செவ்வாய், 19 ஜூலை, 2022

ஆன்மாவின் காதல்!

 *ஆன்மாவின் காதல்!*


*உலகில் உள்ள எல்லா உயிர்களும், ஒரு உயிரை ஒரு உயிர் நேசிக்கிறது. ஒரு உயிரை பல உயிர்கள் நேசிக்கிறது, அதற்கு அன்பு காதல் என்று பெயர் சூட்டுகிறார்கள்.*


*உயிரை உயிர் நேசிப்பதற்கு உடம்பு தேவைப்படுகிறது, ஒவ்வொரு உடம்பின் தொடு உணர்ச்சியால் வெளிப்படும் திரவத்தால்,சேர்க்கையால் உயிரும் உடம்பும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு பால் உணர்வு என்றும் காதல், காமம், வெகுளி, மயக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.* 


*அழியும் உடம்பை உயிரை காதலிப்பது உண்மையான காதல் அல்ல.அழியாத உடம்பை உயிரை ஆன்மாவை  காதலிப்பதே உண்மையான காதலாகும்*


*ஆன்மா!*


*ஆண்டவர் அனுப்பிய ஆன்மாக்களின்  விருப்பத்திற்கு இணங்க ஆணவம் மாயையின் உதவியால் உயிரும் உடம்பும் தோன்றி தோற்றம் மளிக்கின்றது*அதற்கு மாயா தோற்றம் என்று சொல்லப்படுகிறது. மாயா தோற்றமான உயிரும் உடம்பும் இவ்வுலகில் வாழ்வதற்கு மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை என்ற மூவகையான ஆசை பற்றிக் கொள்கிறது. இதற்கு கன்மவினை என்று சொல்லப்படுகிறது.*


*ஆன்மாவை பற்றிக் கொண்டுள்ள ஆணவம், மாயை, கன்மம் என்ற மூன்று மலங்களை அகற்றினால் மட்டுமே சிவபெருமான் அருளைப்பெற்று பேரின்ப வாழ்க்கை வாழலாம் என்று சைவசமயம் சொல்கிறது.*


*அதற்கு துறவறம் சன்னியாசம் பிரம்மச்சரியம் போன்றவற்றை கடைபிடித்து அவர்கள் காட்டிய உலகியல் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்காக பலவகையான வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள், இதிகாசங்கள்,சாத்திரங்கள் போன்ற கற்பனை காவியங்களை,மனித குலத்திற்காக படைத்துள்ளார்கள்.*


*ஆன்மாவின் காதல் !*


*ஆன்மாக்கள் யாவும் பெண்பாலைச் சார்ந்தது*. *கடவுள் ஒருவரே ஆண்பாலைச் சார்ந்தவராகும்*எனவேதான் உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள்* *இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலிப்பதே உண்மையான காதலாகும்.* அவரே உண்மையான கணவராகும்.


*உருவத்தால் ஆண் பெண் என்ற பேதம் பார்த்து காதலிக்கிறோம் அது முற்றிலும். தவறான சேர்க்கையாகும்*


*உருவத்தால் ஆண் பெண் என்ற பேதம் இருந்தாலும் உள்ளே இருந்து இயங்கும், ஏகதேச மெய்ப்பொருளான ஆன்மா உயிர் ஒரேத் தன்மை உடையது. பேதம் இல்லாதது*


*எனவேதான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்.* *அதேபோல் தான் எத்துணையும் பேதம் இல்லாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்க வேண்டும் என்கிறார்.*


*வள்ளலார் பாடல்!* 


கண்ணாறு படும் எனநான் அஞ்சுகின்றேன் பலகால்

*கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்*


எண்ணா என் *ஆசைவெள்ளம்* என்சொல்வழி கேளா

தெனை ஈர்த்துக் கொண்டு சபைக்கு ஏகுகின்ற தந்தோ 


*பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்*

*பெண்ணாசை பெரிதல காண் ஆண் ஆசை பெரிதே*


உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே !.


என்னும் பாடல் வரிகளில் தெளிவாக விளக்குகின்றார். 


*உலகில் உள்ள உயர்ந்த மனிததேகம் எடுத்த ஆன்மாக்கள் யாவும் ஆன்மாவும் ஆன்மாவும், அதாவது பெண்ணும் பெண்ணும்  திருமணம் செய்து கொண்டு வாழ்வதுபோல் உடல் உறவு கொண்டு வாழ்கிறார்கள்.*


*நான் ஒருபெண் (ஆன்மா ) மட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு கணவர் வீடு என்னும் அருள் பெருவெளியில் என்றும் நிரந்தரமான ஆனந்தமான அருள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்கின்றார் வள்ளலார்.*


*மேலும் வள்ளலார் பாடல்!*


கண்கலந்த கணவர் எனைக் கைகலந்த தருணம்

கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்


எண்கலந்த போகம் எலாம் சிவபோகம் தனில் ஓர்

இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்


விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்

வினைத்துயர் தீர்ந்து அடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்


உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ

துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி! 


மேலும் பதிவு செய்கின்றார்.


*கற்பூரம் மணக்கின்றது* தென்னுடம்பு முழுதும்

கணவர் திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்


இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்

*இயற்கைமணம்* துரியநிறை இறைவடிவத் துளதே


பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே


நற்பூதி அணிந்த திரு வடிவுமுற்றும் தோழி

*நான்கண்டேன்* *நான்புணர்ந்தேன்* நான்அது 

ஆனேனே.!*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலிக்கும் தருணம் என் கண்ணில் கலந்து,கருத்தில் கலந்து, எண்ணில் கலந்து என் உருவில் கலந்து,உயிரில்கலந்து ஆன்மாவில் கலந்து உளமார ஏற்று திருமணம் செய்து அருள் பெறும் தகுதியுடைய காதலியாக  ஏற்றுகொண்டார்.* 


*நானும் அவரும் கலந்த தருணம் என்னுடைய உடல் பொருள் ஆவி முழுவதும அவரிடமே கொடுத்து விட்டேன்.* 


*கொடுத்த தருணத்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் அன்புடைய கணவரின் திருமேனி எனை அணைந்து கலந்த தருணம் கற்பூரமணம்  மணக்கின்றது என் உடம்பு முழுவதும்.*


*இம்மணம் மறைந்து போகும் செயற்கை மணம் அன்று. என்றும் அழியாத இயற்கை மணமாகும் என்கின்றார்.*

*அந்த நறு மணம் என் உடம்பு முழுவதும் கலந்ததால் அவர் முழு உருவத்தையும் நான் கண்டேன், நான் தழுவினேன், நான் புணர்ந்தேன் நான் அது ஆனேன் என்கிறார் வள்ளலார்.*


*உண்மையான காதல்!*


*ஆன்மாக்கள் ஆன்மாக்களை காதலிப்பது செயற்கையான காதலாகும். ஓர் இணச் சேர்க்கை போன்றதாகும்* *துர்நாற்றம் உடையதாகும். அழியும் காதலாகும். பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்ட இருக்கும் காதலாகும்*


*ஆன்மாக்கள் ஆண்டவரைக் காதலிப்பதே உண்மையான காதலாகும். என்றும் அழியாத இயற்கை இன்பம் தரும் காதலாகும். பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப வாழ்க்கை வாழும் காதலாகும்*


*உலக வரலாற்றிலே ஆன்மாக்கள் வாழு்வதற்கு நல்வழியை நேர்வழியைக் காட்டியவர் வள்ளலார் ஒருவரே*


வாழ்க்கை வாழ்வதற்கே 


*அன்பு இரக்கம்!*


ஆண்டவரால் அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள், உயிர்களிடத்தில் ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கமும் பரோபகாரமும் கொள்ள வேண்டும். அதே காலத்தில்

இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் உண்மையான அன்பும் அதாவது தீராத காதலும் கொள்ள வேண்டும்.


இந்த உயிர் இரக்கம் என்னும் பரோபகாரத்தாலும்.கடவுளைத் தொடர்பு கொள்ளும் சத்விசாரத்தாலும் மட்டுமே ஆண்டவர் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ முடியும் என்பதை அறிவு சார்ந்த மனித ஆன்மாக்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.


*வள்ளலார் பாடல்!*


எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்

இருந்து நடம் புரிகின்ற அரும்பெருஞ்சோதியினார்


நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்


*இல்லாமை எனக்கில்லை* எல்லார்க்கும் தருவேன்

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் ணஅம்மா


செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.!


*எல்லாம் செய்யவல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், நல்லோர்கள் எல்லோரும் அறிய என்னை மணம் புரிந்தார், அதனால் இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் அருளைத் தருவேன் என் னுடைய பெருஞ் செல்வம் என்புகல்வேன் என்கின்றார் வள்ளலார்.*


*தான் மட்டும் அனுபவிப்பது அருள் அல்ல. அருள் எல்லோருக்கும் சென்று அடைவதே பொது நோக்கமாகும் எல்லா ஆன்மாக்களும் அருள் பெறல் வேண்டும்.* 


வள்ளலார் பாடல் !


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா *தென்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே!*


ஆண்டவரை காதலிப்போம் அருளைப் பெறுவோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு