சனி, 16 அக்டோபர், 2021

உயிர் பெற்ற ஆன்மா ! உயிர் அற்ற ஆன்மா !

 *உயிர் பெற்ற ஆன்மா ! உயிர் அற்ற ஆன்மா !*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளியில் உள்ள ஆன்ம ஆகாயத்தில் இருந்து ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பப்படுகிறது


*ஆன்மா இங்கு வாழ்வதற்கு உயிர் உடம்பு கொடுத்து பொருள் உணவு வழங்கப்படுகிறது.* *உயிர் உடம்பு ஏன் கொடுக்கப்படுகிறது என்றால் ஆன்மா இங்கு வந்து பஞ்சபூத உடம்பு எடுத்து  இன்பம் துன்பம்  அனுபவித்து அவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் உண்டாகி இனி உயிர் உடம்பு வேண்டாம் பிறப்பும் இறப்பும் வேண்டாம் என்ற வெறுப்பிற்கு ஆன்மா தன் உணர்வை மாற்றிக்கொள்கிறது*.


இங்கேதான் ஆன்மாக்களுக்கு வழிகாட்ட அருளாளர்கள் என்னும் ஆன்மீகவாதிகளின் அறிவும் அருளும் போதனைகளும் தேவைப்படுகிறது.


*அவர்கள் காட்டிய பாதையில் சென்றால் ஆன்மாக்கள் மரணம் அடைந்து பின் உயிர் உடலை பிரிந்து பிறப்பு இறப்பு அற்று  மோட்சம் அடைந்து நல்வினை தீவினைக்குத் தகுந்தவாறு சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் பிரம்மலோகம் சிவலோகம் விஷ்ணுலோகம் உள்ளது என்றும் பலவகையான  இடங்களைக் காட்டியுள்ளார்கள். ஆன்மாக்கள் அங்கு சென்று பேரின்பவாழ்வு வாழலாம் என்றும் தவறான வழியைக் காட்டி யுள்ளார்கள்*


அப்படி பல இடங்கள் இருப்பதாக ஆன்மாக்கள் நம்பி செல்ல முயன்று அவ்வாறு எந்த இடங்களும் இல்லை என்பதை அறிந்து மீண்டும் இறந்து இறந்து பிறந்து பிறந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளது. 


*ஆன்மாக்கள் உயிரையும் உடம்பையும் விட்டு பிரிந்தாலும் அதாவது இறந்தாலும் உயிர் உடம்பு பிரியாமல் சமாதி அடைந்தாலும். உயிர் உடம்போடு ஆன்மா பஞ்ச பூதங்களில் கலந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்ற உண்மை எந்த அருளாளர்களுக்கும் இதுநாள்வரை தெரியவில்லை.*


*வள்ளலார் பாடல்*


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே *உறுமரண வாதனையைத் தவிர்த்த*

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே


மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே *வளர்ஞான சித்திபுரந் தனிலே*

*சித்தாடல் புரிகின்றார்* திண்ணம்இது தானே*.! 


மேலே கண்ட பாடல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்


*வள்ளலார் வருகை*


*இயற்கை உண்மைக் கடவுளை ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்* என்ற உண்மையை தெரிவிக்கவே வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவராகும்.


*இன்னும் வள்ளலார் கொள்கையை முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளாமல் மக்கள் அறியாமையிலே வாழ்ந்து வருகிறார்கள்* 


*வள்ளலார் கொள்கையிலே முக்கியமானது சாகாக்கல்வி கற்பதாகும்*


*ஆன்மாக்கள்*


*உயிர் உடம்பு இல்லாமல் வந்த ஆன்மாக்கள் உயிர் உடம்பு எடுத்து பொருள் உணவு உட்கொண்டு வாழ்ந்து வருகின்றது. உயிர் உடம்பு எடுத்த ஆன்மாவால் மட்டுமே இயற்கை உண்மைக்கடவுளான நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.* தொடர்பு கொள்ள முடியும்.


*அருள் இல்லாமல் வந்த ஆன்மா ஆணவம் மாயை கன்மம் என்னும் பிடுயுள் சிக்கியுள்ளது*.

*ஆன்மா திரும்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமான அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டுமானால் அருள்தேகத்தோடுதான் செல்ல வேண்டும் என்பதே ஆண்டவர் கட்டளை ஆணையாகும்.*


*ஆன்மா இங்கு வந்து வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட உயிர் உடம்பு என்னும் வாடகைவீட்டை  சொந்த வீடாக மாற்றிக்கொள்ள வேண்டும்*. 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற வேண்டும் அருள் பெற்றால் மட்டுமே பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்ற முடியும் என்பதை வள்ளலார் தெளிவாகச் சொல்லியுள்ளார். சொல்லியதோடு அல்லாமல் வாழ்ந்தும் காட்டி உள்ளார்* 


*வள்ளலார் பாடல்*


*சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம்* தன்னைஎண்ணி


நோவதின்று புதிதன்றே *என்றும் உளதால்* இந்த 


நோவை நீக்கி

ஈவது மன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும் *மற்றை இறைவ ராலே*


*ஆவதொன்றும் இல்லைஎன்றால்* அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.! 


*சாவதும் பிறப்பதும் இன்று நேற்று நடப்பது அல்ல என்றும் காலம் காலமாக நடந்து கொண்டே உள்ளது இது பெரும் பாவச்செயல் என்கிறார். இதுவே பெரும் மரணப் பெரும்பிணி என்கிறார் இந்த பெரும்பிணியைப் போக்கும் அருள் மருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே வழங்கமுடியும் மற்ற எந்த இறைவர்களாலும் வழங்கவே முடியாது என மிகவும் அழுத்தமாக சொல்லுகிறார்.


*ஆன்மா வாழ்ந்து வந்த உயிர் உடம்பு கொண்ட அசுத்த பூதகாரிய தேகத்தை அருள் உஷ்ணத்தால்  சுத்த பூதகாரிய தேகமாக மாற்றவேண்டும்*

*பின்பு பிரணவ தேகமாக மாற்ற வேண்டும். பின்பு ஞானதேகமாக மாற்ற வேண்டும்* *இந்த மூன்று விதமான தேக மாற்றத்திற்கு பெயர் முத்தேக சித்தி என்றும் சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் பெயர் சூட்டியுள்ளார்*  


ஆணவத்தின் துணைகொண்டு வந்த வெற்று ஆன்மா மாயை கன்மத்துடன் இவ்வுலகில் வாழ்ந்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து பின்பு பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஞானதேகத்துடன் திரும்பவும் செல்லவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்மாக்களை இவ்வுலகிற்கு அனுப்பி உள்ளார் என்ற மாபெரும் உண்மையை ஒவ்வொரு ஆன்ம தேகம் எடுத்துள்ளவர்களும் அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும்.


*உயிரும் உடம்பும் பெற்ற ஆன்மா உயிரையும் உடம்பையும் அருள்ஒளியாக மாற்றி அருள் தேகமாக மாற்றி திரும்பச் சென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வார்*


அருளை எவ்வாறு பெறவேண்டும் என்பதை அறிந்து கொள்ளவே வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்ற அருள் நூல் உண்மை விளக்கத்தைப் போதிக்கிறது படித்து அதில் சொல்லியவாறு வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வாங்கு வாழ்வதே மனித தேகம் எடுத்துள்ள ஆன்மாக்களின் செயலாகும்.


துறையிது வழியிது துணிவிது நீசெயும்

முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே! (அகவல்) 


உளவினி லறிந்தா லொழிய மற் றளக்கின்

அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


அருள் பெறும் உளவை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு