வியாழன், 29 ஏப்ரல், 2010

வள்ளலார் பெற்ற அருள் வாழ்வு

அருட்பெரும் ஜோதி

உலகத்திலிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் :-

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும், இரண்டும்படாத பூரண இன்பமானவர் என்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா பதங்களையும், எல்லா சத்திகளையும், எல்லா சத்தர்களையும், எல்லா கலைகளையும், எல்லா பொருள்களையும், எல்லா தத்துவங்களையும், எல்லா தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லா செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லா பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்:

1.தோற்றுவித்தல்
2.வாழ்வித்தல்
3.குற்றம் நீக்குவித்தல்
4.பக்குவம் வருவித்தல்
5.விளக்கஞ் செய்வித்தல்

மேலே கண்ட ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும், ஒன்றும் அல்லாதவர் என்றும், சர்வகாருண்யர் என்றும், சர்வ வல்லவர் என்றும், எல்லாம் உடையவராய் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமையாகிய ஒரே கடவுள் அருட்பெருஞ் ஜோதிய்ர் என்பதை சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே என்பதை உலக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதும், அறிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் காலத்தின் கட்டாயக் கடமையாகும் என்பதை திருவருட் பிரகாச வள்ளலார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

மேலே கண்ட கடவுளாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் என்பதை நாம் அறிந்துகொள்ளுவது அவசியத்திலும் அவசியமாகும்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ்வதே மனித ஜீவர்களாகிய அனைவருக்கும் தலையாய கடமையாகும்.

அப்படி வாழாமல் பல்வேறு கற்பனைகளால், பல்வேறு சமயங்களிலும், பல்வேறு மதங்களிலும், பல்வேறு மார்கங்களிலும், பல்வேறு இலச்சியங்களைக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகாலம் பிறந்து பிறந்து, இறந்து இறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண்போயினோம், வீண்போகின்றோம்.

ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து, இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் வாழவேண்டியது அருமையாகும்.
எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும் சுகத்தையும், பெரும் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு -- மேற்குறித்த உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தாமே திருவுளங்கொண்டு சுத்த சன்மார்கத்தின் முக்கிய இலச்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞான சாபையைத் தோற்றுவித்தார்.


சத்திய ஞான சபை


மேலே காட்டிய ஞான சபை வள்ளலார் சித்தி பெற்ற (மரணமில்லா பெருவாழ்வு) சித்தி வளாகம் என்னும் மேட்டுக்குப்பதிற்கு அடுத்த உத்தர ஞான சிதம்பரம் என்னும் ஞான சித்தி புரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் அருட்பெருஞ் ஜோதி திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம் என்னும் திருக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

இத்திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும் தயவுடைய நமது கருணையாங் கடவுளாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றாலும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி அருட்பெருஞ் ஜோதி சொரூபராய் அருட்பெருங் கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக்கொண்டு பொற்சபை, சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங்கொண்டு அருளரசாட்சித் திருமுடி பொறுத்து அருள்விளையாடல் செய்தருளினார்.

ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளினார்.

திருவருட் பிரகாச வள்ளலாரின் திருமேனியில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திருமேனி கலந்து அருள் நிலைப் பெற்றது. வள்ளலாரின் உடல் ஒளிவுடலாக மாறியது. மனித தேகத்தின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் அழியாத சுத்தம் அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் முத்தேக சித்தி தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும் கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும், கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருட்பிரகாச வள்ளலாருக்கு அருள்கொடையாக வழங்கினார்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு