வெள்ளி, 23 டிசம்பர், 2016

நாம் யார் ? நான் யார்

நாம் யார் ? நான் யார் ?

சென்ற கட்டுரையில் பிறவிகளின் தோற்றம் மாற்றங்களைப் பார்த்தோம்.

எல்லாப் பிறப்புகளிலும் மனிதப் பிறப்பு உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதை அறிந்தோம்..

மனிதப் பிறப்பில் தான் நாம் யார் ? நான் யார் ?  என்பதைத் அறிந்து கொள்ளும் பேர் அறிவு என்னும் அருள் அறிவு உள்ளது.  நமக்கும் இந்த உடம்புக்கும்,இறைவனுக்கும்  உள்ள  தொடர்பு என்ன ? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த உடம்பு அழியக் கூடியது தானா ? இந்த உடம்பை அழியாமல் மாற்றிக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகளுக்குப் பதில் காண தேடியவர்கள் தான் ,நம்முடைய சித்தர்கள், முத்தர்கள், யோகிகள் என்பவர்கள்..அவர்களில் சிலர் இந்த உடம்பை அழியாமல் பாது காக்க முடியும் என்றும் அறிந்து உள்ளார்கள் .சிலர் உடம்பு அழிந்துவிடும்,ஆன்மா அழியாதது,மரணம் அடைந்த பின் ஆன்மா இறைவனுடன் கலந்து விடும் என்றும் சொல்லி விட்டு மரணம் அடைந்து உள்ளார்கள், மேலும்  மரணம் அடைந்தால் உடம்பு அழிந்துவிடும் ,ஆன்மா சொர்க்கத்திற்கும்,கைலாயத்திற்கும்,வைகுண்டத்திற்கும்,சென்று இறைவனுடன் கலந்து விடும் என்றும் பொய்யானக் கற்பனைக் கதைகளைக் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற கற்பனைக் கதைகளை இயற்றிய  அருளாளர்களும்,வேதாந்தம்,சித்தாந்தம்,    ,யோகாந்தம்,கலாந்தம்,நாதாந்தம்,போதாந்தம் .போன்ற ஆறு அந்தங்களையும்,அறிந்தவர்களும், அவற்றைக் ,கடந்தவர்களும்.,உண்மையான இறைவனை அறியமுடியாமல்,உண்மையான இறைவனை அறிய முடியாமல். வெளியிலே  கரைந்து போனார்கள்...ஏன் ? அவர்களால் .அறிய முடியவில்லை என்று திகைத்து மவுனமாக பிரம்மத்திலே நின்று விட்டார்கள் .
அவர்களுடைய நீண்ட நெடிய அருளாளர்கள் பரம்பரையில் தோன்றிய அருளாளர்களும் இறைவனைக் காண முடியவில்லை..

அவர்கள் அறிந்து,தெரிந்து,புரிந்து   கொள்ள முடியாத உண்மையான அருள் நெறியான  ''சுத்த சன்மார்க்க பேரின்ப  அருள் நெறியை'' உலக மக்களுக்கு தெரிவிக்கவே, திரு அருட்பிரகாச வள்ளலாரை,  உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  இந்த உலகிற்கு வருவிக்க உற்றார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்தை அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்து
திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே !......என்கின்றார்.

எல்லா கேள்விகளுக்கும்,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, பதில்  தெரியாமல் அலைந்து திரிந்த அருளாளர்களுக்கும்,  சித்தர்களுக்கும்,யோகிகளுக்கும்,சமயமத வாதிகளுக்கும்,.அறிவில் முதிர்ந்த உலகில் வாழ்ந்து கொண்டுள்ள மனிதர்களுக்கும் ,விடை காணவே ,,''திருஅருட்பா'' என்னும் அருள் நூலை எழுதி வைத்துள்ளார்  திருஅருட்பிரகாச வள்ளலார் .. .

இந்த பூத  உடலை,பூரண அருளால்  அழியாமல் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ,மேலும் .  ,மண்ணுக்கோ,தீயிக்கோ,தண்ணீர்க்கோ,காற்றுக்கோ ,ஆகாயத்திற்கோ ,எமனுக்கோ ,கிரகங்களுக்கோ ,பிணிகளுக்கோ, கொலை கருவிகளுக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களுக்கோ ,இன்னும் வேறு ஏதாவது வழிகளிலோ ,இந்த உடம்பை அழிக்க முடியாத நிலைகளில் வாழ முடியும் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிவித்தது ,மட்டும் அல்லாமல் ,தான் வாழ்ந்தும் காட்டி உள்ளார் வள்ளலார் .

மேலும் அதற்கு ஆதாரமான பாடலையும் பதிவு செய்து உள்ளார் ;--

காற்றாலே, புவியாலே, ககனம் அதனாலே,
கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே,பிணியாலே ,கொலைக் கருவியாலே ,
கோளாலே ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே ,
வேற்றாலே,எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து  அளித்தான் என்தனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

நம்முடைய உடம்பானது ,தூல உடம்பு,  சூக்கும உடம்பு ...காரண உடம்பு,என்று மூன்று பகுதிகளாகச் செயல் படுகின்றது..( இந்த மூன்று உடம்பு எப்படி ஆண்டவரால் கொடுக்கப் பட்டது என்பதை அடுத்தக் கட்டுரையில் விரிவாக சிந்திக்கலாம் )

இந்த உடம்பின் மூன்று பகுதிகளையும்,சுத்தப் படுத்தி,அவைகளை.அருள் ஒளியால. மாற்றி முத்தேக சித்தி பெறலாம் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பதைத்  தம் அருள் அனுபவத்தால் கண்டவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் .

தாம் பெற்ற முத்தேக சித்தி அனுபவத்தை ''திருஅருட்பா ஆறாம் திருமுறையில்,'' பா மாலைகளாகத் தொகுத்து.மிக அருமையாக விளக்கி  பதிவு செய்துள்ளார் ,மேலும் உரைநடைப் பகுதியிலும் பாமரர்களும் தெரிந்து கொள்ளும் படி மிக எளிய நடையில்,தமிழில் எழுதி வைத்து உள்ளார் .

இந்தப் பாடல்களையும்,உரைநடைப் பகுதிகளையும்,மேல் எழுந்த வாரியாகப் படிப்பவர்கள் அதன் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள முடியாது.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை வாழ்வில் கடைபிடித்து வருபவர்கள் தான் அதன் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக திருஅருட்பாப் பாடல்களுக்கும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

திருஅருட்பாப் பாடல்கள் வெறும் சமய மதப் பாடல்கள் அல்ல ...அவை திருஅருட்பிரகாச வள்ளலார் பெற்று இருக்கும் மரணம் இல்லாப் பெருவாழ்வை விளக்கும் அனுபவப் பாடல்களாகும்.

மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கும் ,அருள் அனுபவப் பேற்றுக்கும் ஒரு புதிய வழியைக் காட்டி இருக்கின்றார் வள்ளலார்.

சமய மதப் பாடல்கள் போல் தோன்றும் !

திருஅருட்பா பாடல்களைப் படிக்கும் போது பல பாடல்கள் சைவ சமயத்தின் உண்மையைக் கூறும் பாடல்கள் போல் தோன்றும்.ஆனால் வெறும் சைவ சமய விளக்கத்தக் கூறும் சந்தைப் பாடல்கள் அல்ல ! அவை எதோ மன சாந்திக்காகப் பாடிய பாடல்கள் அல்ல !

திருஅருட்பா பாடல்கள் அனைத்தும் தாம் பெற்ற பேரின்பத்தை எல்லா உலகமும் பெற வேண்டும் என்ற பெருங் கருணையினால் பாடப்பட்ட அருள் அனுபவப்  பாடல்களாகும்.

நடராஜர் பாட்டே நறும் பட்டு
ஞாலத்தார் பட்டு எல்லாம் வெறும் பட்டு !
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பட்டு எல்லாம் தெருப்பாட்டு !
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பட்டு எல்லாம் மருட்பாட்டு ! என்றும்

நாத நல்வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திருப் பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே

என்று பாடல்களின் தன்மையை விளக்கி உள்ளார் .

 எங்கும்  நீக்கமற நிறைந்த இறைவனைத் தம் உள்ளும் புறமும் கண்டு அதிலே தொய்ந்து அருளைப் பெற்று தம் உடல் முழுவதும் பரவி ,அகத்தில் இருந்து   அனகமாக விரிவு அடைந்து விளங்குவதையும்,அதனால் தம் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி அழியா முத்தேக சித்திப் பெற்று ,ஆண்டவர் அருளால் ஐந்து தொழில் வல்லபத்தையும் பெற்றுத் தரும் பாடல்களே .திருஅருட்பா பாடல்களாகும்.

சாதாரண தமிழ்ப் புலமை மட்டும் பெற்றவர்களும்,சமய நூல்களில் ஆராய்ச்சி உள்ளவர்களும்,திருஅருட்பா பாடல்களுக்கு உரை எழுதினால் அவை வெறும் சொற்களுக்கு எழுதிய உரையாகவே   இருக்குமேத் தவிர ,வள்ளலாரின் சுத்த சன்மார்க்க அனுபவத்தை விளக்கி கூறுவதாக இருக்காது .

சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ்வில் மேற்கொண்டு முத்தேக சித்தியில் நம்பிக்கை வைத்து ,அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் திருஅருட்பா பாடல்களைப் படித்தால்தான், திரு அருள் வல்லபத்தை புரிந்து கொள்ள முடியும்.

நான் நாற்பது ஆண்டுகளாக ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து வருவதால் ஓர் அளவு என்னால்  புரிந்து கொள்ள முடிகின்றது...இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும்,முதலில் நல்ல பக்குவமுள்ள,இந்திரிய ,கரண ஒழுக்கம் உள்ள, மனிதனாக வாழ்ந்து ,சுத்த சன்மார்க்க பொது நெறியை, தனி நெறியை,அருள் நெறியை  அவசியம் தெரிந்து,அறிந்து ,புரிந்து  கொண்டு,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ...

தொடரும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு