சனி, 25 ஜூலை, 2020

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை !

*நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை* !

இந்த உலக சிறைச்சாலையில் இருந்து எப்போது விடுதலைப் பெறுவது ?
எப்படி விடுதலை அடைவது ?

நாம் வாழும் இந்த உலகில் ஐந்து சிறைச்சாலைகள் உள்ளன !
நிலம்,நீர்,அக்கினி,
காற்று ,ஆகாயம்,என்னும் ஐந்து சிறைச்சாலை களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன. என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

நிலத்திலும் நீரிலும் தான் உயிர்கள் உள்ளன என்று நினைத்துக் கொண்டு உள்ளோம்.ஐந்து பூதங்களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன.என்பதை, வள்ளலார் தன் அருள் அனுபவத்தால் நேரில் கண்டு அறிந்து அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்துள்ளார் .

*அகவல் வரிகள்* !

மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா
அண் கொள அமைத்த அருட்பெருஞ்சோதி !

நீரிடை உயிர்பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருட்பெருஞ்சோதி !

தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்சோதி !

காற்றிடை உயிர் பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்சோதி !

வெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி !

என்று திருஅருட்பாவில் {அருட்பெருஞ்சோதி அகவல் }என்னும் தலைப்பில் ஐம்பூத இயல் வகையில் தெரியப் படுத்தி உள்ளார்; வள்ளலார் 

இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் தண்டனை தேகங்களாகும்.ஒவ்வொரு உயிர்களுக்கும் அதன் அதன் குற்றங்களுக்கு தகுந்தாற் போல்,தண்டனைத் தேகம் என்னும்  உடம்பு வெவ்வேறு விதமாகப் கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்காக உடம்பு கொடுக்கப்பட்டுள்ளன. எனவே உயிர்களின் சிறைச்சாலை என்பதாகும் !,{அதாவது தண்டனை தேகங்களாகும். }சிறைச்சாலையில் கொடுக்கும் வேலையை இயற்கைச் சட்டத்தை மீறாமல் செய்து கொண்டு இருக்கவேண்டும்.

உயிர்கள் குற்றம்,குறைகள் இல்லாமல்,முறை தவறாமல் தனக்கு இட்ட கட்டளைப்படி தன் பணியை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

*அதற்காக வழங்கப்படும் குடிக்கூலி
உணவாகும்*

தண்டனைக்கு தகுந்த *நியதி* ஆகாரம் என்னும் உணவு வழங்கப்படுகிறது .
உயிர்களுக்கு,கொடுக்கும் *நியதி* உணவை விடுத்து வேறு எந்த ஆகாரத்தையும் உண்ணக்கூடாது தண்டனைக்கு தகுந்த உணவை விட்டு, வேறு எந்த உணவை உண்டாலும் . அதற்கு தகுந்த பிறப்பு இறப்பு,என்பதை இயற்கையின் சட்டத்தின் வாயிலாக இந்த உலகில் வாழும் உயிர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்,

*தவறு செய்யும் ஆன்மாக்களுக்கு மன்னிப்பு நோக்குடன் ஒரு உயிர் உடம்பு கொடுக்கப்படுகிறது*.

இதேபோல் ஒவ்வொரு  ஆன்மாவிற்கும் ஏழு தடவை  உடம்பு மாற்றி மாற்றிக் கொடுக்கப் படுகிறது,

இவ்வுலகில் வாழும் உயிருக்கும் உடம்பிற்கும் உணவு யாரால் கொடுக்கப்படுகிறது என்றால் மாயை என்னும் அதிகாரியால் பஞ்ச பூதங்களின் உதவியால் பஞ்சபூத உணவு கொடுக்கப் படுகிறது .

*உயிர்களுக்கு எழு பிறப்புகள் உண்டு* !

ஏழு பிறப்புகளிலும்,மாயை கொடுத்த நியதி ஆகாரத்தை மாற்றம் இல்லாமல் புசிக்கும் போது,குறிப்பிட்ட காலத்தில்,தண்டனையில் இருந்து விடுதலைப் பெற்று,இவ்வுலகில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நியதி ஆகாரத்தை நிறுத்தி சிறையை விட்டு வெளியே செல்லுவதற்கு அருள் உணவு கொடுக்கப் படுகிறது.அடுத்து மேல் பிறவி கிடைக்கின்றது, இப்படி ஏழு வகையான பிறவித் தோற்றங்கள் ஏழு,ஏழு பிறப்புகளாக வெவ்வேறு உடம்பு கொடுக்கப்படுகிறது. இதுபோல் பலகோடி பிறப்புக்கள் எடுத்து இறுதியில் இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது.

இதில் ஏதாவது இயற்கை சட்டத்திற்கு மாறாக செயல் பட்டால் மறுபடியும் கீழ் பிறப்புக்கு தள்ளப் படுகிறது.இவை தாவரங்கள் முதல் மனித தேகம் வரை ஒரே சட்டமாகும். அதற்கு உண்டான தேகம் {உடம்பு } என்னும் தண்டனை தேகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் .அதே சமயத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி இன்றி எந்த ஜீவன்களும் வெளியே செல்ல முடியாது .

எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லவும் முடியாது.
உடம்போடும் வெளியே போக முடியாது.

*ஏழு வகைப் பிறவி ! வள்ளலார் சொல்லும் உண்மை* !

இந்தத் தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு ,அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ,
ஒவ்வொரு பிறப்புக்கும் எவ் வேழு பிறப்பு உண்டு ,அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி, மேலேறி மறு பிறப்பு உண்டாம்.

ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் மண்ணில் மறைந்து இருந்து ,மறு கல்பத்தில் தோன்றி,இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்திலும் பிறந்து முடிவில் இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது என்கிறார்.

அதே போல் இத்தேகத்திற்கும் ஏழு பிறவிகள் உண்டு !

யாதெனில் ;--கற்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாய் இருப்பது

1,--அவயாதி உற்பத்தி காலம் ஒன்று ! 2,--பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று ! 3,----குழந்தைப் பருவம் ஒன்று ! 4,--பாலப் பருவம் ஒன்று ! 5,-----குமாரைப் பருவம் ஒன்று ! 6,---விருத்தப் பருவம் ஒன்று ! 7,---ஆகப் பிறவி ஏழு !7----இவ்வாறே தாவரம் முதல் அனைத்து உயி்ர்களுக்கும் உண்டு ,

மேலும் இதில் ஸ்தூலப்பிறப்பு-7சூட்சுமப் பிறப்பு,7 காரணப் பிறப்பு ,7

ஆதலால் ,மேற் குறித்த ஸ்தூலப் பிறப்பு ,சூட்சுமப் பிறப்பு யாது எனில் ?

ஜாக்கிரம்,,1-சொப்பனம்,2, சுழுத்தி ,3,--ஜாக்கிரத்தில் சொப்பனம்,4,ஜாக்கிரத்தில் சுழுத்தி ,5 சொப்பனத்தில் சொப்பனம்,6, சொப்பனத்தில் சுழுத்தி ,7,ஆகப் பிறவி ஏழு 7,

காரணப் பிறப்பு என்பது ;--மனோ சங்கல்பங்கள் எல்லாம் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் .

ஆதலால் பிறவிக்குக் காரணம் நினைப்பு,மறைப்பு,அது அற்றால் பிறவி இல்லை,!நினைப்பு மறைப்பு எப்போது நீங்கும் என்றால்? பொருள் உணவு உட்கொள்ளாமல் அருள் உணவு உட்கொண்டால் நினைப்பு மறைப்பு நீங்கும்.

அந்த தகுதியைப் பெற்ற ஆன்மாக்களுக்கு,
நினைப்பு மறைப்பு அற்று உண்மை அருள் அனுபவம் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும்.

*மனிதப் பிறப்பு என்பது ஆறாவது பிறப்பு என்பது அறியாமையாகும்*

மனிதப் பிறப்பு என்பது ஏழாவது பிறப்பாகும் ,

பிறப்பின் தோற்றம் எப்படி எனில் ?

1,--புல் ,புண்டு,மரம்,-செடி.கல்,மண்,
போன்ற பிறப்புகள் ,

2,--எறும்பு,செல்,புழு,--பாம்பு,உடும்பு,பல்லி,--தவளை,சிறுமீன் ,
முதலை,சுறா. திமிங்கலம்,போன்ற பிறப்புகள்

3,ஈ ,வண்டு,தும்பி,குருவி,காக்கை,பருந்து,கழுகு,போன்ற பிறப்புகளும்,

4,அணில்,குரங்கு,நாய்,பன்றி,பூனை,ஆடு,மாடு,யானை,குதிரை,புலி,கரடி,சிங்கம்-போன்ற பிறப்புகளும்,

5,பசாசர்,பூதர்,இராக்கதர்,அசுரர்,சுரர்-போன்ற பிறப்புகளும்,

6,காட்டகத்தார்,கரவு செய்வார்,கொலை செய்வார்,.போன்ற பிறப்புகளும்,

7.அழியாப் பெருவாழ்வைப் பெறுவதற்குறிய உயர்ந்த அறிவு உடைய *மனித தேகம்* ஏழாவது பிறப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஏழு பிறப்பு,தோற்றங்களிலும். ஏழு பிறப்பிலும் மனித பிறப்பு உயர்ந்தது, இந்த பிறப்பு கொடுத்ததின் நோக்கம்,தன் ஏழாம் அறிவைக் கொண்டு உண்மையை அறிந்து ,இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து,வெளியே செல்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

*இதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார்*.

இந்த சிறையில் இருந்து எப்படி வெளியேறுவது ?இந்த பிறப்பு.இறப்பை  எப்படி தவிர்ப்பது நிறுத்துவது ? என்றால் ?

பரோபகாரம் ,சத் விசாரம் என்னும் இவ்விரண்டாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்ரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று,
மேற் குறித்த குற்றம் நீங்கி கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலை பெற வேண்டும்.

இந்த உண்மை தெரியாமல்.
உயிர்கள்,மற்றும் மனிதர்கள் யான்,எனது என்னும் தேக சுதந்தரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,என்னும் சுதந்தரத்தை வைத்துக் கொண்டு,தனக்கே எல்லாம்  சொந்தம் என்று எண்ணி அனுபவித்து அவதிக்கு உள்ளாகி மாண்டு போகிறார்கள்.

இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் உலகத்தில் உள்ள  அழிவுள்ள எந்த பொருளையும் அனுபவிக்காமல்.
அழியாப் பொருளானஅருளை மட்டுமே அனுபவிக்க வேண்டும்.

*ஏன் மனித தேகத்திற்கு மட்டும் உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டது  என்பதை சிந்திக்க வேண்டும்*.

*கடவுளின் தகுதிகள் யாவும் மனிதனுக்கு உண்டு*

மனிதனுக்கு மட்டும் எதையும் அறியும் அறிவும் ,சிந்திக்கும் திறனும் ,பேசும் திறனும்,எது நல்லது,? எது கெட்டது ? என்பதை அறிந்து தெரிந்து கொள்ளும் அறிவுத் திறனும்.செயல்படுத்தும் திறனும் இயற்கையினால் மனிதனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.அதனால் தான் மனிதப் பிறவி உயர்ந்த பிறவி,உயர்ந்த அறிவு உள்ள பிறவி என்பதாகும்.

இதை உணர்ந்து முதலில் மனிதன் மனிதனாக,வாழவேண்டும்.மனித வாழ்க்கை வாழ வேண்டும்.

மனிதன் ஆசை,காமம்,வெகுளி,மயக்கம்,சுய நலம்,பேராசை போன்ற ஆசைகளும்.மற்றும் மண்ணாசை,பெண்ணாசை,
பொன்னாசைகளை கனவில் கூட பற்று வைத்து வாழக்கூடாது

மனிதனின் அறியாமை செயல்கள்.

எதைப் பற்றியும் கவலைப் படாமல்,மனிதனை மனிதன் ஏமாற்றிக் கொள்ளை அடிப்பதும்,
கொலைகள் செய்வதும்,
வாயில்லாத ஜீவன்களை,குழந்தை போல் வளர்த்து பணத்திற்காக விற்பதும். அந்த உயிர்களைக் கொன்று கொலை செய்து ,அதன் புண் புலாலை{இறைச்சியை } உணவாக உண்டு பசியை போக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன வென்று சொல்வது ? அறியாமை என்று சொல்வதா ? கொலைக்கார்ர்கள் என்று சொல்வதா ?

இவைப் போன்ற கொடூரமான கொலைக் குற்றம் செய்பவர்களை மனிதன் என்று எப்படி சொல்ல முடியும்?.

*இதற்காகவா மனிதன் என்ற உயர்ந்த பிறப்பு கொடுக்கப் பட்டது.*?

*சிறையிலே வாழ்ந்து கொண்டு சிறையிலே உள்ள உயிர்களை கொல்லுபவனுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது ? அறிவு படைத்த மனிதர்கள் சிந்திக்க வேண்டும்*.

குற்றம் செய்பவர்களை கண்டு பிடித்து ,குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கும் சட்டம், மனிதர்களாலே உருவாக்கப் பட்டு உள்ளது.அதற்கு காவல்துறை என்றும். நீதி மன்றம் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.அங்கும் மனிதர்கள் தான் நீதிமான்கள். அந்த நீதிமான்களும் குற்றவாளி களாகவே இருக்கிறார்கள்.
அவர்களும் மண்ணாசை.பெண்ணாசை.பொன்னாசை. பேராசை,பெருமோகம், மற்றும் சுயநலம் உள்ளவர்களே என்பது அனைவருக்கும் தெரியும்.

குற்றம் செய்பவர்களை சட்டத்தின் வாயிலாக  குற்றம் உறுதிப் படுத்தப் பட்டு ,தண்டனைக் கொடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும், இடம் தான் சிறைச்சாலை.

இவை மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிறைச்சாலை யாகும். *குற்றவாளிகளை தனிமைப் படுத்தும் இடம்தான் சிறைச்சாலை என்பதாகும்*.

உலகமே ஒரு சிறைச்சாலை,!அதனுள் மனிதனுக்கு மனிதன் தண்டனைக் கொடுத்து,தனிமைப் படுத்துவதும் தனி ஒரு சிறைச்சாலை.

இந்த உலகத்தில் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளே தண்டனைக் கொடுக்கும் நிலை
உருவாகி யுள்ளது,இதை மூடத்தனம் என்பதா ?முட்டாள் தனம் என்பதா ?அறியாமை என்பதா? சுயநலம் என்பதா?நியாயம் என்பதா ?அநியாயம் என்பதா ? என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

*வாய் பேசாத உயிர் இனங்கள்*

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை என்பதை உணராத அறிவு படைத்த மனிதர்கள்.
தண்டனை தேகங்களான,வாய் பேசாத, எதிர்த்து வாதம் செய்ய முடியாத ஆடு.மாடு்கோழி.பன்றி மீன். போன்ற அப்பாவியான உயிர்களைக் கொன்று உணவாக உண்பது எவ்வளவு பெரிய குற்றமாகும்.

*இறைவன் இந்த உலகத்தையும் உயிர் இனங்களையும்.
படைத்து,அவைகள் அனைத்திற்கும் தேவையான பல வகையான தாவர உணவுகளையும் படைத்து உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு எடுத்தவர்கள்,இயற்கையையும்,மற்ற ஜீவராசிகளையும்,பாது காத்து வாழ வைப்பதற்காக படைக்கப் பட்டது தான்,உயர்ந்த அறிவுப பெற்ற மனிதப் பிறப்பாகும்

*தாவரங்களும் உயிர்கள்தான்* !

தாவரங்களும் உயிர்கள்தானே அதைப் புசிப்பதும் {உண்பதும் }குற்றம் இல்லையா ? கொலை இல்லையா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு உள்ளது. கேள்வி நியாயம் தான்.அதற்கு

 *வள்ளலார் சொல்லும் பதில்* .

மரம் ,புல்,நெல்,முதலான தாவரங்களும் உயிர்கள் தான்.அவைகளை இம்சை செய்து ஆகாரம் கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரம்தான்;அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷம்தான். ஆனாலும் அப்படி அல்ல.

மரம்,புல்,நெல் முதலான ஜீவர்கள் பரிசம் என்கிற ஓரறிவு உடைய ஜீவர்கள ஆனதாலும் ,
அவ்வுடம்பில் ஜீவ விளக்கம் *ஒரு சார்* விளங்குவதாலும் ,
அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சடமாதலாலும்,அவ் வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக் கூடுமாதலாலும்,

அவ்வுயிர்களை வேறு செய்யாமல்.-அவ்வுயிர்கள் இடத்து உயிர் இல்லாமல் ,உயிர் தோன்றுவதற்கு இடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் ,
காய்கனிகளையும், பூக்களையும்,பழங்களையும், தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வது தவறு இல்லை என்கிறார் .இன்னும் விரிக்கில் பெருகும்.

மேலும் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.தாவரங்களில் இரத்தம் என்னும் ஐந்து  பூத, கலவை இல்லை .நீர் மட்டும்தான் உள்ளது.இதன் விபரம் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் .

அதையும் உயிருடன் பிடுங்கி எடுத்து உணவாக உட்கொள்ளக் கூடாது.பூ,காய்,கனி,-இலைகள்,கிழங்கு வகைப் போன்ற வற்றை உணவாக உட்கொள்ளலாம்,

நம் உடம்பில் தோன்றும்,சுக்கிலம்,நகம்,ரோமம்,முதலியவைகளை நீக்கும் போது ,இம்சை உண்டாகாதது போல்; இம்சை உண்டாகாத படியாலும்,தாவரங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லாத படியாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல ,துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல , அதனால் அது ஜீவ காருண்ய விரோதமாகாது. என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார்.

அறிவுத் தெளிவைக் கொண்டு அறிந்து ,தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விபரம் {ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் .}   

*வாய் இல்லாத ஜீவன்கள்* !

மனிதன் மற்றவர்களிடம் இருந்து ,எவ்வித தந்திரம் செய்தாவது பொருளை சம்பாதிக்கிறான்.அதை வைத்து ஆனந்தமாக வாழ்வதற்கு விரும்புகிறான்.
ஆனால் வாயில்லாத ஜீவ ராசிகள் நம்மிடம் இருந்து எதையாவது,விரும்புகிறதா ?

அவைகள் நம்மை என்ன கேட்கிறது ? வசிக்க வீடு,இருக்க இடம்,உடுக்க உடை,அணிய ஆபரணங்கள்,
செலவு செய்ய பணம் ,பொழுது போக்க,சுற்றுலா செல்ல மேலும் ஆடம்பரமான வாழ்க்கை என்று எதையாவது கேட்கிறதா ?

நாங்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வண்டி, வாகனம்,,ஏதாவது கேட்கிறதா? எதுவும் கிடைக்கவில்லை என்று , நம்மை தொந்தரவு செய்கிறதா ?

நாம் உண்ணும உணவைப் பிடுங்கி உண்ணுகிறதா ?நமக்குத் தெரியாமல் நம்மை ஏமாற்றி எடுத்துக் கொண்டு செல்கிறதா ?கொலை,களவு செய்கிறதா? நம்மைப் போல் பொய் பேசுகிறதா ? இல்லவே இல்லையே !,எதையும் நம்மிடம் இருந்து எதிர்ப பார்க்காமல்.
இறைவன் கொடுத்த, *நியதி* ஆகார* உணவை உண்டு கொண்டு வாழும் வாயில்லாத ஜீவன்களை !
துன்பப் படுத்துவது எந்த வகையில் நியாயம் ?

எங்கெங்கோ அலைந்து திரிந்து ,தானே தேடிய உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. அவைகளை இரக்கம் இல்லாமல் கொன்று தின்பது மனித செயலா? மனிதாபமான இரக்க குணமா ? இவை எவ்வளவு பாபச்செயல் என்பதை அறிவு உள்ள மனிதன் அறிந்து கொள்ள வேண்டாமா ? இவை எவ்வளவு பெரிய  குற்றமாகும். இந்த குற்றங்களை எந்த சட்டத்தில் பதிவு செய்வது ? இந்த குற்றங்களை பதிவு செய்ய எந்த காவல் நிலையம் செல்வது ? விசாரிக்க எந்த நீதி மன்றம் செல்வது ? இந்த குற்றங்களை விசாரிக்கும் நீதிமான்கள் யார்?

*இந்த குற்றங்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது?,இந்த கொலைக் குற்றவாளிகளை எந்த சிறையில் அடைப்பது.?*

*இதற்கு எல்லாம் யார்க் காரணம்*

பல்லாயிரம் ஆண்டுகளாக, சாதி,சமயம், மதம்,இனம்,நாடு.மொழி போன்ற,அமைப்புகளை உருவாக்கிய
ஆன்மீகவாதிகளும் அவர்கள் செய்த சூழ்ச்சிகளும்,
அவர்கள் படைத்த கடவுள்களும்,
கடவுளால் உண்டாக்கப்பட்ட வழிப் பாட்டு முறைகளும்,

அவர்களால் உருவாக்கப் பட்ட, சாதி.சமய,மதச் சடங்குகளும், சாத்திரங்களும்,
கோத்திரங்களும்,
பரிகாரங்களும், அவற்றிற்கு காரணமான வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.இதிகாசங்கள்.சாத்திரங்களும் அவைளின் மூலமாக படைக்கப்பட்ட கற்பனைக் கதைகளும்.கற்பனைக் கடவுள்களுமேயாகும்.

அந்தக் கடவுள்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கும் கொடுமையான பழக்க வழக்கங்களையும் உருவாக்கி உள்ளார்கள்.

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்*.!

*நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்குற்றேன்

கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் !

மேலும்.

துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போது எல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போது எல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும்!

என்று தன் உள்ளக் குமறலை வெளிப்படுத்தி உள்ளார் ! ஆன்மீக சிந்தனை உள்ள எந்த அருளாளர்களாவது இப்படி சிந்தித்து உள்ளார்களா ? இந்த ஆன்மநேயம் யாருக்காவது இருந்தது உண்டா ? தோன்றியது உண்டா ?

 இப்படிப்பட்ட சமய,மதவாதிகளை,
அருளாளர்கள் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? கருணை இல்லாதவர்களை எப்படி அருளாளர்கள் என்று சொல்ல முடியும் ? சிந்திக்க வேண்டும் அன்பர்களே !

அறிந்து செய்த குற்றங்கள் !அறியாமல் செய்த குற்றங்கள் !
 
மேலே கண்ட கொலைக் குற்றங்களை அறிந்து செய்வதால்,அறியாமல் செய்வதால் கிடைக்கும் இயற்கை கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா ?

 அறியாத செய்த குற்றங்களினால்

நிலத்திலும்,நீரிலும்,நெருப்பிலும் ,காற்றிலும், வெளியிலும்,உயிர்கள்,துன்பம் துயரம்,அச்சம்,பயம்,மரணம்,போன்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் !,

தண்டனை பெற்ற உயிர்களை தண்டனைப் பெற்ற உயிர்களே !--கொன்று உணவாக உட் கொள்வது எவ்வளவு பெரிய குற்றமாகும்.இதற்கு இயற்கை என்னும் இறைவன் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?மரணம் தான் பெரிய தண்டனை யாகும் .பாவத்தின் சம்பளம் மரணம்.

தெரிந்து செய்த குற்றங்கள்,தெரியாத செய்த குற்றங்கள் என இரண்டு பிரிவுகள்,உள்ளன அவை மனதால்,வாக்கால்,-தேகத்தால் பதிவாகின்றன.

தெரியாமல் செய்த குற்றங்களுக்கு தண்டனைக் குறைவு ,குற்றங்கள் செய்த பிறகு குற்றம் என்று தெரிந்த பிறகும்,இனிமேலும்,குற்றம் செய்ய மாட்டேன் என்று உறுதிக் கொண்டு ,இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அந்த மன்னிப்பு என்ன வென்றால்.
இறைவனை நினைந்து,உணர்ந்து,உண்மை ஒழுக்கமுடன்,ஒரே நினைவில் நின்று உண்மையான திருஅருட்பாடல்களை பாராயணம் செய்தலும்,தோத்திரம் செய்தலும்,ஜீவர்களுக்கு உண்டாகும்,பசி,பிணி,கொலை-பயம்,இச்சை,எளிமை,போன்ற துன்பங்கள் வரும்போது, நம்மால் முடிந்த வரை,அந்த துன்பத்தை போக்க வேண்டும்,இவையே மனித செயல்களாகும்.

தெரிந்து செய்த குற்றங்களுக்கு அதிக தண்டனை கொடுக்கப்படுகிறது,அவை என்ன
தெரியுமா ?

மனதால் செய்யும் குற்றங்களுக்கு சண்டாள தேகம் என்னும்,கரடி,புலி,-சிங்கம்,போன்ற மிருக தேகம் கொடுக்கப் படும்.வாக்கால் செய்யும் குற்றங்களுக்கு ஆடு,மாடு,பன்றி,குதிரை,நாய்,
போன்ற மிருக தேகங்கள் கொடுக்கப் படும்.

தேகத்தால் செய்யும் குற்றங்களுக்கு மரம், செடி, கொடி போன்ற தேகம் கொடுக்கப்படும்.
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு மீண்டும் குற்றம் செய்யாமல் இருக்க இடைவிடாது, இறைவனை நினைந்து,நினைந்து,உணர்ந்து,உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுவும் போக, ஆதரவு அற்ற ஏழைகள் இருக்கும் இடம் தேடி அவர்களது பசியைப் போக்க வேண்டும்.அங்கப் பழுது உள்ளவர்களுக்கு தொண்டு செய்யவேண்டும் .

மீண்டும் உயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டி.உயிர்க் கொலை செய்ய கொண்டு போகும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.மேலும் உயிர்களின் மேல் நாம் காட்டும்,இரக்கம், அன்பு,தயவு,கருணை,
இவைகளால்.குற்றத்திற்கு உண்டான தண்டனைக் குறைக்கப் படும்.

 இதைச் செய்யத் தவறினால் இதற்கு உண்டான தண்டனை அகால சோகமான மரணம் தான்.

அடுத்து சண்டாள தேகங்களை இயற்கை, கொடுத்துக் கொண்டே இருக்கும்.எப்போதும் பிறந்து பிறந்து,இறந்து இறந்து,தேகத்தை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

*உலகை ஆளும் குற்றவாளிகள்* !

இந்த உலகை ஆட்சி செய்வதற்கு என்று சில பல குற்றவாளிகள்,உள்ளார்கள்.குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தேர்ந்து எடுத்து ,உலகை ஆண்டு கொண்டு உள்ளார்கள்.
அவர்கள் செய்யும் குற்றங்கள் அளவிட முடியாதவை.குருடனும் குருடனும் குருட்டு ஆட்டம் ஆடி குழியில் விழுந்தார்கள் என்பது போல் உள்ளது,

இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட, காலம் வந்து கொண்டிருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை. அளவில் அடங்காதவையாக இருக்கும் .

*அணு ஆராய்ச்சி* !

இந்த உலகத்தில் உள்ள அணுக்கள் என்னும் பொருட்களை வைத்துக் கொண்டு ,அறிவியல் ,விஞ்ஞானம் ,வேதியல் ,போன்ற ஆராய்ச்சிகள் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டிருக்கிறது .அவர்களால் கண்டு பிடிக்கும் அணுக்கருவிகள்.அக் கருவிகளின் செயல்பாடுகளை அதிசயம் என்றும், புதிய கண்டு பிடிப்புகள்  என்றும், பறை சாற்று கிறார்கள், இங்கு உள்ளதைக் கொண்டு எதையும் சாதித்து விடமுடியாது, இறைவனால் படைத்த இந்த உலகத்தில் உள்ள  சிறிய கருவிகளை  வைத்துக் கொண்டு , எதையும் முழுமையாக கண்டு பிடிக்கவும் முடியாது.

உண்மையைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் எவரிடமும் இல்லை .சாதாரண மனித அறிவைக் கொண்டும் ,படிப்பு அறிவைக் கொண்டும் உண்மையை அறிந்து கொள்ள இயலாது.

மேலும் ஆராய்ச்சி எனற பெயரில் ,மக்கள் பணத்தை வீண் விரையம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
செவ்வாய் கிரகதிற்கும் ,சந்திர மண்டலத்திற்கும்,
ராக்கெட்,விண்கலம் போன்ற  அணு இயந்திரக் கருவிகளைக் கொண்டு,ஆராய்ச்சி செய்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறார்கள் .செவ்வாய் கிரகத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்தோம் என்றும் ,அங்கும் மக்கள் சென்று வாழலாம் என்றும் ,பொய்யான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .
ஒரு சில உலக நாடுகள்,விஞ்ஞானம்,அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் போட்டிப் போட்டுக் கொண்டு மக்களின் பணத்தை விரையம் செய்து கொண்டு வருகிறார்கள.

இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு , ஒரு கூட்டம்,ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறது .

உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஆஹா ,,ஓகோ என்று போற்றுகிறோம் .நம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து அனுபவித்து, உலக உண்மை அதிசயங்களை ஒன்று விடாமல் கண்டு பிடித்து உலக மக்களுக்கு தெரிவித்த , அருள் ஞான வள்ளலாரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ,

நம் தமிழ் நாட்டில் படித்தவர்கள் இல்லையா ?அறிவாளிகள் இல்லையா ?அறிஞர்கள் இல்லையா ?அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் இல்லையா ? வள்ளலார் எழுதி வைத்துள்ள அருட்பாவை யாரும் படிக்க
வில்லையா ?படிக்கும் தகுதி எவருக்கும் இல்லையா ?

இனிமேலாவது படித்து அறிந்து தெரிந்து கொள்வார்களா ? என்பது தெரியவில்லை,

அழிந்து போகிறவர்கள் ( மரணம் வருபவர்கள் ) கண்டு பிடித்தது எல்லாம் பொய்யானதுதான் ,அழியாத தேகம் ( மரணத்தை வென்றவர்கள் ) படைத்தவர்கள் கண்டு பிடித்தது எல்லாம் உண்மையாகும் ,

அருள் தேகத்தை பெற்று கண்டு பிடித்தது என்றும் அழியாத உண்மையாகும்.
அதுவே உண்மையான கண்டு பிடிப்பாகும் .

*அருள் அறிவு*

அருள் அறிவைக் கொண்டு தான் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும் ! .அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம்! ஆனால் காட்ட முடியாது.
அவரவர்களே அருள் அனுபவித்தால்தான் அறிந்து கொள்ள முடியும்,உணரமுடியும்.இதுவே உலக ரகசியமாகும்.

இதை வள்ளலார் அனுபவத்தால் அறிக என்கிறார்.அனுபவத்தால் அறிந்தால் விளங்கும் என்கிறார் !

கண்டு பிடித்தவனும் சாகிறான் ,கண்டு பிடிக்காதவனும் சாகிறான் ,கண்டு பிடித்தவன் அடைந்த லாபம் என்ன ?கண்டு பிடிக்காதவன் அடைந்த லாபம் என்ன ?அனைவருக்கும் மரணம் தான் இறுதி முடிவாக இருக்கிறது.

 மறுபடியும் பிறப்பு,மறுபடியும் இறப்பு ,என்னும் தொடர்கதை நீண்டு கொண்டே இருக்கிறது .இவற்றால்  மனிதர்கள் அறிந்த உண்மைதான் என்ன ?

பொய்யைக் கொண்டு பொய்யை கண்டு பிடிக்கிறார்கள்.
யாவும் பொய்யே ! இவர்களின்  அணு ஆயுதக் கண்டுபிடிப்புகள் யாவும் உயிர்களை அழிக்கத்தான் கண்டு பிடித்து உள்ளார்களே தவிர, உயிர்களைக் காப்பாற்ற எதையும் கண்டு பிடிக்கவில்லை ,

இவர்கள் *அறிவியல் ஆராச்சியால், ஒரு உயிரை உண்டாக்க முடியுமா?* இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல இதுவரைக்கும் யாராவது,
எதையாவது கண்டு பிடித்து இருக்கிறார்களா ?யாரும், எதையும் கண்டு பிடிக்க வில்லை .{வள்ளலாரைத் தவிர }

இன்றைய விஞ்ஞானிகள் மட்டும் அல்ல !அன்றைய அருளாளர்களும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் வள்ளலார் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை

விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே

அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒரு வறேனும் அளவு கண்டார் இலையே

துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்கப் படுமோ !

என்கிறார் வள்ளலார் .இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தையும்.உலகத்தில் உள்ள  பொருள்களையும் வைத்து .உலகத்தை இயக்கும் ஆற்றல்களையும் {சத்தி }தேடித்தேடி அலைந்து அலைந்து ,அளந்து அளந்து ,அளக்க முடியாமல்,அவர்கள் அளக்கும் கருவிகள் தேய்ந்ததே ஒழிய அளவு காண முடியவில்லை மேலும் வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற சிறிய தேக கரணங்களைக் கொண்டு,சிறிய அருளைப் பெற்று,அந்த சிறிய அருள்  என்னும் கருவிகளைக் கொண்டு அளந்தார்கள் .அருள் என்னும் கருவிகள் தான் தேய்ந்ததே ஒழிய உண்மையான அளவு காண முடியவில்லை.

அவர்களுக்கு சொல்கிறேன், எனக்கு தெரிந்த உண்மையில் ஒரு சிறிய அளவு சொல்கிறேன் அதையாவது வைத்துக் கொண்டு இவர்களால் துணிந்து அளக்க முடியுமா ? என்று சவால் விடுவது போல் சொல்லுகிறார் வள்ளலார்.
இவர்களால் ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது என்கிறார் .

அவர்களாலே முடியவில்லை என்றால் இந்த அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களால் எந்த உண்மையைக் கண்டு பிடிக்க முடியும் .இவர்களே தண்டிக்கப்பட்ட சிறைச்சாலையில் உள்ளவர்கள் இவர்களுக்கு அருள் என்னும் உண்மையை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்.   

இந்த உலகத்தில் ஒரு உயிரை அறிவியல் மூலமாக,விஞ்ஞான மூலமாக,வேதியல் மூலமாக,அணு ஆராய்ச்சி மூலமாக 
 உருவாக்க முடியுமா ? என்றால் முடியாது !

இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து, ஆன்மாவை உயிர்களை உண்மையான வீட்டிற்கு,அதாவது உண்மையான விலாசத்திற்கு, செல்லும் வழியைக் கண்டுப் பிடிப்பதே உண்மையான கண்டு பிடிப்பாகும் !. {இங்கு உள்ள ஆன்மாக்கள் எல்லாம் விலாசம் தெரியாத ஆன்மாக்கள்}உண்மையான விலாசத்தைக் -- கண்டுப் பிடித்து சென்றவர் வள்ளலார் ஒருவர்தான் .அவர் கண்டுபிடித்த,உண்மையான விலாசத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளார் ,

அந்த விலாசத்தை வைத்துக் கொண்டு தேடினால் கிடைக்காது.அவர்போல் வாழ்ந்தால் தான் கிடைக்கும்,வேறு எந்த வழியாலும் கிடைக்காது ,--இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படும்! .எங்கு இருந்து வந்தோமோ அங்கு செலவதுதான் உண்மையான கண்டு பிடிப்பாகும்.

இந்த சிறைசாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,என்ன வென்றால் எல்லா ஆன்மாக்களிலும் அமுதம் என்னும், *அரும் பெரும் பொருள்* இறைவனால் ஆன்மா என்னும் உள் ஒளியில வைக்கப்பட்டு உள்ளது ,அவற்றை அறிந்து,தெரிந்து,
நினைந்து நினைந்து,உணர்ந்து உணர்ந்து ,அந்த *அருள் அமுதை* எடுத்து உண்ணும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் .அந்த *அருள் அமுதம்* கிடைத்தால் நமக்கு பொருள் உணவு தேவைப்படாது.!அருள் அமுதை உட்கொண்டவர்கள் ,இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் ,

அருள் அமுதைப் பெறும் வழியை அறிந்து கொள்வதுதான் *அருள் அறிவு* என்பதாகும்.அதுவே சாகாக்கலை,என்னும் சாகாக்கல்வி யாகும்.

அந்த அருள் அறிவைப் பெரும் வழிதான் என்ன வென்றால் ?

 இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்கங்களையும் மனிதன் கடைப்பிடித்து ,முழுமைப் பெற்று பரிபூரணம் அடைந்து ஆன்மாவில் நிறைந்து,பின் எல்லா உயிர்களையும் தம் உயிர்ப்போல் என்னும், ஆன்மநேய ஒருமைப் பாடு என்னும், *ஒருமையில்* உயிர் இரக்கம் என்னும் .அன்பு.
தயவு,கருணை போன்ற செயல்களில், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ,
அருள் அறிவு புலப்படும் அந்த அறிவைக் கொண்டு அருள் என்னும் அமுதம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும்.அறிந்து கொண்டாலும் அவ்வளவு எளிதில் அந்தக்கதவு  திறக்கப்பட மாட்டாது.ஆன்ம
பரிசோதனை செய்து ,அதிலும் வெற்றிப் பெற்றால்தான் அந்த அருள் வைத்திருக்கும் பெட்டித் திறக்கப்படும்.

அப்படி அறிந்து கொண்டவர் வள்ளலார் ! ,தெரிந்து கொண்ட பிறகும் பெட்டியைத் திறக்க முடியவில்லை அந்தப் பெட்டி உள்ள இடம் நம்முடைய சிறநடுவில் உள்ள சிற்சபை என்னும் {ஆன்மா }இடமாகும்.அங்கு வைக்கப்பட்ட பெட்டியை *அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் கருணையால் மட்டும்தான் திறக்கப் படும் என்பதை உணர்கிறார் ! அவர் ஆண்டவரை எப்படி அழைக்கிறார் என்பதை பின் வரும் பாடலில் பாருங்கள் .

*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!*

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு
இது நீ
பெருக என அது திறக்கும் பெருந் திறவுக் கோலும்

எட்டும் இரண்டும் தெரியாதே என்கையிலே கொடுத்தீர்
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்

அட்டிசெய நினையாதீர் அரைக் கணமும் தரியேன்
அரைக் கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக

வட்டியிட்டு உம்மிடத்தே வாங்குவன் உம் ஆணை
மணிமன்றில் நடம் புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !

 அருட்பேருஞ்ஜோதி ஆண்டவர் விரைந்து வந்து பெட்டியைத் திறக்க வேண்டும் .காலதாமதம் செய்தால் ,
ஒவ்வொரு வினாடிக்கும் உம்மிடம் வட்டி போட்டு வாங்குவேன் என்பதை இறைவனுக்கே சவால் விடுகிறார். சத்தியம் வைத்து விரைந்து வரவேண்டும் என்று.
இறைவனுக்கே ஆணையிடுகிறார்.--அந்த அளவிற்கு ஆன்ம பரிசோதனையில் வெற்றிப் பெறுகிறார் .

இறைவன் வள்ளலார் கட்டளையை ஏற்று உடனே வந்து *அருள் அமுதம்* வைத்துள்ள பெட்டியைத் திறந்து விடுகிறார் . இதேபோல் மனிதனாக பிறந்த அனைவருக்கும் கிடைக்கும் என்கிறார் வள்ளலார் .

அருள் அமுதம் உள்ள பெட்டி {ஆன்மா }திறந்த பிறகு,அதில் உள்ள அமுதம் உடம்பு முழுவதும் சென்று ,அருள் உடம்பாக மாற்றம் அடையும், பின்பு மாயையால் கட்டிக் கொடுக்கப் பட்ட,ஊன் உடம்பை அழிக்காமல். சிந்தாமல்,சிதறாமல்,பின்னப்படாமல், தனித்தனியாக பிரித்து--{பஞ்ச பூத அணு உடம்பை }மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்,பின் பஞ்ச பூத அணுக்கள் எப்படி சேர்ந்ததோ !அப்படியே பிரித்து எடுக்கப்படும்.பின்பு அருளின் கருணையால்,ஊன உடம்பு, ஒளி உடம்பாக மாற்றம் செய்து கொடுக்கப்படும் .
ஒளி உடம்பைப்  பெற்றுக் கொண்டவர்களை, இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியே மரியாதையுடன், *மாயையால்* அனுப்பி வைக்கப்படும் .

ஆன்மா உடம்பு இல்லாமல் வாழ முடியாது !,உடம்பு இல்லாமல் இருக்க முடியாது ! உடம்பை அழிக்கக் கூடாது.உடம்பை அழியாத,பொன்னு உடம்பாக மாற்ற வேண்டும்.-அதுவே ஆன்மதேகம் அடுத்து சுத்த தேகம்.அடுத்து  பிரணவதேகம்.அடுத்து ஞானதேகம். அந்த பொன்னுடம்பை,ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.ஒளி உடம்பாக மாறும்போதுதான்,
சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ,அழிவற்ற தேகம் கிடைக்கும்.அந்த ஒளி உடம்பு கிடைத்த பின்புதான் ,--இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியேற முடியும்.அதன் பின் அந்த ஒளி உடம்பு எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த உலகத்தில் உள்ள பொய்யான ,சாதி,மதம்,சமயம் போன்ற எந்த செயல்களிலும் பற்று வைக்காமல் .நம்மை அனுப்பிய இறைவனையே நினைந்து உணர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் .இறைவனின் அன்பும் கருணையும் நமக்கு கிடைக்கும் -மறைந்து கிடக்கும் அருள் அமுதம் உள்ள பெட்டியைத் , திறக்க ,இறைவன் வழிக் காட்டுவார் .திறந்து அதில் இருந்து சுரக்கும் அருள் அமுதை உண்டு, ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு .இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற முடியும் .

 அமுதத்தால் உடம்பு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை வள்ளலார் *அருட்பெருஞ்ஜோதி அகவலில்* பதிவு செய்து உள்ளதைப்  பாருங்கள் !

தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கு இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள்இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித்து ஒரு திரளாயிட

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

மெய் எலாம் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறு ஆன்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

உலகெலாம் விடயம் உள வெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட

என்னுளத்து எழுந்து உயிர் எலாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுது உணவே
என்னுளத்து எழுந்த என்னுடைய அன்பே!

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம் எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனதுருவை
இன்புருவாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளம் கலந்த என்தனி அன்பே

தன் வசமாகித் ததும்பி மேற் பொங்கி
என் வசம் அடைந்த என்னுடை அன்பே

தன்னுளே பொங்கிய தண் அமுத உணவே
என்னுளே பொங்கிய என் தனி அன்பே !

என்று வள்ளலார் தான் அனுபவித்த அருள் அனுபவத்தையும் அருள் அனுபவத்தால் தன்னுடைய உடம்பு எப்படி மாற்றம் அடைந்தது என்ற உண்மைகளையும், மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார் .

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து வள்ளலாரைத் தவிர ,இந்த உலகம் என்னும், சிறைச்சாலையை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை .

மனிதனாகப் பிறப்பு எடுத்த அனைவரும் வள்ளலாரைப் போல் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்ல முடியும் என்பதை வாழ்ந்து வழிக் காட்டி உள்ளார் நமது அருட் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.           

இவற்றை எல்லாம் செய்யும் ஆற்றல் யாரிடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இந்த சிறைச்சாலையை நிர்வாகம் செய்யும் ஆற்றல் *மாயை*,* *மாமாயை* *பெரு மாயை* என்னும் ஆற்றல் மிகுந்த அணுக்களுக்கு அருட்பெரும்ஜோதி !ஆண்டவரால்  முழு உரிமை வழங்கப் பட்டு உள்ளது என்பதை அறிவுள்ள மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

இந்த சிறைச்சாலையைப் போல் பலகோடி,ஆண்டங்களில்,பலகோடிச் சிறைச்சாலைகளை உண்டாக்கி இயக்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி-அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி ! என்னும், *பேரருள்* அருட்பெருஞ்சோதி* அணுவாகும்.அவைதான் தனிப்பெருங் கருணையாகும் .

அந்த அருட்பெரும்ஜோதி என்னும்  அருள் அணுவைத் தொடர்பு கொண்டால் மாயை என்னும் அணு வழிக் காட்டும், மாயையின் காவலில் அதாவது நிர்வாகத்தில் உள்ள சிறைச்சாலையில்  இருந்து வெளியே செல்ல வேண்டுமானால்,---ஆண்டவரால் கொடுத்த அருள் அமுதம் என்னும் உணவை உண்டு,ஊன உடம்பை, ஒளி உடம்பாக மாற்றிய ஆன்மாவிற்கு. ஆன்மதேகம் கொடுத்து தனித்து இருக்கும் போது இந்த சிறைச்சாலையில் இருந்து,அளவில்லா மதிப்பு மரியாதையுடன், பாராட்டு பெற்று வெளியே அனுப்பி
வைக்கப்படும் ,

அருள் என்னும் அமுதத்தை கண்டு பிடித்து.அதை யார் புசிக்கிரார்களோ அவர்களை மட்டும் தான் மாயை என்னும் அணு சிறையில் இருந்து வெளியேற்றும்.
மாயைக்கு இவ்வளவு அதிகாரம் உண்டா ? என்று நீங்கள் நினைக்கலாம் ,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் !அனுப்பிய ஆன்மாக்களுக்கு, உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுப்பதே,மாயைதான் ,அதனால்தான் உடம்பு என்னும் வீட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது .உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் வெளியே செல்ல முடியாது !மறுபடியும் வேறு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும், இவை இயற்கையின் கட்டளையாகும்! சட்டமாகும்.

பெரு மாயைதான். உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுத்தது என்பதை ,வள்ளலார் சொல்வதைப் பாருங்கள்.!

*வள்ளலார் பாடல்* !

பெரு மாயை என்னும் ஒரு பெண் பிள்ளை நீ தான்
பெற்ற உடம்பு இது சாகாச் சுத்த உடம்பாக்கி

ஒரு ஞானத் திருஅமுதம் உண்டே ஓங்குகின்றேன் இனி நின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்

அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க

தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

என்னும் அருட்பா வாயிலாக உண்மையைப் போட்டு உடைக்கிறார்.இந்த உளவை இதுவரையில் எந்த அருளாளர்களும் கண்டுப்பிடிக்க முடிய வில்லை !,வள்ளலார் கண்டு பிடித்து உலக மக்களுக்கு வெளிப்படையாக காட்டி உள்ளார்கள் ! 

உடம்பை அழிக்காமல் ,
உடம்பின் அணுக்களை,சிந்தாமல்,சிதறாமல்,பின்னப் படுத்தாமல்  பிரித்து மாயை இடம் ஒப்படைக்க வேண்டும். --அனைத்தும் ஒப்படைத்த பின்தான் மாயை வெளியே அனுப்பும் ,இதைத்தான் வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றார்..பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றார். நித்திய பெருவாழ்வு என்றார் சுத்த பிரணவ ஞான தேகம் என்கிறார். கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார் .

இந்த உண்மையான ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் சமய ,மத வாதிகள்,ஒன்று கிடக்க ஒன்றை உளறிக் கொண்டு இருக்கிறார்கள் .
ஆன்மா அழியாது ,உடம்பு அழிந்துவிடும் ,
ஆன்மா பரலோகம்,
சொர்க்கம் ,வைகுண்டம் ,கைலாயம் போன்ற இடங்களில் போய் பிறப்பு இல்லாமல் வாழும் என்று பொய்யானக் கற்பனைக் கதைகளை கற்பனைகளாக கட்டி விட்டார்கள்.
ஆதலால் தான் சமய,மதங்களை நம்ப வேண்டாம் என்றார் வள்ளலார் .

சமய,மத வாதிகள் கண்டவர் விண்டதில்லை.விண்டவர் கண்டதில்லை ! என்ற பொய்யான கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து விட்டார்கள்.
வள்ளலார் நான் கண்டு கொண்டேன்,களித்தேன்,
களிக்கின்றேன் என்கிறார் .அவர் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி யெலாம் கண்டேன்

அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்

இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருட் செயலே !

நான் காணாதது ஒன்றும் இல்லை அனைத்தும் அறிந்து தெளிந்து கொண்டேன் ,அனைத்து இடர்களையும் தவிர்த்து ,அருள் ஒளியால் அழியாமல் இருக்கும்,அறிவு உருவமாக அடைந்தேன் .உடல் உயிர் உள்ளம் எலாம் தழைத்தேன் என்றும், உள்ளது உள்ளபடி யாவும் அறிந்து கொண்டேன் .என்றும் ,இத்தனையும் இறைவனுடைய அருட்செயலே காரண காரியமாகும் என்றும் திறம்பட திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறார் வள்ளலார் .   

இந்த உலகத்தில் வாழ்வது சிற்றின்பம் என்பதாகும் !,வெளியே சென்று,அருள் வெளியில் வாழ்வது பேரின்பமாகும் ! .பிறப்பு எடுத்து வாழ்வது சிற்றின்பம் !பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வது பேரின்பம் !

இந்த எளிய வழியைத் தெரிந்து கொள்ளாமல் பல பொய்யான கற்பனைக் கதைகளும் ,பொய்யான கற்பனை தெய்வங்களும்,--பொய்யான ஆன்மீக பெரியோர்களின் செய்திகளும்,,பொய்யான அருளாளர்களால்,பொய்யை  உலகில் விதைக்கப் பட்டு விட்டது .மனித உயிர்களை குழப்பி விட்டார்கள் .மனித உயிர்களும் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து பிறந்து,பிறந்து,இறந்து,இறந்து துன்பத்தில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

உண்மையான வழி தெரியாமல் அலைந்து,திரிந்து கொண்டு இருந்த மனித உயிர்களுக்கு உண்மையான வழியைக் காட்ட வந்தவர்தான் நமது --திருஅருட் பிரகாச வள்ளலார் என்பவராகும் அவர் காட்டிய பாதை நேர் பாதையாகும் !தூய்மையான பாதையும் !உண்மையான பாதையுமாகும் !  இந்த சிறைச்சாலையை விட்டு வெளியேற வேண்டுமானால் வள்ளலார் காட்டிய பாதை மட்டும்தான் உண்மையான {வழி } பாதையாகும்,

உண்மை உரைக்கின்றேன் தெரிந்து கொள்ளுங்கள்,
என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள்.!

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்

எண்மையினான் என நினையீர் எல்லாம் செய்ய வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக்

கண்மை தரும் மொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்று கூறி, நம்மை எல்லாம் அழைக்கின்றார் வள்ளலார் ! இவை கதைகளோ ,கற்பனைகளோ.பொழுது போக்கோ கிடையாது ,மனிதன் மனிதனாக வாழ்ந்து ,இறை நிலையை அடையும் உண்மை மார்க்கமாகும்,அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்.

வேறு எந்த குறுக்கு வழியிலும் வெளியேற முடியாது !--இந்த உண்மையான வழியைக் கண்டுப்  பிடித்துக் காட்டியவர்தான் --திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் .அவர் சென்ற நேர் பாதையை ,நமக்குக் காட்டி உள்ளார்கள் .நாமும் அந்த நேர் வழியைப் பின்பற்றி .இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியேறுவோம் .
என்றும் பேரின்ப வாழவு பெற்று பெருமகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வோம் !.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு