புதன், 22 டிசம்பர், 2021

ஆன்மா உயிர் உடம்பு கடவுள்!

 *ஆன்மா உயிர் உடம்பு ! கடவுள்!*


**உயிர்உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ! (அகவல்)*


*ஆன்மாக்களுக்கு  உயிர் உடம்பை கொடுத்த இறைவன்  உடம்பிற்குள்ளே  ஒளிஉருவமாக இயங்கிக்கொண்டு உள்ளார் என்பதை அறிந்து உணர்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து  உயிர்களுக்கு வரும் (இடையூறுகளை) ஆபத்துகளை நீக்க வேண்டும் என்பதை அறிந்தவனே உயர்ந்த அறிவுள்ள மனிதனாகும்.* 


*தன்உள் இயங்கும் உள் ஒளியான மெய்ப்பொருள் கடவுளை அறிந்து கொள்ளாமல் தொடர்பு கொள்ளாமல் கடவுளை வெளியில் தேடும் மூடர்கள் உலகம் எங்கும் நிறைந்து உள்ளார்கள். ஆதலால் ஒவ்வொருவரும்  தன்னை அறிந்து இன்பம் பெறவேண்டும் என்ற "தந்திரத்தை" உலகம் எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளல்பெருமான் என்பவராகும்*


உண்மை உரைத்த திருஅருட்பா!


*வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவில் உள்ள  உண்மையான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்* *கொள்கைகளையும் கருத்துக்களையும்   விளக்கங்களையும் சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் படித்து அறிந்து தெரிந்து  தெளிபெறாமல் தன்னுள் இயங்கும் இறைத் தன்மை உள்ள  ஆன்மாவைத் தொடர்பு கொள்ளாமல்.புறத்தில் மனம் போன போக்கெல்லாம் போய்கொண்டு உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.*


*வள்ளலார் பாடல்!*


உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்


செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லது ஒன்று என்று அறிந்தேன்


மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்


பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின்றேன் பொதுப் பாட்டே.! 


*எல்லா உயிர்களிலும் இறைவன் நடம்புரியும் இடம் என அறிந்தேன்  ஆதலால் எக்காலத்திலும் எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமலும். துன்பம் கொடுக்காமலும். அழிக்காமலும். வாழப்பழகிக் கொண்டேன் என்கிறார் வள்ளலார்*


 *மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள். இறைவன் வாழும் ஆலயமான உயிர்களை உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை உண்பதும் மிகவும் பெரிய பாவச்செயலாகும். மேலும் மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகும். உயிர்உள்ள உடம்பை  உயிர்வேறு உடம்பு வேறாக பிரிப்பது என்பது. இறைவன் வாழும் வீட்டிலிருந்து இறைவனை வெளியே  விலக்குவதற்கு ( துரத்துவதற்குசமம்) சமமாகும் ஆதலால் இறைவனை அறியுவும்   அருளைப்பெறவும் மரணத்தை வெல்லவும் வாய்ப்பு இல்லாமல்  ஆன்மாவின் உள் ஒளியாக விளங்கும் மெய்ப்பொருளை தெரிய வொட்டாமல் அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது*


*மெய்ப்பொருள் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்ம வடிவமாக தோன்றி ஆணின் விந்துவில்( சுக்கிலத்தில்)  கலந்து ஆகாசம் பிரகிருதி ஆன்மா என்னும் மூன்று விதமான பகுதிப் பேரணு உருவிற் பெருகி சுக்கிலத்தில் எண்ணில் அடங்கா திரவ அணுக்களின் கூட்டத்தின் சுழற்ச்சியின் மத்தியில் அமர்ந்து இரண்டு மாதங்களில் உயிர் என்னும் காரிய ஒளியை உண்டாக்கிகொள்கிறது*


*உயிர் இயக்கம் உண்டாகுகின்ற தருணத்தில் பெண்ணின் சோனிதவழியாக உள்ளே சென்று கருவறையில் தங்கிக் கொள்கிறது*

*பெண்ணின் சுக்கிலத்தில் உள்ள பிருதிவி அப்பு தேயு வாயு ஆகிய நான்கு வகையான அணுக்களும் ஆணிடம் இருந்தவந்த மூன்று வகையான அணுக்களும் இணைந்து சேர்ந்து பெண்ணின் 

 கருவறையில் ஆன்மா வாழ்வதற்கும் உயிர் இயங்குவதற்கும் வேண்டிய உடம்பு என்னும் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது* 


உயிர் கொடுத்ததால் ஆண் உருவை தந்தையாகவும் உடம்பு கொடுத்ததால் பெண்உருவை தாயாகவும் உலகில் சொல்லப்படுகிறது


*உபசாரத்தால் பெற்ற தந்தையின் சுக்கிலத்தில் தோன்றி தாயென்பாள் ஒருத்தியின் சோணித்த்திரளில் என்னுருவைச் சேர்க்கும் வரையில்  அப்போதப்போது என்னுருவைச் சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்து அருளினீர் இங்கனம் புரிந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம்  அறிவேன் எவ்வாறு கருதுவேன் என்னென்று சொல்வேன் என்கிறார்*


*ஆனாலும் உண்மை என்னவென்றால் தாய் தந்தை என்பவர்கள் உபகாரக் கருவிகளேத் தவிர உண்மையான தாய் தந்தையர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்*

 

வள்ளலார் பாடல்! 


கருவிற் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என்

கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்


உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவே என்

உணர்விற் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே


தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான

சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்


மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.!


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடம்பில் உயிரில் ஆன்மாவில் மற்றும் எங்கெல்லாம் கலந்து எவ்வாறு செயல்படுகிறார் எவ்வாறு சித்தி அளிக்கிறார் என்பதை மேலே உள்ள பாடலில் வள்ளலார் அனுபவித்து தெளிவாக விளக்கி உள்ளார்  பொறுமையாக படித்து உணரந்து அவற்றைத் தெரிந்து  கொள்ளவேண்டும்* 


*அவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவிற்கும் உயிருக்கும் உடம்பிற்கும் உற்ற துணையாக உள்ள ஆண்டவரை எவருடனும் ஈடு இணையாக வைத்து சொல்லமுடியாது.  இறுதிவரை நமக்கு துணையாக இருப்பவர் நமது அருட்பெரும் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதை உணர்ந்து. புறத்தில் அலைபாயும் மன த்தை அகத்தில் புருவமத்தியில் உள்ள சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்த வேண்டும்* 


*மனதும் ஆன்மாவில் உள்ள உள் ஒளியும் இடைவிடாது இணைவதால்  (புணர்வதால்) உணர்ச்சி பெருகி இன்பம் உண்டாகி அசுத்த உஷ்ணம் விலகி சுத்த உஷ்ணம் உண்டாக உண்டாக அந்த இன்பத்தின் உச்சகட்டமான   உணர்ச்சி மேலோங்கும் தருணத்தில் நன்நிதியான அருள்அமுதம் ஆன்மாவின் உள் இருந்து சுரக்கும். அவ் அருள்அமுதம் உயிர் உடம்பெல்லாம் கலந்து நிறைந்து  பூரணமாகி பொங்கி ததும்பி வேதித்து பூத உடம்பு பொன்னுடம்பாக மாற்றம் அடையும்*


பொன்னுடம்பு  எனக்குப் பொருந்திடும் பொருட்டா

என்னுளங் கலந்த என்றனி யன்பே! ( அகவல்) என்றும்


தன்னையே யெனக்குத் தந்து அருள் ஒளியால்

என்னை வேதித்த என்றனி யன்பே !( அகவல்) என்றும் 

 சொல்லுவார்.


மேலும் மிகவும் அழுத்தமாக நமக்கு சொல்லுகிறார் *வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


செறித்திடு *சிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்* சித்தி எல்லாம்

 இத்தினமே சத்தியம் சேர்ந் திடுமே.!* 


ஆன்மா உயிர் உடம்பு கடவுள் இணைந்து இயங்கும் நமது உடம்பை விட்டு உயிரைவிட்டு எதுவும் பிரியக்கூடாது. பிரியாமல் அருள்பெற்று வாழும் வாழ்க்கையே பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையாகும் மரணம் இல்லாப் பெருவாழ்க்கை என்பதாகும்.


எனவே சமய மதங்கள் தோற்றுவித்த பொய்யான கடவுள்கள் யாவும் பொய்யானது என்று அறிந்து தெரிந்து புரிந்து அவைகளை வணங்காமல் வழிபடாமல் பின் தொடராமல். இயற்கை உண்மை கடவுள் விளங்கும் ஆலயமான நமது உடம்பின்  சிற்சபையில்(புருவமத்தியில்) உள் ஒளியாக  நடம்புரியும் நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.


*திருந்துவோம் செயல்படுவோம் வெற்றி நிச்சயம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு