சனி, 1 ஆகஸ்ட், 2020

ஆன்மாவின் வண்ணம் !

*ஆன்மாவின் வண்ணம்* !

ஒவ்வொரு ஜீவ தேகத்தையும் இயக்கிக் கொண்டு இருப்பது உயிராகும். ஒவ்வொரு உயிரையும் இயக்கிக. கொண்டு இருப்பது ஆன்மா என்னும் உள்ஒளியாகும்.
ஒவ்வொரு ஆன்மாவையும் இயக்கிக் கொண்டுள்ளது பரத்தில் உள்ள பரமான்மா என்று சொல்லப் படுகிறது.

ஜீவனில் உள்ளதால் ஜீவான்மா என்றும்.பரத்தில் உள்ளதால் பரமான்மா என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன.

சமய மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர்களை இறைவனுக்கு சூட்டி உள்ளார்கள்.அவற்றிற்கு பல வண்ணங்களும் வடிவங்களும் வைத்து உள்ளார்கள்.

பல வண்ணங்கள் வடிவங்கள் எதுவாயினும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இருக்க முடியும். அந்த உண்மையை நேரில் ஒருவரும் காணவில்லை.

*நான் காண வேண்டும் இது நின்மேல் ஆணை தெளிவித்துக் காப்பது உன்கடனே என்று இறைவனிடம் முறையிடுகிறார்*.

வள்ளலார் பாடல் !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை ஒன்று என்றே

எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும் வேறு எண்ணிய துண்டோ

அண்ணல் நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

திண்ணமே நின்மேல் ஆணை என் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.!

காணாததை கண்டது போல் அவரவர்கள் அறிவுக்கு தோன்றிய யூகத்தின் அடிப்படையில் கலையுரைத்தை கற்பனையாக. நிலையாக உள்ளது போல் கடவுளுக்கு பல தோற்றங்களை வைத்துள்ளார்கள்.

*கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக என சாடுகிறார் வள்ளலார்*.

எல்லாம் வல்ல பரம்பொருள் எது ? என்பதை நேரில் கண்டு களித்து கலந்துகொண்டு உண்மையைப் உலகிற்கு வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவு திறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஓங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

மேலே கண்ட பாடலில்  இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களித்து அருளைப்பெற்று. உடல் குளிர்ந்து. உயிரைக் காப்பாற்றி உள்ளம் தழைத்து சாகும் உடம்பை சாகாத உடம்பாக்க வேண்டும்.

இடர் தவிர்க்கும் கர்மசித்தி. யோகசித்தி.
ஞானசித்தி மூன்றையும் என்வசம் நிலைத்து நிற்க செய்து ஆன்ம தேகமாகிய பொன். உடம்பு பொருந்திடும் பொருட்டாய் என்உளம் கலந்த என் தனி அன்பே என்று போற்றி புகழ்கிறார்.

அந்த ஒப்பற்ற உயர்ந்த பொன்னிறம் கொண்ட இறைவனாகிய
எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு. எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய *அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஆண்டவர்* என்று பெயர் சூட்டியுள்ளார்.

இங்கே நாம் அவசியம்  கவனிக்க வேண்டியது !

இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒளி வண்ணமாக உள்ளார்.அவர் மாற்றுக் குறையாத பசும் பொன் வண்ணமாக மின்னிக் கொண்டும் உள்ளார். பலகோடி அண்டங்களையும்.
உலகங்களையும் ஐந்தொழில் வல்லபத்தால் இயக்கிக் கொண்டும் உள்ளார்.என்பதை தெரிவிக்கின்றார்.

வள்ளலார் பாடல் !

மாற்றறி யாத செ ழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே

கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே

வேற்றறி யாத சிற் றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சும்
விருந்தே

சாற்றறி யாத என் சாற்றுங் களித்தாய்
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலில் விளக்கமாக தெரியப்படுத்துகின்றார்.

கூற்றுவன் என்னும் எமன் நெருங்க முடியாத.ஒளி உடம்பாகிய ஆன்ம தேகம் பெற்றவர்களுக்கு மட்டுமே இறைவன் தன் உண்மையான உருவத்தை.அடையாளத்தை  வெளிப்படையாக காட்டி காட்சி தருவார்.

*ஆன்மாவின் வண்ணமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வண்ணமும் ஒரே தன்மை உடைய அருள் ஒளியாகிய பொன் வண்ணமாகும்*.

ஆன்மாவை  மாயா சக்திகளாகிய  ஏழு வண்ணங்கள் மறைத்துக் கொண்டுள்ளன.
அவைகள்தான் ஏழுதிரைகளாகும்.
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள  திரை மறைப்புகள் யாவும்  நீங்கினால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக நம்மை  மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உண்மை தெரியாமல் உலக வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா என்றால் எக்காலத்திலும் முடியவே முடியாது.

வள்ளலார் பாடல் !

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!

உலகில் உள்ள சாதி சமய மதங்கள் காட்டிய கொள்கைகளில்  சிறிதும்  எண்ணம் சொல்.செயல். உள்ளம் பற்றாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய தனிமனித.இந்திரிய..கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் மட்டுமே .ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் ஒவ்வொன்றாக விலகி ஆன்மாவின் *உண்மைத் தன்மையும் உண்மை வண்ணமும் வெளிப்படும்*.

ஆன்மாவின் ஒளித்தன்மை கோடி சூரிய பிரகாச வெப்பம் உள்ளது.அருள் பெறும் போது அவற்றைவிட பலமடங்கு அருள் பிரகாசம் உடையது.ஆனாலும் சுடாத தன்மை உடையது.

வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள்.
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சாதி சமய.மதக் கொள்கைகளை சுத்த சன்மார்க்க கொள்கையோடு  இணைத்து குழப்பம் செய்வதால் எந்த பயனும் பலனும் கிடைக்கப் போவதில்லை.

வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லுகின்றார்.

சாதி சமயச் சழக்கை விட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.!

 மேலும்.

*சாதி சம யங்களிலே வீதிபல வகுத்த*
*சாத்திரக்குப் பைகள் எல்லாம் பாத்திரம்அன் றெனவே*

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன் *மெய்ப் பொருளாம்*

*சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம்* *பதியைச்*
*சுத்தசிவ நிறைவை* *உள்ளே* *பெற்றுமகிழ்ந் தேனே*.!
என்னும் பாடலில் எளிய தமிழில் தெரிவிக்கின்றார்.

*எனவே நமது உள் ஒளியான ஆன்மாவின் வண்ணம். முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்*.  அதே வண்ணமாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

*அவற்றிற்கு தடையாக உள்ளது எதுவாயினும் அகற்ற வேண்டும்*

*பல பொய்யான வண்ணங்களை வணங்கியோ வழிபாடு செய்வதாலோ எந்தவிதமான லாபமோ பெற்றுக் கொள்ளவே முடியாது*.

நாம் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது என்பதை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்.

வள்ளலார் பாடல் !

குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்வமனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* அவற்றில்
புகுதாதீர் *சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்*

*செறித்திடு சிற் சபை* நடத்தைத் தெரிந்து துதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

மேலே கண்ட பாடலை பலதடவை படித்து தெரிந்து உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.

*பஞ்ச பூத வண்ணமான இவ்வுடம்பை ஆன்ம வண்ணமாக மாற்றுவதே சாகாக்கலை.சாகாக்கல்வி யாகும்*.

வள்ளலார் பாடல்.

பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்

என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்று காண் என்றாள்

கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்

வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.!

பொன்நிறம் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கலந்ததால் என் உடம்பும் பொன் நிறமானது.இதை உலக மக்கள் புரிந்து கொள்ளாமல் உள ளார்கள்.

பொய்யே சொல்லுகின்ற  அவர்கள் வாய் உண்மை உணர்ந்து  மெய் உரைக்கும்  காலம் விரைவில் வரும்.

*கொரோனோ வைரஸ் போன்ற தொற்று வருவதற்கு காரணமே மக்கள உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக நடத்தப்படும் இயற்கை உண்மையின்  செயல்பாடாகும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !:

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு