சனி, 22 ஜூன், 2019

இறைவன் அளித்த அருள் ஆட்சி கொடை !

இறைவன் அளித்த அருள் ஆட்சி கொடை !

வள்ளலார் ஒரு புரட்சியாளர். விஞ்ஞானி.அருள்ஞானி.சாதி.
சமய.மதங்களை ஒழித்த தத்துவஞானி.தத்துவங்களை வென்றவர் .ஜீவகாருண்ய செம்மல்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்.இரக்கமே உருவானவர்.
மரணத்தை வென்ற மகான் என்றெல்லாம் நாம் வள்ளலாரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டு வருகிறோம்...

எல்லாமே உண்மைதான் ...

இதெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உள்ளது !

1874 ஆம் வருடம் நட்ந்த நிகழ்ச்சு !

ஓய்வு எடுத்துக் கொண்டவர்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

*எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் அருள் ஆட்சியை வள்ளலார் இடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்...*

*இதுதான் வள்ளலார் பெற்ற மாபெரும் வெற்றியாகும்*..

அண்டங்கள் உலகங்கள் யாவும் ஆட்சி செய்யும் அருள் ஆட்சி பெற்றவர் தான் வள்ளலார்.

இறைவன் என்றும்.நித்தியமானவர். நிலைப்பெற்றவர்.அதே போல் வள்ளலார் என்றும் நித்தியமானவர் நிலைப்பெற்றவர் என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதியும் அந்தமும் கடந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அதேபோல் ஆதியும் அந்தமும் கடந்தவர் வள்ளலார்.

வள்ளலார் ஆண்டவரிடம் சொல்லுவதைப் பாருங்கள் !

 *பொறுமையாக ஊன்று படிக்கவும்*..

அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் !

துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றனக் களித்த
எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்த என் தனித் தந்தையே

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்த மெய்த் தந்தையே

*இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே*

*ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே*

எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

*தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே*

*தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே*

*தன்வடி வனைத்தையுந்
தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே*

*தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என் சித் தாக்கிய என்றனித் தந்தையே*

*தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே*

*தன் கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என் கையிற் கொடுத்த என்றனித் தந்தையே*

*தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே*

*தன்னி இயல் என்னியல் தன்செயல் என்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே*

*தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே*

*சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே*

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

*உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே*

*துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே*

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

*எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே*

இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே !

மேலே கண்ட அகவல் வரிகளில் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயல்கள் அனைத்தையும் நம் வள்ளல் பெருமானுக்கு அளித்து

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆடசி சிம்மாதனத்தில் அமர வைத்துள்ளார்...

உலகில் எந்த அருளாளர்களும் பெறமுடியாத ஈடு இணையற்ற வெற்றியாகும் .

*இவைதான் வள்ளலார் பெற்ற தனித்தன்மை அருள்ஆட்சி திருமுடியாகும்.*

தன் கையில் பிடித்திருந்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே என்பது தான் உச்சகட்ட வெற்றியாகும்...

*அகவல் இறுதியில் வள்ளலார் சொல்லுவதை கவனித்து படியுங்கள் !*

என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில் பேரருளா லறிவது விளக்கிச்

 சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்

ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

 உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

*மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை*

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! 

மேலே கண்ட அகவல் வரிகளில் ஆண்டவர் சொல்லியவாறு  அருள் ஆட்சி செய்வதாக ஏற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்துகிறார்...

இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையோடு அருள் ஆட்சி புரிந்து கொண்டு செயலாற்றிக் கொண்டுள்ளார்..என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வாக்கு

பாடல்  !

துன்பெலாந் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்ததருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம தானது

உலகில்
வன்பெலாம் நீக்கி நல்வழி யெலாம் ஆக்கி மெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத் தனை.

உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளை
யாடுக

*அருட்சோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை*

என்றே
இன்புறத் திருவாக்களித்து என்னுள்ளே கலந்து
இசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய்வல்ல சித்தாகி்மணி மன்றினில்
இலங்கும் அருட்பெருஞ்ஜோதி
நட ராஜபதியே.

என்னும் பாடலிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருட் கொடையை தெரிவிக்கின்றார்..

தெளிவோம் தெரிந்து கொள்வோம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு