ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

கடவுள் வருதருணம்!

 *கடவுள் வருதருணம்!*


இக்கட்டுரையை பொருமையாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்....


*வள்ளலார் பாடல்!*


ஞான சரியை 9 வது பாடல்! 


களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்


தெளித்திடும் எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்


ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறை ஆர்க் கின்றேன்

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்


அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே

ஆசை உண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.! 


மேலே கண்ட பாடலில் கடவுள் வருதருணம் என்கிறார் வள்ளலார். 


*இதுவரையில் இவ்வுலகத்திற்கு கடவுள் வரவில்லையா ? என்ற ஒரு கேள்வி எழுகின்றது*. 


*கடவுள் இல்லாமலா உலகம் இயங்கிக் கொண்டு உள்ளது  என்ற கேள்வியும் எழுகின்றது*.


மேலும் *இதுவரையில் சமய மதங்களால் சொல்லிய கடவுள்கள் நிறைந்து  இருக்கும் போது. வள்ளலார் கடவுள் வருதருணம் என்று சொல்லுகிறார். வள்ளலார் சொல்லும் கடவுள் யார்?  அவர் எங்கு உள்ளார் ? எங்கிருந்து வருகிறார் ? எதற்காக வருகிறார்? புதிய கடவுளா ? பழைய கடவுளா ? அவர் பெயர் என்ன ? என்ற கேள்வி  மக்கள் மத்தியில் கேட்கத் தோன்றுகிறது*.


*அதற்கு வள்ளலார் சொல்லும் பதில்*


*சன்மார்க்க பெரும்பதி வருகை*


*இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற  பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்.மூர்த்திகள்.கடவுளர்.தேவர்.அடியார்.யோகி.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல* என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார்.


*மேலே சொல்லப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் கடவுளர்கள் மற்றும் மூர்த்திகள் தேவர்கள் தலைவர்கள் யோகிகள் ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்து வணங்கும் தகுதிஉடையவர்.எவரும் இதுவரையில் பார்க்க முடியாத கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் எல்லோரும் எதிர் பார்க்கின்றபடி எழுந்தருள்கின்ற தனித்தலைமை பெரும்பதியாகிய கடவுளைத்தான் கடவுள் வருதருணம் என்று  சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார்.* 


*திருவருண் மெய்ம்மொழி!*


 உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:?


*இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும்,*


*எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்*


*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்;வீண்போகின்றோம்*.


*இறந்தவரை எழுப்பவும் இறக்கப்போவோரைக் காப்பாற்றவும் வருகிறார்*!


*ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு* 


மேற்குறித்த *உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,*

 *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்*" 


*என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி*


*அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு* *அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள விளையாடல் செய்தருளு நிமித்தம்,*  


*மேலே சொல்லியுள்ள காரண காரியங்களை நிறைவேற்றுவதற்காக* *இதுவரை இவ்வுலகிற்கு வருகைத் தராத கடவுள்* *வள்ளல்பெருமான் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு இயற்கை உண்மை எனும்*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் தனித்தலைமை பெரும்பதியாகிய கடவுள் வருதருணம் இதுவே என்கிறார்.* 


*வள்ளலார் பாடல்*


*அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி*

*ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக*


தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்

திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்


இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ

என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்


மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த

மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது*


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே*.! 


*இனி உலகம் எங்கும் உள்ள சாதி சமய மதங்களை  அகற்றி திருவருட் செங்கோல் நடபெறுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அறிவுள்ளவர்கள்அறிந்து கொள்ளுங்கள்.*


ஞானசரியை 9 வது பாடலின் விளக்கம் தான்  இதுவேயாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு