ஞாயிறு, 24 ஜூலை, 2022

கடவுளைக் கண்டேன்!

 *கடவுளைக் கண்டேன்!* 


*எனது ஊர் ஈரோடு எனது பெயர் கதிர்வேல் எமக்கு வயது 76,  மனைவி பெயர் அமுதா, மற்றும் மகன் கார்த்திகேயன்,மகள் சுமதி,மகன் நந்தகுமார் ஆகிய மூன்று பிள்ளைகள். எமது கல்வி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே, தொழில்  தையல் தொழில், இன்டியன், லண்டன், அமெரிக்கன் டிப்ளோமோ பயிற்சி பெற்றவன். எங்களது கடையின் பெயர் "ஸ்பென்சர்ஸ் டையலர்ஸ்" என்ற பெயரில் நிறைந்த வாடிக்கையாளர்களை கொண்ட சிறந்த  ஷோரூமாகும்*


வடலூர் தொடர்பு !


 *உலகியல் உள்ள சாதாரண  மனிதர்களைப் போல் அடியேனும் பல கடவுள்கள் உண்டு என நினைந்து பல கடவுள்களின் ஆலயங்களுக்கும் சர்சுக்களுக்கும்,மசூதிகளுக்கும் குடும்பத்துடன் சென்று வழிபடுவது, வணங்குவது,தோத்திரம் செய்வது, அங்க பிரதஷ்ணம் செய்வது, விரதம் இருப்பது மற்றும் சரியை கிரியை போன்ற வழிபாடுகளிலும் ஈடுபாடுடன் சாதாரண பக்தி மார்க்கத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருந்தோம். அதிலே முக்கியமாக பழனி முருகன் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று தவறாமல் சென்று வழிபடுவது வழக்கமாக கொண்டிருந்தேன். மேலும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு 48 நாட்கள் கட்டுபாடான விரதம் இருந்து இருமுடிக்கட்டி தலையில் சுமந்து கொண்டு, நடைபாதை வழியாக சென்று வழிப்பட்டும் வந்துள்ளேன்.*


*பல தெய்வ வழிபாடு!*


எங்கள் வீட்டில் எல்லாத் தெய்வங்களின் உருவ படங்களையும் (ஏசு,அல்லா,புத்தர் படம் முதல் கொண்டு) வைத்து அபிஷேகம் ஆராதனை போன்ற ஆச்சார_ சங்கற்ப விகற்பங்கள் யாவும் செய்து பக்தி பரவசத்துடன் பல தியானம், யோகம், தவம் போன்ற பயிற்சி முறைகளையும் செய்து வந்தேன்.


*ஒரு பெரியவர் வருகை !*


*எனது 33 ஆம் ஆண்டில் சுமார் 70 வயது தக்க ஒருபெரியவர் கழுத்தில் உத்ராட்சியும் காவி உடையும். மடியில் சிறிய விபூதி பையுடன்  எமது தையற் கடைக்கு வந்தார்.*


*நல்ல பள பளக்கும் அழகான திருமேனி, அவருக்கு காவி துணியில் சுப்பா தைப்பதற்காக எங்கள் தையற் கடைக்கு வந்துள்ளார். அவர் பெயர் கே கே சாமி  என்பதாகும் சாமி சாமி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர்* 


திருஅருட்பா ! 


*அவர் கையில்  பையுடன் வந்தார்,பையில் இருந்து துணி கொடுத்துவிட்டு, பின் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, உமக்கு நேரம் கிடைக்கும் போது  படித்துப் பார்க்கவும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்த புத்தகத்தை பெற்று பார்த்தபோது *திருஅருட்பா ஆறாம் திருமுறை*" *என்று இருந்தது . அருட்பெருஞ்ஜோதி அச்சகம் சென்னை.  விலை 30 ரூபாய் என்று இருந்தது. பெற்றுக் கொண்டு அவரிடம் 30 ரூபாய்  கொடுத்தேன் வேண்டாம் என மறுத்து விட்டார்.* 


அப்புத்தகத்தை பெற்று எனது மேஜை மீது வைத்து கொண்டேன்.


*ஒருமாதம் கழித்து அப் பெரியவர் தைத்த காவி சுப்பா ஆடையை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு வந்தார், நான் கொடுத்த புத்தகத்தை படித்தாயா என்று கேட்டார், இன்னும் படிக்கவில்லை சாமி, நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன் என்றேன்.சரி அவசியம் படிக்கவும் என்று சொல்லிவிட்டு ஆடையை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.* 


(தைத்த ஆடைக்கு பணம்கொடுத்தார் நான் வாங்க மறுத்துவிட்டேன்,) 


*மீண்டும் ஒருமாதம் கழித்து வந்தார்.நான் கொடுத்த புத்தகத்தை படித்தாயா என்று கேட்டார். இன்னும் படிக்கவில்லை சாமி, இனி கண்டிப்பாய் படிக்கிறேன் சாமி என்றேன்.சிறிது நேரம் பேசிவிட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டார்.*


மீண்டும் ஒருமாதம் கழித்துவந்தார் புத்தகம் படித்தாயா என்று கேட்டார். இன்றிலிருந்து கண்டிப்பாய் அவசியம் படிக்கிறேன் சாமி என்றேன். ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.


*திருஅருட்பா என்னும் அப்  புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கத் தொடங்கினேன் அதில் உள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடைப் பகுதியில் உள்ள கேள்வியும் நானே ! பதிலும் நானே ! என்பது போன்ற விளக்கம் எளிய தமிழ் மொழியில் அற்புதமாக அழகாக எழுதி உள்ளதை படித்து வியந்தேன். என் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப் போட்டது முழுவதுமாக மாற்றியது.*


*என்னிடம் புகைப்பழக்கம்.குடிப்பழக்கம்.மாமிசம் உண்ணும் பழக்கம்,ஓய்வு நேரங்களில் சூதாட்டம் போன்ற பழக்கம் எல்லாமே கண்டும் காணாமல் இருந்தது. இருந்தாலும் குடும்பத்தையும் மற்றும் யாரையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன். உழைப்பில் உறுதியாக இருப்பேன். நல்ல நேர்மையான உறுதியான போதுமான வருமானம்*


என்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்கள் யாவும் ஒரே இரவில் தூக்கி எரியத் தூண்டியது. *திருஅருட்பாவை அதிதீவிரமாக  படிக்கத் தொடங்கினேன்*


*(ஈரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவராக பணி யாற்றி உள்ளேன், நாங்கள் ஆரம்பித்த ஜீவகாருண்ய பணியான அன்னதானம் இன்றுவரை தடை இல்லாமல் நடைபெற்று கொண்டு வருகிறது.* 


தமிழ்நாடு முழுவதும்  பட்டி தொட்டி எல்லாம் சென்று *சுத்த சன்மார்க்க* சொற்பொழிவு செய்து வருகிறேன்


சிறுகுறிப்பு... 


*அதன்பின் அந்த சாமி அவர்கள் என்மீது அளவில்லா அன்பும் பாசமும் உரிமையும் கொண்டவராக திகழ்ந்தார். நெருக்கமான பழக்கம் நீடித்தது.நான் பேசுவதை உற்று நோக்கி ஆர்வமுடன் ரசிப்பார்.*


அவர் அணிந்திருந்த உத்ராட்சை, காவி உடை, விபூதிபையை அகற்றி வெள்ளாடைத் துறவியாக மாற்றினேன்.. எங்கள் வீட்டிற்கும் அடிக்கடி வருவார், என் மனைவியிடமும் குழந்தைகள் இடமும் அன்பாக பழகும்  பழக்கம் உண்டாயிற்று. எப்போது வந்தாலும் உணவு உட்கொண்டு ஓய்வு எடுக்கும் அளவிற்கு பழக்கம் நீடித்தது. அவர் மகள் வீடு ஈரோட்டில் இருந்தது, எங்கள் வீட்டிற்கு மட்டுமே அடிக்கடி வருவார்,


*வடலூர்!*


வடலூரில்  ஆத்தாமடம் என்று ஒன்று இருந்தது அங்குதான் அவர் தங்கி இருப்பார் வள்ளலார் மீது அளவில்லா பற்று கொண்டவர். என்னை முதன் முதலில் வடலூருக்கு அழைத்து சென்றவரும் அவரே !


*ஐந்து ரூபாய் வளர்ந்தது !*


*ஒருநாள் என் மனைவியிடம் ஐந்து ரூபாய் கொடுத்து இந்த ரூபாயை செலவு செய்யாமல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் நான் தேவைப்படும் போது பெற்றுக் கொள்கிறேன் என்றார்.அதேபோல் பாதுகாத்து வைத்திருந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை என் மனைவிக்கு பணப் பிரச்சனை எப்போதும் வந்ததே இல்லை. கேட்பவர்களுக்கு கொடுக்கும் நிலை உருவாகியதே தவிர, யாரிடம் கேட்கும் நிலை வந்ததே இல்லை.* 


திருஅருட்பா ! 


*திருஅருட்பா பாடல்கள் மற்றும் உரைநடைப் பகுதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பல முறை உள் உணர்வுடன் படித்தேன் மனம் மாற்றம் அடைந்தது. அறிவு தெளிவு அடைந்தது. ஒவ்வொரு மாதமும் தவறாமல் வடலூர் மாதப் பூசம் ஜோதி தரிசனம் காண சென்றுவருவது வழக்கமாக கொண்டேன்.* 


*கடவுளின் உண்மை நிலை அறிந்தேன். தத்துவ சிலை வடிவங்களான ஆலய சிறு தெய்வ  கடவுள்களை வழிபடுவதை நிறுத்தி கொண்டேன்.* 


*கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மையை, வள்ளலார் எழுதிவைத்துள்ள திருஅருட்பா பாடல்களைப் படித்து தெரிந்து கொண்டேன்.* 


வடலூர் சத்திய ஞானசபை ! 


*கடவுள் ஒருவரே   அவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தான் கண்ட ஞானக் காட்சியை  வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாக வடலூரில் தோற்றுவித்துள்ளார் அங்கே ஒளிவழிபாடு மட்டுமே காட்டவேண்டும் என்பதே ஆண்டவர் கட்டளை என்பார் .* 


வள்ளலார் பாடல்! 


சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை யான் பெற்றுக் கொண்டனன்!


*அங்கு தத்துவங்களான சிலை உருவ வழிபாடு கிடையாது, ஒளி உருவ வழிபாடு காட்சியை மட்டும் காட்டப் படுகிறது* 


*எதற்காக இவ்வாறு தோற்றுவித்துள்ளார் என்பதை திருஅருட்பாவைப் படித்து பார்த்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து கொண்டேன்.* 


*வள்ளலார் சொல்லியுள்ள திருஅருட்பா பாடல்களையும் உரைநடை விளக்கங்களையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்கடவுளின் உண்மை நிலையை தெளிவாக  அறிந்தேன் தெரிந்தேன் தெளிந்தேன்* 


வள்ளலார் எழுதியுள்ள திருஅருட்பாவைத் தவிர வேறு எந்த நூல்களையும் படிப்பதில்லை என உறுதி கொண்டேன்.


*வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க  ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்து பின்பற்றினோம். வள்ளலார் சொல்லியவாறு எங்கள் வீட்டில் தகரக் கண்ணாடி விளக்கு மட்டுமே வைத்து வழிபட தொடங்கினோம். மற்றைய தெய்வ படங்கள் யாவையும் அகற்றி விட்டோம்.* *புறத்தில் அகற்றியதோடு அல்லாமல், அகத்தில் பற்றி இருந்த அனைத்து சிறுதெய்வங்களின் பற்றுதல்களையும் அகற்றி விட்டோம் என்பதே சத்தியமான உண்மையாகும்* 


*கடவுளின் உண்மை !*


*எமது சிறிய ஆன்ம அறிவினால் கடவுளை அறிந்து கொள்ள முயற்சி மேற் கொண்டேன். அதுசமயம் நான் தெரிந்து கொண்ட உண்மை அனுபவம் யாதெனில்?*


*கடவுளைத் தெரிந்து கொள்ளவும், கடவுளின் உண்மையான இருப்பிடத்தை அறிந்து கொள்ளவும், கடவுளைத் தொடர்பு கொள்ளவும், கடவுளின் அருளைப் பெறவும், வாழ்க்கையை முறையாக பொது நோக்கத்தோடு இனிமையாக இன்பத்தோடு அமைத்துக் கொள்ளவும்,*


*ஆன்மாக்கள் அருள் பெறுவதற்கும்   எக்காலத்தும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும், மேலும்  பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கும்  முக்கிய தடையாக இருப்பவை யாதென அறிந்து கொண்டேன்*


அவை யாதெனில்? 


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.* 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுஉரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.* 


*வள்ளலார் சொல்லியவாறு மேலே கண்ட விண்ணப்பத்தின்படி எல்லாவற்றையும் விட்டு விட்டேன் என்பதுதான் சத்தியமான உண்மையாகும்* 


*எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எமக்கு, எமது சிற்சபையின் கண்ணே காட்சி கொடுக்க ஆரம்பித்தார்.*

*ஆதலால் எல்லா உண்மைகளையும் எவ்வித அச்சமும், மயக்கமும், திரிபும்,பயமும், தடையும் இன்றி தெளிவாக உண்மையை அறியப் பெற்றேன்.*


*மேலும்  வள்ளலார் சொல்லிவாறு சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் இதுவே சத்திய  உண்மையாகும்* 


*வள்ளலார் அறிந்து கொண்ட கோடிக்கணக்கான அண்டங்களையும், உலகங்களையும், அவற்றில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்ச ரகசியங்களையும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை உண்மையும், இயற்கை விளக்கத்தையும், இயற்கை இன்பத்தையும்,அவர் அமர்ந்து ஆட்சி செய்யும் அருட்பெரு வெளியில் "அருட்பெரும்ஜோதி ஆண்டவர்  ஞான சிங்காதன பீடத்தையும்" மற்றும் எல்லாவற்றையும் கண்டேன் கனிந்தேன்  களித்துக் கொண்டும் உள்ளேன்.* 


நான் கண்ட காட்சிகளையும்,மேலும்  உண்மைகளை யும் ஒளிவு மறைவு இன்றி மக்கள் தெரிந்து கொள்ளும்  பொருட்டு மேடைகள் தோறும் போதித்தும். கட்டுரைகள் வாயிலாக எழுத்துவடிவம் மூலமாகவும் தெரிவித்தும் வருகிறேன்.* 


*வள்ளலார் பாடல்!* 


அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்


செப்பாத மேனிலை மேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்


*தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்*

*தலைவா நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!* 


மேலும் 


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில்ங விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!* 


எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


தொடரும் 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே  உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு