ஞாயிறு, 19 ஜூன், 2022

மரணத்தை வெல்வது எவ்வாறு ?

 *மரணத்தை வெல்வது எவ்வாறு ?*


*ஆன்மாக்கள் யாவும் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதாகும். ஆகையால் ஆன்மாக்கள் யாவும் ஆண்டவருக்கு சமமான, எல்லாத் தகுதிகளும் உடையனவாகும் அதனாலே உயர்ந்த அறிவு பெற்ற ஆன்மாக்கள் என்று பெயர்* 


*உயர்ந்த அறிவுபெற்ற ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே இந்த பஞ்சபூத உலகம் படைக்கப்பட்டது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்* 


*ஆன்மாக்கள் தாவரம்,முதல் ஊர்வன,பறவை,மிருகம்,நரகர்,தேவர்,மனிதர் போன்ற ஏழுவகைகளான பலகோடி தேகங்கள் எடுத்து இறுதியாக மனிததேகம் எடுத்துள்ளது.*


*மனித தேகத்தில் வரும்போது மட்டுமே ஆன்மாவிற்கு அறிவு விளக்கமும் அருள் விளக்கமும்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப் படுகிறது. அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தோன்றினால் மட்டுமே ஆண்டவரைத்தொடர்பு கொள்ள முடியும்*


மனித தேகம்!


*இவ்வுலகில் உயர்ந்த அறிவு பெற்ற ஆன்மா வாழ்வதற்காக உயர்ந்த தேகமான மனித தேகம் கொடுக்கப்பட்டது. எதற்காக என்றால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக*


*ஆன்மா வாழ்வதற்காக  இறைவன் துணை கொண்டு மாயையினால் பஞ்சபூத கருவிகளைக் கொண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் இம்மனித தேகம் என்பதாகும்.* 


( வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்ற வேண்டும்) 


*இத்தேகத்தின் அகத்தில்  ஆன்மாவும்,அகப்புறத்தில் ஜீவன் என்னும் உயிரும். புறத்தில் மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் என்னும்  சூக்கும கருவிகளும்,புறப்புறம் என்னும் இடத்தில் கண்,காது,மூக்கு,வாய்,கைகள் கால்கள் என்னும் மெய்யும் (உடம்பு) உள்ளன.* 


*இறைவனால் அனுப்பப்பட்ட ,ஆன்மாவும், ஜீவன் என்னும் உயிரும்,கரணம், இந்திரியம் என்னும் கருவிகளும், மற்றும்  முக்கியமான உள் உறுப்புகளான தத்துவங்கள் யாவும் ஒன்று சேர்ந்து, ஆன்மா சொல்வதை பின்பற்றினால் மட்டுமே உயிரை இழக்காமல் உடம்பை காப்பாற்ற முடியும்.*


 *உயிரைக் காப்பாற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதுவே கடவுள் வழிபாடாகும்* 


*உயிரைக் காப்பாற்றுவதற்காக பின் பற்றும், கடைபிடிக்கும்  ஒழுக்கத்திற்கு பெயர் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று பெயராகும்.*


*ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து இறைவனை தொடர்பு கொண்டு அருளைப் பெற  வேண்டும் என்பதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையாகும். ஆணையாகும்.* 


*இறைவன் கட்டளைப்படி நான்கு வகையான  ஒழுக்கத்தை பூரணமாக கடைபிடித்தவர் இவ்வுலக வரலாற்றில் வள்ளலார் ஒருவரே!,*


*நான்கு வகையான ஒழுக்கங்களை பூரணமாக கடைபிடித்த காரணத்தினால், இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்ணால் கண்டவர் வள்ளலார் ஒருவரே !. மேலும் நேரிடையாக தொடர்பு கொண்டவரும் அவரே! ஆண்டவரிடம் பூரண அருளைப் பெற்றவரும் வள்ளலார் ஒருவரே!*.


*பொருள் வாழ்க்கை! அருள்வாழ்க்கை !*


*உலகப் பொருள் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டால்  நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் என்பதும் நிச்சயம், மறுபிறப்பு என்பதும் நிச்சயம் என்பதை அருளாலே அறிந்து கொண்டார் வள்ளலார்*


*மீண்டும் பிறப்பு இறப்பு எடுக்காமல் வாழ வேண்டும் என்றால்  மரணத்தை வெல்ல வேண்டும் என்ற உண்மையை தெரிந்துகொள்கிறார்.மரணத்தை வெல்ல வேண்டுமானால் உலகப் பொருள்களான மண்ணாசை பெண்ணாசை பொன்னாசைகளைப் புறம் தள்ளி அருள் ஆசையைப் பின்பற்ற வேண்டும் என்கின்ற உண்மையை உணர்கின்றார்* 


 *பின்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை*

நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து  நெகிழ்ந்து  அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அழுது புலம்பி *இறைவனை தன்பக்கமாக திரும்பி பார்க்க வைத்து விடுகிறார் வள்ளலார்.*


*என்றும் அழியாத நன் நிதியாகிய அருளை வாரி வாரி வழங்கி தன் குழந்தையாக ஏற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வைத்துக் கொண்டுள்ளார்*


*உலகப் பொருள் வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளாமல் அருள் பெறும் வாழ்க்கையில் வாழவேண்டும் என்று உறுதி பூண்டார். பொருளைத் தவிர்த்து அருளைப் பெற்றார் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுள்ளார் வள்ளலார்.*


தேகம் மாற்றம்!


*நாம் வாழும் இந்த பஞ்ச பூத காரிய அசுத்த உடம்போடு மரணத்தை வெல்ல முடியாது. அசுத்த பூதகாரிய தேகத்தை, இறைவனிடம் அருளைப் பெற்று அருள் தன்மைக்குத் தகுந்தாற்போல் மூன்று விதமான தேகமாக மாற்ற வேண்டும்.அதற்கு சுத்ததேகம், பிரணவதேகம்,ஞானதேகம் என்று பெயராகும்*


 *அருள் பூரணமாக பெற்றதால் அசுத்த பூதகாரிய  தேகமான பஞ்சபூத தேகத்தை சுத்த பூதகாரிய தேகமான சுத்ததேகம், அடுத்து பிரணவதேகம், அடுத்து ஞானதேகம் என்னும் தேகமாற்றத்தைப் பெற்று மூன்று தேகமும் கலந்த ஒரே தேகத்திற்கு முத்தேக சித்தி என்றும் பெயர்.அதுவே அருள் உடம்பு என்றும், ஒளிதேகம் என்றும் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் பெயராகும். இவற்றை பெற்றவர் வள்ளலார் ஒருவரே!.*


*பஞ்ச பூத தேகத்தில் வாழும் ஆன்மா தன்னையும் தனக்கு உபகாரக் கருவிகளான உயிரையும் உடம்பையும் அழிக்காமல் அருள் ஒளிதேகமாக மாற்றி எக்காலத்தும் அழியாமல் வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். மரணத்தை வெல்வதாகும்.* 


*வள்ளலார் மரணத்தை வென்றவர் மட்டும் அல்ல.கடவுள் நிலை அறிந்து அம் மயமானவர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல்,பக்குவம் வருவித்தல் போன்ற ஐந்தொழில் வல்லபத்தையும் பெற்றவர் வள்ளலார்.* 


*சுத்ததேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்கின்ற மூன்று தேகத்தின் மாற்றமே ஆன்ம இன்ப லாபம் என்று பெயராகும்*.


சுத்ததேகம் என்பது ? இம்மை இன்பவாழ்வு,இம்மை இன்ப லாபம் என்பதாகும், சிறிய தேக கரணங்களைப் பெற்றுச்  சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்பம் என்று அறிய வேண்டும்.


1.*இம்மை இன்ப லாபமானது யாதெனில்?*


*மனிதப்பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும்,புவனத்திலும்,போகங்களிலும்,குறைவின்றி நல்லறிவுடையவர்களாய் பசி,பிணி,கொலை,முதலிய தடைகள் இல்லாமல் உறவினர்,சினேகர்,அயலார்,முதலியருந் தழுவ சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியுடன்,விடயங்களைச்சிலநாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.*


*இம்மை இன்பத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில்?*


*அன்பு ,தயை,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,வாய்மை,தூய்மை முதலிய சுபகுணங்களைப் பெற்று,விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிதல் வேண்டும்.*


2. மறுமை இன்ப வாழ்வு !


*உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.*


மறுமை இன்ப லாபமாவது!


உயர்பிறப்பைப் பெற்று இன்மையின்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்கள் எல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.


மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில் ?


*அன்பு,தயை,முதலிய சுபகுணங்களைப் பெற்று சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடைபடாமல் முயன்று பலநாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்*


3.பேரின்ப வாழ்வு !


பேரின்பமாவது; எல்லாக் கரணங்களையும்,எல்லா புவனங்களையும்,எல்லாப் போகங்களையும்,தமது பூரண இயற்கை விளக்கமாகிய *அருட்சத்தியின்* சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ,


எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்பம் என்று அறிய வேண்டும்.


பேரின்ப லாபம் யாது எனில்? 


யாவும் தாமாய் விளங்குவதே என்பதாகும்.


பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில்?


தோல்,நரம்பு,என்பு,தசை,இரத்தம்,சுக்கிலம் முதலிய அசுத்த பூத காரியங்களும்,அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி ,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்,


பொன் வடிவாகத் தோன்றுதல் மாத்திரமே அன்றி ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரணவ தேகத்தையும்,தோன்றபடுதலும் இன்றி ஆகாயம்போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்.


இதுவே முத்தேக சித்தி என்பதாகும்

இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். இதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.


*வள்ளலார் பாடல்! !*


காற்றாலே புவியாலே ககனம் அதனாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே


கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாத விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே


ஏற்றாலே  இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !


*என்னும் பாடல் வாயிலாக  அறியலாம்.மேலும் அருள் ஆற்றலால் இந்த தேகத்தின் அருள் வல்லப மாற்றங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்*


*இந்த இயற்கை உண்மை தெரியாத  அறியாத புரியாத அறிவு விளக்கம் இல்லாத பைத்தியக்காரர்கள், மூடர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கண்டபடி பேசியும் எழுதியும், மற்றும் வாட்ஸ்அப்,பேஸ்புக், யூடியூப் போன்ற வலைத் தளங்களிலும் பதிவு செய்தும் வெளியிட்டும், ஏதும் அறியாத அப்பாவி மக்கள் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறார்கள்.*

*மேலும் சாதி சமயம் மதம் சார்ந்த பல பொய்யான தத்துவ கடவுள்களை வணங்கி வழிபாடு செய்யும், அருள் தன்மையின் பூரணத்தை அறியாத ஆன்மீகவாதிகளும்,கடவுள் இல்லை என்கின்ற  பகுத்தறிவுவாதிகளும்,* 


*மேலும் அருள் அறிவு அறியாமல் பொருள் அறிவைக் கொண்டு,ஆண்டவரால் படைக்கப்பட்ட பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு அணு  ஆராய்ச்சி செய்து நூதன நூதனமான பொருள்களை கண்டுபிடிக்கும் விஞ்ஞான அறிவியல் சார்ந்த புத்திசாலிகளும்,உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ஆதாரத்தை தேடிக்கொண்டு உள்ளார்கள.*


*வள்ளலாரே தாம் சொல்லியவாறு வாழ்ந்து காட்டியும் ,மரணத்தை வென்றும் ஆதாரமாக திகழ்ந்து கொண்டுள்ளார்* 


*கடவுளுக்கும் அருளுக்கும் உண்டான இயற்கை உண்மை,இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் தத்துவ  ஆதாரங்களைத்  தேடி அறிவாளிகள் அலைகின்றார்கள்.* 


*வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறு திருமுறைகளையும்,உரைநடைப் பகுதிகளையும் முழுமையாக படித்தால்தான் வள்ளலாரின் வாழ்க்கையின் உண்மை என்ன? எனபது ஆன்ம அறிவில் தெளிவாக விளங்கும்.* 


*திருஅருட்பாவை அரைகுறையாக படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது  போல் எண்ணி அறிவு தெளிவு இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசுவதும் எழுவதும் மிகவும் கேவலமான, அநாகரியமான செயல்களாகும் என்பதை மக்கள்  தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்* 


வள்ளலார் பாடல்!


கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்


கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்

காட்சிகளும் *காட்சிதரு கடவுளரும் எல்லாம்*


*பிள்ளை விளை யாட்டென நன் கறிவித்திங் கெனையே*

*பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே*


தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!


*சாதி சமயம் மதம் சார்ந்த படுபாதகமான கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய,கலை உரைத்த  கற்பனை கதைகளால் ஜோடிக்கப்பட்ட ,வேதம், ஆகமம், புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள் போன்ற மூட நம்பிக்கை கொண்ட, அர்த்தமற்ற போலியான ஆன்மீக கொள்கைகளில் சிக்கி தவித்து வாழ்ந்து அழிந்து கொண்டு இருக்கும், உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றி உண்மை கடவுள் யார்? என்பதை உணர்த்தி அருள் பெறும் வழிகாட்டி நல்லொழுக்கத்தில் ஈடுபடுத்தி தெளிவித்து திருத்தி நல்வாழ்வு வாழ வழிகாட்டு வதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார், என்னும் உண்மையை முதலில் சன்மார்க்கிகளும் மற்றும் அறியாமையில் உள்ள மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் பாடல்! 


நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் *எஞ்ஞான்றும்*

*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்* - தேவா  நின்

*பேரருளை* என் போலப் பெற்றவரும் *எவ்வுலகில்*

*யார்உளர் நீ சற்றே அறை.!*


 *மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார் வள்ளலார் என்பதை தெரிந்து கொள்ள *இந்த ஒரு பாடலே  வள்ளலாரை தெரிந்து கொள்ள போதுமானதாகும்* 


*இந்த உண்மை அறியாமல் வள்ளலாரை பிராமணர்கள் கற்பூரம் வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும்.  வள்ளலார் தற்கொலை செய்து கொண்டார் என்றும்.வள்ளலார் ஜோதியாகி விட்டார்  மரணத்தை வென்று விட்டார் என்று சன்மார்க்கிகள் பொய் சொல்கிறார்கள் என்றும் வதந்தியைப் பரப்பிக் கொண்டு உள்ளார்கள்.*


*சுத்த சன்மார்க்கம் வளர்ந்தால் சாதி,சமயம், மதங்கள் அழிந்துவிடும் என்கின்ற உண்மையை உணர்ந்த சமயம் மதத்தை சார்ந்த அரசியல் பின்புலத்தை  சார்ந்தவர்கள் மறைமுகமாக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.*


*சுத்த சன்மார்க்கிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. ஆதலால் எவராலும் அசைக்க முடியாது*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு