்டுள்ளன.

எதற்காக உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டது ஏன் ? என்றால்.உண்மையை அறிவால் அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  தன்னை உணர்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று இறை நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.

*கோடி சூரியப் பிரகாசம் உஷ்ணம் உள்ள ஆன்மா..அருள் பிரகாசமாக மாற்றம் அடைய வேண்டும்*. அதற்கு அருள் சுதந்திரம் என்று பெயர்.

கருணையின் மொத்த உருவமே அருள் பிரகாசமாகும்.

அதனால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *தனிப்பெருங் கருணை* வாய்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது.

ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள அதன் தன்மையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எவ்வாறு மாற்றிக் கொள்வது !

இந்த உண்மையைத் தான் வள்ளலார்.*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சத்திய விண்ணப்பத்தில்* நமக்குத் தெரிவிக்கின்றார்.

கவனமாக படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.!

சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.!

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில்,

இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு

எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய *கடவுளது திருவருட் சுதந்திரம்* ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.

கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!

மேலே கண்ட விண்ணப்பத்தில் கண்டபடி.இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்த சுதந்தரத்தினால் பிணி.மூப்பு .பயம்.துன்பம்.மரணம். போன்ற அவத்தைகள் வந்து இறந்து.இறந்து .பிறந்து பிறந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்து கொண்டேன்..

எனவே நமக்கு கிடைத்த  தேகசுதந்திரம்..போக சுதந்திரம்.ஜீவசுதந்திரம் என்னும் மூவவை சுதந்திரத்தையும்.திருப்பிக் கொடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் திருவருட் சுதந்திரம் பெற்றால் மட்டுமே மரணத்தை வென்று என்றும் அழியாத  பேரின்ப சித்திப்  பெருவாழ்வு ஆன்மாக்கள் வாழமுடியும்.

இதுவே ஆன்மாக்களின் இயற்கை உண்மை வாழ்க்கையாகும்...

பொய்யை ஒழித்து மெய்யை உணர்ந்து வாழ்வோம்.

பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மற்றாடும் ஐயரைக் கண்டேனடி என்று வள்ளலார்  அழுத்தமாக சொல்லி உள்ளார்.

ஆன்மாக்கள் பூத தேகத்தை விட்டு அருள் தேகத்தைப் பெற்றால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் கண்களால் காணமுடியும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி அளித்தால் மட்டுமே.அண்டகோடிகள் எல்லாம் ஊடுருவி செல்லும் ஆற்றல் ஆன்மாவிற்கு கிடைக்கும்.  வேறு எந்த வழியாலும் செல்ல வாய்ப்பே இல்லை.

வள்ளலார் பாடல் !

அண்ட கோடி அனைத்தும் காணுங் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே !

என்னும் பாடலிலே தான் கண்ட காட்சியைத் தெளிவாக விளக்குகறார் வள்ளலார்..

மேலும் நம்மை அன்புடன் அழைக்கின்றார்

வள்ளலார் பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்பின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவமாகிப்

பொன்புடை நன்கொளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின் மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்த்தே !

என்னும் ஞானசரியை பாடலிலே எளிய தமிழில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்

எல்லா ஆன்மாக்களும் இன்புற்று வாழ்க !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு