ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வீண் என்ற வார்த்தை !

 *வீண் என்ற வார்த்தை!*


இந்த உலகில் இறைவன் மனிதனைப் படைத்தற்கு காரணம் அருளைப் பெறுவதற்கே.


*அழியாமல் வாழ்வதற்கு அருளைப்பெறும் தகுதியுடைய மனிதன் அழியும் பொருளைத் தேடிப் பெற்று அழிந்து வீண்போது கழித்துக் கொண்டு உள்ளான் என்பதை வள்ளலார் வீண் என்ற வார்த்தையை திருஅருட்பா பாடலில் நிறைய இடத்தில் பதிவு செய்கிறார்.*


இந்த *"வீண்"* என்ற வார்த்தைக்கு மட்டுமே


வள்ளலார் 40  பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் அதையெல்லாம் படித்தால் நமக்கு தெரிந்துவிடும்.


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து *"வீணே"* நீர் அழிதல்அழ கலவே


கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் *"வீணே"*

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்.


புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கி *"வீண் போது"* போக் குறுவேன்

நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன்


*"வீணே"* பராக்கில் விடாதீர் உமதுளத்தை

நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்

தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான்


கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் *"வீணே"*

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் *"வீண்"* போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன்


நேற்றை வரையும் *"வீண்போது"* போக்கி இருந்தேன் நெறிஅறியேன்

நேரேஇற்றைப் பகல்அந்தோ

எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப

அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்

பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன்


தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் *"வீண்"* கழிக் கின்றார்


வாய்க்குறும் புரைத்துத் திரிந்து *"வீண் கழித்து"*

மலத்திலே கிடந்துழைத் திட்ட

நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்

நன்றுறச் சூட்டினை அந்தோ


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்து *"வீண்"* போயினார்


என்று நிறைய பாடல்களில் பதிவு செய்துள்ளார் *வீண்* என்பது தரக்குறைவான செயல்  என்பதாகும்.

மறுபடியும் எடுக்க முடியாத. சேர்க்க முடியாத. உதவிட முடியாத பயன் படுத்த முடியாத.பயன் அற்ற செயலுக்கு வீணாய்போச்சு என்பார்கள்.


அதேபோல் மனிதன் தன் வாழ்க்கையை வீணாக அழித்துக் கொண்டுள்ளான் என்கிறார்.


ஒவ்வொரு மனிதனும் திருஅருட்பாவை நன்கு படித்து பயன் பெற வேண்டும் 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு